நடிகை கங்கனா ரணாவத் தன்னைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக கடந்த 2020 ஆம் ஆண்டு பாடலாசிரியர் ஜாவித் அக்தர் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரவாதிலிருந்து தனக்கு நிரந்தர விலக்கு அளிக்கும்படி நீதிமன்றத்தில் கங்கனா மனு தாக்கல் செய்தார். நடிகை கங்கனாவின் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை கடுமையாக சாடியது.
இதுகுறித்து நீதிபதி ஆர்ஆர் கான் தெரிவித்ததாவது, ''கங்கனா ஒரு பிரபல நடிகையாக இருக்கலாம். ஆனால் இந்த வழக்கில் அவர் குற்றம்சாட்டப்பட்டவர். அவர் நிரந்தரமான விலக்கு கோரமுடியாது. அவர் ஜாமீன் நிபந்தனைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
மேலும் அவருக்கு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தால் புகார்தாரர் கடுமையான பாரபட்சத்துக்கு ஆளாக நேரிடும். வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இருக்காது'' என்றும் குறிப்பிட்டார்.