காந்தாரா திரைப்படத்தின் வசூல் விக்ரம் படத்தின் வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
தொன்மங்களையும் அதிரடியான சண்டைக் காட்சிகளையும் இணைத்து நல்ல திரைப்படமாக ரிஷப் ஷெட்டி மாற்றியிருக்கிறார்.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ரூ.16 கோடியில் தயாரான இப்படம் கன்னடத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காந்தாரா திரைப்படத்தின் மற்ற மொழி உள்பட ஒட்டுமொத்த வசூல் ரூ.300 கோடியை நெருங்கி வருவதாகவும் இன்னும் சில நாள்களில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ரூ.400 கோடி வசூலைப் பெற்ற விக்ரம் திரைப்படத்தின் வசூலை நெருங்கிவிடும் என்றும் சினிமா விமர்கர்கள் கணித்துள்ளனர்.
சற்றும் எதிர்பாராத விதமாக ‘காந்தாரா’ இத்தனை பெரிய வெற்றியைப் பெற்றது கன்னட திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய சினிமா வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.