பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது ஏன் என்ற ரசிகரின் கேள்விக்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பதிலளித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படுபவர் அமிதாப் பச்சன். இவர் தனது கருத்துக்கள் மற்றும் படைப்புகளை தினந்தோறும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவரது பதிவிற்கு பின்னூட்டமிட்ட ரசிகர் ஒருவர் அமிதாப் பச்சன் எதற்காக பான் மசாலா விளம்பரப் படங்களில் நடிக்கிறார் எனக் கேள்வி எழுப்பியுருந்தார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த நடிகர் அமிதாப் பச்சன், “ஒருவர் ஒரு தொழிலில் சிறப்பாக இருந்தால் ஏன் மற்ற தொழில்துறையுடன் இணைகிறார்கள் எனக் நினைக்கக் கூடாது. தொழில் என வந்த பிறகு எங்களது வியாபாரத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஆமாம். நான் பான் மசாலா விளம்பரத்திலிருந்து பணம் பெறுகிறேன். அதில் பணிபுரியும் பலர் அதன்மூலம் வேலைவாய்ப்பும், சம்பளமும் பெறுகிறார்கள். தற்போது நான் இதனை செய்திருக்கக் கூடாது என நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் கருத்தை மதிக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.