பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கக் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதி
உள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கக் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கடிதம் எழுதியுள்ளார். அதில், மனிதநேயப் பணிகளிலும், பேரிடர் கால மீட்புப் பணிகளிலும் தம் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் முன்னணியில் நிற்கும் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப் படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அமைதியின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே முதல்வர் பீஸ்ட் திரைப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.