விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் விரைவில் முடிவுக்கு வரப் போகிறதா?
ஏறத்தாழ முடிவு நெருங்குவதைப் போல தொடரின் காட்சிகள் ஒவ்வொன்றும் பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கின்றன.
கதையின் முக்கிய முடிச்சுகளாகக் கருதப்பட்ட ஒவ்வொன்றும் அவிழ்ந்துகொண்டிருக்கின்றன, மிக முக்கியமான சிலவற்றைத் தவிர.
இவ்வளவு காலமாக கண்ணம்மாவுக்குத் தெரியாமல் இருந்த ரகசியமான, பாரதி குடும்பத்தில் வளரும் பாரதியின் பிரியமான மகள் ஹேமா தன்னுடைய மகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியான முடிவுக்கே வந்துவிட்டார் கண்ணம்மா.
இதேபோல குழந்தை லட்சுமியும் கண்ணம்மாவின் மகள்தான் என்பது பாரதிக்கும் தெரிந்துபோய்விட்டது.
பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் எதுவும் நடைபெறவில்லை, கண்ணம்மாவைக் கடுப்பேற்ற நடிக்கிறார்கள் என்பதை அஞ்சலி தன் வளைகாப்பில் அம்பலப்படுத்திவிட்டார். தற்போதைய சூழல் கண்ணம்மாவுக்குத் தெளிவாகிவிட்டது.
இந்த நிலையில் வீட்டின் விருந்தில் பாரதியும் கண்ணம்மாவும் அருகருகே அமர்ந்து சாப்பிட, இரண்டு பக்கமும் இரு குழந்தைகளுமாக எதிரே வெண்பா அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்க, ப்ரமோவில் ஆத்திரத்தில் அப்பளத்தை நொறுக்கிக் கொண்டிருக்கிறார் வெண்பா.
தொடரில் சில விஷயங்களைத் தவிர ஏறத்தாழ எல்லாமும் எல்லாருக்கும் தெரியும் என்கிற நிலையேற்பட்டிருக்கிறது.
முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும் நிலையில் டி.என்.ஏ. பரிசோதனை என்ற நீண்ட நாள்களுக்கான நிரந்தரமான மிக முக்கியமான முடிச்சும் தற்போதைக்குக் கதையை நகர்த்திச் செல்ல அஞ்சலியின் உடல்நிலை தொடர்பான விஷயமும்தான் மிச்சமிருக்கின்றன.
தொடரில் நன்றாக நடிப்பதற்கான வாய்ப்பு மீண்டும் மீண்டும் கண்ணம்மாவுக்கே வாய்த்துக்கொண்டிருக்கிறது, யோசித்துப் பார்த்தால் பாரதியும் நன்றாகத்தான் நடிக்கிறார். மற்றபடி எல்லாருமே கலக்குகிறார்கள், அகில் பாத்திரத்தில் புதிதாக அறிமுகமானவர் உள்பட.
தினமும் ஒரு பரபரப்புக்குப் பார்வையாளர்களை எப்படியோ தயார் செய்துவிடுகிறார்கள், பாரதி கண்ணம்மா குழுவினர்.
இதே வேகத்தில் முடிச்சுகளையும் பராமரித்துக் கதையைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வார்களா? அல்லது விரைவில் முடிவுக்கு வந்துவிடுமா? பார்வையாளர்கள் காத்திருக்க வேண்டியதுதான்!