தெலுங்கு தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பால் ரஜினி, அஜித், விஜய் படங்களின் படப்பிடிப்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2, புஷ்பா படங்களைத் தவிர தெலுங்கில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் நட்டத்தை சந்தித்துவருவதாக கூறப்படுகிறது. மக்கள் திரையரங்குகளுக்கு வர ஆர்வம் காட்டாததே இதற்கு காரணம்.
படங்கள் திரையரங்குகளில் வெளியான 3 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாவதுதான் இந்த பிரச்னைக்கு காரணம் என தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். இதனால் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 10 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரைப்படங்களின் தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறுத்திவைக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மற்றொருபுறம் 100 கோடி, 200 கோடி என கணக்கு காட்ட டிக்கெட்டுகளின் விலையை ரூ.1000, ரூ.2000 என அதிகப்படுத்தி விற்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் வாரிசு படம் ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. அஜித்தின் ஏகே 61 படமும், ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படமும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் மேற்சொன்ன படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்படலாம். குறிப்பாக தனுஷின் வாத்தி, விஜய்யின் வாரிசு, சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய படங்களை தயாரிப்பது தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.