அரசியல் பின்னணி கொண்ட கும்பலால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா 2020-ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், அவருடைய கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு, பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார் ஹேம்நாத். அந்த மனுவில் அரசியல் பின்னணி கொண்ட கும்பலால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. போன் வழியாக மிரட்டல்கள் வருகின்றன. இதனால் தனக்குக் காவல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.