தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு இளையராஜா பாடல் மூலம் பதிலளிததுள்ளார்.
இளையராஜா சமீபத்தில் மோடியும் அம்பேத்கரும் என்ற நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார். அதில், ''சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முத்தலாக் தடை போன்ற அவரது பல்வேறு சமூகப் பாதுகாகப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும், மோடியும் பெரும் கனவு கண்டவர்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா என சர்ச்சை உருவானது. பலரும் இளையராஜாவை விமர்சித்து கருத்து தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இளையராஜாவை தொலைபேசிவாயிலாக அழைத்து தன்னைப் பற்றிய நூலுக்கு முன்னுரை எழுதியதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்த நிலையில் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தரி கண்ணால் சேதி பாடலை தன் குரலில் பாடி பகிர்ந்துள்ளார். அந்தப் பாடல் வரிகளை சற்று மாற்றிப்பாடியுள்ளார்.
அவரது பாடலில், ''நான் உன்னை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே. இந்த நாள் நன்னாள் என பாடு. என்னதான் இன்னும் உண்டு கூறு'' என்ற வரிகள் இடம்பெற்றிருந்தது. தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இளையராஜாவின் பாடல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.