இரவின் நிழல் பாடல் வெளியீட்டு விழாவின்போது மைக்கை தூக்கி எறிந்த சம்பவத்திற்கு இயக்குநர் பார்த்திபன் மன்னிப்புக் கேட்டார்.
ஒத்த செருப்பு திரைப்படத்துக்குப் பிறகு, பார்த்திபன் இயக்கியிருக்கும் திரைப்படம் இரவின் நிழல். இதில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையும் படிக்க- ஆர். பார்த்திபனின் இரவின் நிழல் பட டீசர் வெளியானது
விழாவில் இயக்குநர்கள் சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகி ஷோபனா சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு, படத்தின் முதல் பாடலை வெளியிட்டார். விழாவில் இயக்குநர் பார்த்திபன் பேசுகையில் அவருடைய மைக் திடீரென சில நொடிகள் வேலை செய்யவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர் மேடையில் இருந்து மைக்கை வீசி எறிந்தார். பார்த்திபனின் இந்த செயலால் விழா மேடையில் இருந்த ஏ.ஆர். ரஹ்மான் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிய பார்த்திபன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பும் கோரினார். இந்நிகழ்வால் விழா மேடையில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.
இதற்கடுத்து சில யூடியூப் சேனல்கள் ‘மைக்கை தூக்கியெறிந்த பார்த்திபன்’ என்கிற பெயரில் அந்த விடியோவை வெளியிட்டனர்.
இந்நிலையில், இயக்குநர் பார்த்திபன் ‘மைக்கை தூங்கியெறிந்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானிடம் மன்னிப்புக் கேட்டேன். அந்த நிகழ்வு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. வைரலாவதற்காக அந்தச் செயலைச் செய்யவில்லை’ என விடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.