சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பாக் தயாரித்துள்ள டான் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸுடன் இணைந்து லைக்கா நிறுவனமும் தயாரித்திருந்தது. டான் படம் முதலில் வருகிற மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான ஆர்ஆர்ஆர் படமும் வருகிற மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் சுவாரசியம் என்னவென்றால் ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழகத்தில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. ஒரே நாளில் 2 படங்களை எப்படி லைக்கா நிறுவனம் வெளியிடும் என்ற கேள்வி ரசிகர்களிடையே உருவானது. ஆர்ஆர்ஆர் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் இயக்குநர் ராஜமௌலி, ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோருடன் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு படம் குறித்து பேசினார்.
இதையும் படிக்க | அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை: குவியும் வாழ்த்து
இதனிடையே ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25 ஆம் தேதி வெளியாவதால் டான் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது படக்குழு அதனை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''இந்திய திரை உலகின் தன்னிகரில்லா இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உச்ச நட்சத்திரங்களான ஜுனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் மார்ச் 25 ஆம் தேதி ஆர்ஆர்ஆர் எனும் பிரம்மாண்டமான திரைப்படம் உலக அளவில் வெளிவரவிருக்கிறது.
லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்.கே.புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்து, நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் அதே மார்ச் 25 ஆம் தேதி வெளிவருவதாக முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாவதை கருத்தில் கொண்டு, தனது டான் வெளியீட்டுக்கு தேதியை மாற்றுவதற்கு ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயனுக்கு, இவ்விரு படங்களையும் கண்டு களித்து கொண்டாடப்போகும் உங்களுக்கும் எங்களின் பெரும் மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். டான் வருகின்ற மே 13 ஆம் தேதி உலகமெங்கும்''
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.