அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்த புஷ்பா தி ரைஸ் திரைப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா தி ரூல் என்ற பெயரல் உருவாகவிருக்கிறது.
முதல் பாகத்தின் இறுதியில் போலீஸாக பகத் பாசில் மிரட்டினார். இரண்டாம் பாகத்தில் அவரது கதாப்பாத்திரம் இன்னும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் பாகத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறாராம்.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியான படங்களான பேட்ட, உப்பெனா, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. இதனால் அவர் வில்லனாக நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதன் காரணமாக அவரை புஷ்பா படத்தில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பகத் பாசிலும் புஷ்பா இரண்டாம் பாகத்தில் தனது கதாப்பாத்திரத்திலேயே தொடர்வார் என்று கூறப்படுகிறது. முன்னதாக புஷ்பா முதல் பாகத்தில் விஜய் சேதுபதிதான் பகத் பாசிலின் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவரால் நடிக்க முடியமால் போக அவருக்கு பதில் பகத் அந்த வேடத்தை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.