இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஆண்டு இதே நாளில் நம்மை விட்டு பிரிந்தார். அவர் இறந்து ஒரு வருடம் நிறைவடைந்ததையடுத்து திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இளையராஜா கலந்துகொண்டார். அப்போது தனக்கும், இளையராஜாவுக்குமான நட்பு குறித்து உருக்கமாக பேசினார். விழாவில் இளையராஜா பேசியதாவது, பாலுவுக்கும், எனக்குமான நட்பு எந்த மாதிரி என்பது உலகுக்கே தெரிந்த விஷயம். ரொம்ப சர்வசாதாரணமாகப் பழகக் கூடிய நண்பர். அந்தக் காலத்திலேயே நான் ஆர்மோனியத்துடன் உட்கார்ந்திருந்தேன் என்றால் பக்கத்தில் பாலு பாடுவார்.
இசையமைப்பாளராக ஆன பின்பு கூட எங்களுடைய நட்பு தொடர்ந்தது. இருவருடைய உழைப்பினால் தான் பல பாடல்கள் உங்களை வந்து சேர்ந்துள்ளன. நீ இப்படிப் பாடு, அப்படிப் பாடு, என்பது என்னுடைய கற்பனை. அது வேறு விஷயம். பாடல் பதிவின்போது அந்த நட்பு இடையில் வரவே வராது. நட்பு வேறு, தொழில் வேறு.
பல மேடைகளில் என்னைப் பற்றி நிறைய புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் புகழ்ந்து எனக்கொன்றும் ஆகப் போவதில்லை. நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து அவருக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனால் அவர் எனக்கு மனதிற்குள் என்ன இடம் கொடுத்திருக்கிறார் என்பது முக்கியம்.
மருத்துவமனையில் எஸ்.பி.பி அபாயக் கட்டத்தில் இருந்தார். சமூக வலைதளங்களல் அவர் மீண்டு வர வேண்டி பலரும் பிரார்த்தனை செய்தார்கள். நான், ''பாலு உனக்காக காத்திருக்கிறேன் சீக்கிரம் வா'' என்று விடியோ வெளியிட்டேன். அதனை எஸ்.பி.பிக்கு நினைவு வந்தபோது எஸ்.பி.சரண் போட்டுக் காட்டியிருக்கிறார். உடனே கண் கலங்கி போனை வாங்கி எனக்கு முத்தம் கொடுத்திருக்கிறார்.
யாரையாவது பார்க்க வேண்டுமா என்று கேட்டதற்கு, ராஜாவை வரச் சொல்லு என்று சொல்லியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தை போதாதா. அவருடைய மனதில் எனக்கு என்ன இடம் கொடுத்திருந்தார் என்றால், என்னை பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கும். அந்த மாதிரியான நட்பு எங்களுடையது. என்னுடைய ஒவ்வொரு மேடையிலும் அவரும் இருக்கிறார் என்பதுதான் சத்தியம். என்று பேசினார்.