மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தை இளையராஜா பார்த்து மகிழ்ந்ததாக நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக சாதனை படைத்துவருகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் வசூலித்த படங்களின் வரிசையில் 4வது இடத்தில் பொன்னியின் செல்வன் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் விக்ரம் படத்தின் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என திரையரங்க உரிமையாளர்களின் கணிப்பாக இருக்கிறது.
சமீபத்தில் படம் பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரைப் பாராட்டினார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை இசையமைப்பாளர் இளையராஜா பார்த்துள்ளார். இதனை நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, மேஸ்ட்ரோ எங்களது படம் பார்த்தது பெருமையான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். இளையராஜா படம் பார்த்து என்ன சொன்னார் என்பதை சுஹாசினி பதிவிடவில்லை.
கடந்த 1989 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்க முடிவுசெய்த கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கவிருப்பதாகவும் இளையராஜா இசையமைக்கவிருப்பதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் தான் கேட்டால் இளையராஜா பிரத்யேகமாக இசையமைப்பார் என்றும் கமல் அப்போது நம்பிக்கை தெரிவித்திருந்தார்.