நடிகை ஸ்ரீதேவி இறந்து ஒரு வருடம் முடிந்துவிட்ட நிலையில், அவரது நினைவு நாள் நேற்று (பிப்ரவரி 24) அனுசரிக்கப்பட்டது. சிவகாசியில் ஆகஸ்ட் 13-ம் தேதி பிறந்த ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக தமிழ் படங்களில் அறிமுகமாகி அதன் பின் இந்தியத் திரையுலகில் தன்னிகரற்ற நட்சத்திரமாக போற்றப்பட்டார். வசீகரமான தோற்றத்தாலும், அற்புதமான நடிப்பாற்றலாலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்குண்டு. கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி எதிர்பாராத விதமாக துபய் ஹோட்டல் குளியல் தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். அது அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
ஸ்ரீதேவியில் முதல் ஆண்டு நினைவு அஞ்சலியான இன்று அவரது மகள் ஜான்வி தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருந்தார். ‘என் இதயம் எப்போதும் கனமாகத் தான் இருக்கும். ஆனால் என் உதடுகள் எப்போதும் புன்னகை புரியும், காரணம் அந்தப் புன்னகையில் நீ இருக்கிறாய்’ என்று எழுதியிருந்தார்.
போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி மற்றும் குஷி நினைவு அஞ்சலியை சென்னையில் உள்ள ஸ்ரீதேவியி வீட்டில் நடத்தினார்கள். எளிமையாக நடைப்பெற்ற அந்நிகழ்வில் அஜித் மற்றும் ஷாலினி கலந்து கொண்டனர்.