மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், இந்தியில் வெளியான 'பிங்க்' படத்தை தமிழில் 'நேர் கொண்ட பார்வை' என்ற பெயரில் தயாரித்து வருகிறார். இதில் அஜித், வித்யா பாலன், சிராத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் நடிக்க கல்கி கோச்லின் ஒப்பந்தமாகியுள்ளார்.
புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழை சரளமாக பேசும் கல்கி கோச்லின், இப்படத்தின் நடன காட்சிக்கான பாடலை மலேசிய ராப் பாடகர் யுனோஹூவுடன் சேர்ந்து பாடியுள்ளார். ஏற்கெனவே இவர் அண்மையில் வெளியான 'கல்லிபாய்' என்ற படத்திலும் இசையமைப்பாளராக நடித்துள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா நடித்த 'கள்வனின் காதலி', 'மச்சக்காரன்', 'நந்தி' ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன், தற்போது இயக்கும் 'உயர்ந்த மனிதன்' படத்தில் முதன்முறையாக தமிழில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
1988-ஆம் ஆண்டு வெளியான 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்திப் படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்த ரம்யா கிருஷ்ணன், 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'உயர்ந்த மனிதன்' படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார். இந்தியிலும் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு தேரா யார் ஹூன் மெய்ன்' என பெயரிட்டுள்ளனர்.
'லஸ்ட் ஸ்டோரி' படத்திற்குப் பின் 'கலங்' என்ற படத்தில் வருண்தேவனுடன் ஒரு பாடலுக்கான சிறப்பு காட்சியில் நடித்துள்ள கியாரா அத்வானி, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான 'காஞ்சனா' இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் முதன்முறையாக ஜோடியாக நடிக்கிறார். 'லட்சுமி' என்ற பெயரில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது இதுவரை முடிவாக வில்லையாம்.