சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டிக்குள் நுழையும் கடைசிப் போட்டியாளர் யார்?

சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டிக்குள் நுழையவிருக்கும் கடைசிப் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
எலிமினேஷன் சுற்றில் பாடிய ஸ்ரீதர் சேனா
எலிமினேஷன் சுற்றில் பாடிய ஸ்ரீதர் சேனா

சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டிக்குள் நுழையவிருக்கும் கடைசிப் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

விஜய் டிவியில் 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 8 ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இந்த சீசனில், கரோனா காரணமாக ரசிகர்களிடம் வாக்கு கேட்டு அதனடிப்படையில் எலிமினேஷன் செய்யப்படாமல் நேரடியாக நடுவர்களே முடிவெடுத்து வந்தனர்.

20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு அனைவரது இதயத்தையும் வென்ற நாட்டுப்புற பாடகர் முத்து சிற்பி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

அரையிறுதியை எதிர்கொண்ட போட்டியாளர்களில் பரத், அனு ஆனந்த், அபிலாஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

ஐந்தாவது மற்றும் கடைசி இறுதிப் போட்டியாளரை தேர்வு செய்வதற்காக கடந்த வாரம் நடைபெற்ற வைல்ட் கார்ட் சுற்றில் மானசி, ஸ்ரீதர் சேனா, ஆதித்யா, அய்யனார், கானா சுதாகர், வ்ருஷா, அரவிந்த், வானதி, குமுதினி ஆகிய 9 பேர் போட்டியிட்டனர்.

இந்த சுற்றில் பாடிய ஸ்ரீதர் சேனா, மானசி, கானா சுதாகர், அய்யனார் தவிர பெரும்பாலானோருக்கு குறைகளையே நடுவர்கள் கூறினார்கள்.

இவர்களிலிருந்து ஒருவரை தேர்வு செய்யும் முடிவை ரசிகர்களிடம் மீண்டும் ஒப்படைந்துள்ளது சூப்பர் சிங்கர் குழு. ஒவ்வொரு ரசிகர்களும் 5 வாக்குகள் வீதம் செலுத்தி தங்களுக்கு பிடித்த போட்டியாளரை இறுதி போட்டிக்கு தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரத் தொடரில் இறுதி போட்டியாளரின் பெயர் அறிவிக்கப்படும்.

இவர்கள் 9 பேரில் ஸ்ரீதர் சேனாவுக்கும், மானசிக்கும் தான் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

சொல்லப்போனால், அரையிறுதி சுற்றுக்கு முன்பு ஸ்ரீதர் சேனாவை எலிமினேஷன் செய்தபோது நான்கு நடுவர்களில் ஒருவரான பாடகர் பென்னி டயாலின் சமூக ஊடக தளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். 

பின்னர், ரசிகர்களின் இத்தகைய கேள்விகள் மனதளவில் காயப்படுத்துவதாக கூறிய பென்னி டயால், அடுத்த சீசனிலிருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரப் போவதில்லை என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதர் சேனாவின் ரசிகர் பட்டாளத்தை வைத்துப் பார்க்கும் போது இறுதிப் போட்டிக்குள் மற்றவர்கள் நுழைவது சிறிது சந்தேகமே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com