யுவன் ஷங்கர் ராஜா நேற்று (ஆகஸ்ட் 31) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துதெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாக இளையராஜா தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்த வாழ்த்துசெய்தியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ''ஒரு காலகட்டத்தில் ஆழியாறு அணைப் பகுதியில் ஒருசில நாட்கள் தங்கியிருந்து 4, 5 படங்களுக்கு இசையமைப்பது வழக்கம். அப்படியொருமுறை தயாரிப்பாளர் கே.ஆர்.ஜியும் இயக்குநர் மகேந்திரனும் என்னை ஆழியாறுக்கு அழைத்துசென்றார்கள். அப்பொழுது என் குழுவினரோடு அங்கு சென்றேன்.
தயாரிப்பாளர் கேஆர்ஜி கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவருவார். ஒருமுறை அவர் வீட்டுக்கு சென்று திரும்பியபோது உனக்கு பையன் பிறந்திருக்கிறான் என்றார். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் மனைவி பிரசவிக்கும் தருணத்தில்கூட இசையமைத்துக்கொண்டிருந்திருக்கிறேனே தவிர அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவில்லை. என் மனைவியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
குழந்தை பிறந்துவிட்டதாக கேஆர்ஜி சொன்னபோது மகிழ்ச்சியில் இசையமைத்த பாடல் தான் செனோரீட்டா என்ற பாடல். படத்தின் பெயர் ஜானி. நடிகர் ரஜினிகாந்த் படம். இயக்குநர் மகேந்திரன். அப்போது பிறந்தவர் யுவன். யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.