ஹவுஸ் ஓனர்: விமர்சனம்

சென்னைப் பெருவெள்ளத்தின் ஒரு துளி கோர முகம் இந்த ஹவுஸ் ஓனர்!
ஹவுஸ் ஓனர்: விமர்சனம்


சென்னைப் பெருவெள்ளத்தின் ஒரு துளி கோர முகம் இந்த ஹவுஸ் ஓனர்!
 கிஷோர், ஸ்ரீரஞ்சனி இருவரும் தனியே வாழும் தம்பதி. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கிஷோருக்கு அல்ஸைமர் நோய் பாதிப்பு. காதல், கல்யாணம் என கடந்த கால நினைவுகளில் மட்டுமே திளைக்கிற மனிதர்.  மனைவியின் அன்பையும், பாச பரிதவிப்பையும் புரிந்துகொள்ள முடியாத சூழல். தற்போது என்ன நடக்கிறது... கூடவே இருப்பது யார்... என்றே தெரியாத அளவுக்கு நோயின் தாக்குதல்.

 2015-ஆம் ஆண்டு சென்னைவாசிகளை அச்சுறுத்திய அந்தப் பெருவெள்ளத்தின் ஒரு நாள்... உதிரமாய், கண்ணீராய் வாழ்க்கையை மாற்றிவிட்ட அந்த நாளில் வீட்டுக்குள் இருந்து வெளியேற முடியாத, கிஷோர் - ஸ்ரீரஞ்சனி தம்பதிக்கு நடந்தது என்ன என்பதை முதுகுத் தண்டு ஜில்லிட விளக்குகிறது கதை.

  பேய், அமானுஷ்யம் என எதுவும் இல்லாமல், தண்ணீர்த் துளிகள் மூலமாகவே த்ரில் கூட்டும் திரைக்கதை அமைத்து அழுத்த முத்திரை பதிக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். மிக இயல்பாக கிஷோர் - ஸ்ரீரஞ்சனி காதல், கல்யாண நினைவுகளும்  அடுத்த நொடி என்ன நடக்கும் என்கிற சஸ்பென்ஸ் முடிச்சுமாக முதல்பாதி அசத்துகிறது.  ஏதோ நடக்க இருக்கும் போது எல்லாம்  குறிப்பு உணர்த்த வரும் பாம்பு  ப்ளஸ் தண்ணீர் காம்பினேஷன் ஐடியா... அபாரம்!
 கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவில் திரையில் விரியும் காட்சிகள்தான் படத்தின் முதல் ஹீரோ.  அன்பை, அவஸ்தையை, பிரியத்தை, பிரிவை, நினைவை அள்ளி அள்ளி இறைத்தபடி பெய்கிற மழையைப் படம் பிடித்த விதத்தில் அத்தனை ஈரம்.

இமையில் பட்டுத் தெறிக்கும் ஒரு துளியைப் போல, ஜன்னலில் நடனமாடும் குல்மொஹரைப் போல, அறை எல்லாம் தீற்றிக் கொள்ளும் சேற்றைப் போல, வெளியே எட்டிப் பார்த்தால் கொஞ்ச நேரத்தில் தலையில் சொட்டும் ஈரம் போல, குடையில் கொஞ்சம் பள்ளம் பறித்து முட்டியை நனைக்கும் நீரைப் போல திரையில் எங்கெங்கும் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறது கேமரா கோணங்கள். 


நைச்சியமாக நழுவுவதும் ஆக்ரோஷமாகப் பாய்வதுமாக ஒரு கதாபாத்திரமாகவே மாறி பரவசப்படுத்தி திகிலூட்டி மிரட்டுகிறது மழைக் காட்சிகள். காதல் மயக்கமும், ராணுவ புன்னகையுமாக கிஷோர் அட்டகாசப்படுத்துகிறார். ராணுவ அதிகாரியின் விறைப்பில் அட்டகாசமான உடல்மொழி வேறுபாடுகள். அன்பு, கருணை, ஈரம், காதல் என காட்சிக்கு காட்சி  ததும்பி நிற்கிறார்.

எந்த பிரமிப்பும், ஏக்கமும் இல்லை. யார் குறித்த அச்சமும் இல்லை. மழையா... எங்கே...? என அப்பாவியாகக் கேட்கும் போதெல்லாம், கிஷோரின் அறியாமை கோபத்தை வரவழைக்கிறது. டி.வி.யில் வானிலை அறிவிப்பாளரைப் பார்த்து இவன் என்ன சொல்றான்... மழை எங்கே...? என கடக்கும்போது, கிஷோரின் பதற்றம் நமக்கும் உதறலைக் கொடுக்கிறது. மழைக் காலத்துக்கான உணவை கோடையில் சுமந்து திரியும் எறும்பைப் போல், கடந்த கால காதலை, அன்பை, நேசத்தை சுமந்து திரியும் கிஷோரின் கண்களில் அத்தனை ஏக்கம். 

கண்களிலேயே காதலை சுமக்கும் ஸ்ரீரஞ்சனிக்கு மைல்கல் சினிமா இது. ராதாவா... அப்ப நான் யாரு...? என இயல்பாக கணவனை கடக்கும் ஸ்ரீரஞ்சனி, அதே இயல்புடன் நடிக்கவும் செய்கிறார். பெரு வெள்ளத்தை கடக்க முடியாத பெண்ணாக, அவர் காட்டும் பாவனைகள் அத்தனை அபாரம்.

காதல், கல்யாணம் என கிஷோர் - ஸ்ரீரஞ்சனியின்  முந்தைய பாதிகளில் பசங்க கிஷோர் - லவ்லின். புது மணப்பெண் எனத் தோன்றும் ஃபிரேம்களில் எல்லாம் கச்சிதக் கவிதை புதுமுகம் லவ்லின். டிவியில் ஒளிபரப்பாகும் மழைச் செய்திகளை கடக்கும் போதெல்லாம், நமக்கும் அந்த பெருவெள்ளத்தின் ஞாபகங்கள் வந்து போவது க்ளாஸ்.

 ஜிப்ரானின் பின்னணி இசை அவ்வளவு நேர்த்தி. படத்துக்கு எக்ஸ்ட்ரா டெரர் ஏற்றுகிறது. கண் எதிரே வானத்தில் நூல் பிடித்த மாதிரி மழை நெருங்கி வருவதைக் காட்டுவதில் இசைக்கத் தொடங்கி, வீட்டுக்குள் சொட சொடவென நமக்கு முன்னும் பின்னும் கொட்டிச் சூழும் மழையை மௌனத்தால் சூழ்கிறது ஜிப்ரானின் இசை.

கிறுகிறுவென்று திகில் கூட்டும் திரைக்கதை இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே சுணங்கி அடங்கிப் போவதுதான் ஏமாற்றம். பெரும் துயரம் நடக்க போகிறது என்று கதை தடதடக்கும் போதெல்லாம் காதல் ஃப்ளாஷ்பேக்கை ரொம்ம்ம்பவே நிதானமாக சொல்கிறார்கள். மழை நீர் சூழ்கிறது என்ற உண்மை தெரிந்தவுடனேயே படம் முடிந்துவிடுகிறதே!  

நேர்த்தியான கதை சொல்லும் பாணியால் தமிழ் சினிமாவின் நம்பிக்கை பெண் இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடிக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com