ஹிந்தி நல்ல மொழி, அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என நடிகையும் இயக்குநருமான சுஹாசினி கூறியுள்ளார்.
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சுஹாசினி பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
மொழிப் பிரச்னை குறித்து சுஹாசினியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்ததாவது:
என்னிடம் கேட்கிறீர்களே. எங்களுக்கு எல்லா மொழிகளும் தெரிந்தே ஆகவேண்டும். எல்லா மொழிகளையும் மதித்தே ஆகவேண்டும். எல்லா மொழிகளையும் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். எல்லோரும் எல்லா மொழிகளையும் சமமாக நினைக்கவேண்டும் என்றார்.
ஹிந்தி தேசிய மொழியா என்கிற சர்ச்சை குறித்த கேள்விக்கு சுஹாசினி பதில் அளித்ததாவது:
ஹிந்தி நல்ல மொழி. கற்றுக்கொள்ள வேண்டும். ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அவர்களுடன் பேசவேண்டும் என்றால் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல தமிழர்களும் நல்லவர்கள். என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் பதில் சொல்லத் தெரியவில்லை. எவ்வளவு மொழிகள் தெரிகிறதோ அவ்வளவு சந்தோஷம் எனக்கு. பிரெஞ்சு கூட எனக்குப் பிடிக்கும். அதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை உள்ளது. அதற்காக நான் தமிழ் இல்லை என்று ஆகிவிடுமா, அதுபோலத்தான் என்றார்.