சிம்புவின் 'வல்லவன்' பட நடிகை கணவனால் கைவிடப்பட்டு வாடகைக் கார் ஓட்டும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக நடிகர் காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.
சிம்பு கதாநாயகனாக நடித்து கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வல்லவன். சிம்பு கதை, திரைக்கதை எழுதி இயக்கியருந்த இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் நயன்தாரா, ரீமா சென், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் பள்ளி சீறுடையில் இருக்கும் பெண் ஒருவர் மீது சந்தானம் பேப்பர் ஒன்றை விட்டெறிந்து அந்தப் பெண்ணின் தோற்றத்தை விமரிசிப்பார். அந்தப் பெண் தற்போது வறுமையின் காரணமாக வாடகை கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து பிரபல நடிகர் காதல் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், வல்லவன் படத்தில் பள்ளி காட்சியில் சந்தானம் தாள் ஒன்றை எறிய அதை எடுக்கும் மாணவி, என்னா வெறும் பேப்பரை தூக்கி எறியுற, எதாச்சும் எழுதிக்குடு என்று அதகளம் பண்ணியிருக்கும். சமீபத்தில் நான் கதை நாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் ஒரு காட்சியில் நடிக்க கொடைக்கானல் வந்திருந்தாள். எனக்கு அடையாளமே தெரியவில்லை.
இன்னும் நன்றாக நடிக்கும் அவளுக்கு ஏனோ சரியான வாய்ப்புகள் அமையாமல் காதல் கல்யாணம் பண்ணியவளுக்கு இரண்டு பிள்ளைகள். இப்போது கணவனால் கைவிடப்பட்டு, வாடகைக் கார் ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். எல்லா கார்களையும் அனாசயமாக ஓட்டுகிறாள் முடிந்தவரை வாய்ப்புகள் வந்தால் சொல்வதாக சொல்லியிருக்கிறேன். வாயப்புகள் அமமையட்டும் லக்ஷ்மி'' என்று குறிப்பிட்டுள்ளார்.