பொன்னியின் செல்வன் குறித்து கார்த்தியின் பதிவு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வன் பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை (செப்டம்பர் 6) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவிருக்கின்றனர். பொன்னியின் செல்வன் 5 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் கலந்துகொண்டால் தேசிய அளவில் பேசப்படும் நிகழ்வாக இருக்கும், பொன்னியின் செல்வன் படத்துக்கு நல்ல விளம்பரமாக அமையும்.
இதையும் படிக்க | ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தில் இணைந்த மலையாள நடிகை!
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயசித்ரா செம்பியன் மாதேவி வேடத்திலும், ரகுமான் மதுராந்தகன் வேடத்திலும் நடித்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நம்பியாக ஜெயராம் நடித்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வந்தியத்தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா? உம்மை மட்டும் பிளாக் செய்யவும் முடியவில்லை. ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை. சரியான தொல்லையப்பா என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் - நம்பி கதாப்பத்திரத்தின் உரையாடல்கள் சுவாரசியமாக இருக்கும். அது படத்திலும் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பை கார்த்தியின் பதிவு உணர்த்துகிறது.