விஜய் குறித்து நான் பேசியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.
தனது பெயரைப் பயன்படுத்தி பொதுக்கூட்டங்களை நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இது தொடர்பான பதில் மனுவை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று (செப்.27) தாக்கல் செய்தார். அதில் விஜய் மக்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை என் நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தான் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்ததாக கூறினார்.
மேலும் அந்த விடியோவில் அவர் பேசியதாவது, '' நானும் என் மனைவி ஷோபாவும் விஜய்யின் வீட்டின் முன் காரில் காத்திருந்ததாகவும், ஷோபாவை மட்டுமே உள்ளே வர அனுமதித்ததாகவும் அதனால் நாங்கள் இருவரும் திரும்பி வந்துவிட்டதாகவும் தகவல் இடம்பெற்றிருக்கிறது. அது தவறான செய்தி.
எனக்கும் விஜய்க்கும் பிரச்னை இருப்பது உண்மை தான். ஆனால் விஜய்க்கும் அவரது அம்மாவுக்கும் உறவு நன்றாக உள்ளது. அதனால் அவரது அம்மாவை வெளியில் காத்திருக்க வைத்திருந்ததாக வெளியான தகவல் தவறு என்று விளக்கமளித்தார்.