நடிகர் விஷால் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. சிம்பு சரியாக ஒத்துழைக்காததால்தான் இந்தப் படம் தோல்வியைடந்ததாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டியது அனைவரும் அறிந்ததே.
அதனையடுத்து தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.
'மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: யோகி பாபு, சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ டிரைலர் வெளியீடு
இந்நிலையில், நடிகர் விஷால் கடந்த சில நாள்களுக்கு முன் காசிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். நண்பர்களுடன் இணைந்து காசியின் வீதிகளில் கோஷம் எழுப்பியவாறு அவர் சென்ற விடியோ வைரலானது.
அதனைத் தொடர்ந்து, விஷால் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘அன்புள்ள மோடிஜி, நான் காசிக்கு சென்று சிறப்பான தரிசனத்தைப் பெற்றதுடன் கங்கையின் புனித நீரைத் தொட்டேன். கோயிலைப் புதுப்பித்து அதை இன்னும் சிறப்பாக மாற்றியதுடன் எவரும் எளிதாக வரும்படி செய்ததற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என பதிவிட்டிருந்தார்.
அதைப் பகிர்ந்த பிரதமர் மோடி ‘காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி’ என பதிலளித்துள்ளார்.