நிறைமாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் எமி ஜாக்ஸனின் எதிர்காலத் திட்டம்

சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் போன்றவர்கள் ஒரே நேரத்தில் திரையுலகிற்கு வந்தாலும் சாய் பல்லவி அளவுக்கு அனுபமாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை.
நிறைமாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் எமி ஜாக்ஸனின் எதிர்காலத் திட்டம்

சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் போன்றவர்கள் ஒரே நேரத்தில் திரையுலகிற்கு வந்தாலும் சாய் பல்லவி அளவுக்கு அனுபமாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. கிணற்றில்போட்ட கல்லாக எந்தவித பரபரப்பும் இல்லாமலிருந்த அனுபமா, திடீரென்று தனக்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் தொடர்பு இருப்பதுபோல் ஒரு தகவலை இணையதள பக்கத்தில் கிளப்பிவிட்டார். அது தீயாய்ப் பற்றிக் கொண்டது. இந்த பரபரப்பு அவருக்கு புதிய பட வாய்ப்பு ஒன்றையும் பெற்றுத் தந்திருக்கிறது. உடனே நடிக்க வந்துவிட்டார். பரபரப்புக்கு பயன்பட்ட காதல் விவகாரம் சீரியஸ் ஆகி வருவதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த அனுபமா, 'பும்ராவா? யார் அவர்' என்று கேட்டு அடுத்த பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, " பும்ராவ் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். மற்றபடி வேறு எதுவும் அவரைப் பற்றி தெரியாது. எந்த ஆதாரமும் இல்லாமல் யாரோ சிலர் பும்ராவுடன் என்னை இணைத்து வதந்தி பரப்பி வருகிறார்கள்'' என்றார் அனுபமா. டுவிட்டர் பக்கத்தில் அனுபமாவும், பும்ராவும் ஒருவரையொருவர் ஃபாலோ செய்ததால் இருவரும் காதலிப்பதாகத் தகவல் பரவியது. தற்போது அனுபாமாவை அன்ஃபாலோ செய்திருக்கிறார் பும்ரா.

மும்பை வெர்சோவா பகுதியில் தமன்னா, ரூ.16 கோடியில் ஆடம்பர பங்களா வாங்கியிருக்கிறார் என்று தகவல் பரவியது. தமன்னா எங்கு சென்றாலும் 16 கோடியில் வீடு வாங்கியது குறித்து கேட்டு அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்களாம். இதனால் தர்மசங்கடத்திற்குள்ளாகியிருக்கிறார். பங்களா வாங்கியது பற்றி தமன்னா கூறும் போது, 'எனது ஹிந்தி டீச்சர் என் செல்போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் ரூ.16 கோடிக்கு வீடு வாங்கியிருப்பதாக என்னைப் பற்றி தகவல் பரவி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஒரு வீட்டுக்கு நான் எப்படி இரண்டு மடங்கு விலை தருவேன்? என்று அவருக்கு பதில் அளித்தேன். வெளியிடங்களுக்குச் சென்றாலும் இது பற்றியே என்னிடம் கேட்பதால் தர்மசங்கடமாக உள்ளது. நான் வீடு வாங்கியது உண்மைதான். ஆனால் அந்த வீட்டுக்கு இரண்டு மடங்கு விலை கொடுக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரேயா. இப்போது இவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாமல் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார். தனது நண்பர் ஆன்ட்ரி கொஸ்சேவ்வைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே நடிக்க ஒப்புக்கொண்ட, 'நரகாசூரன்' படம் இன்னமும் திரைக்கு வராமல் இருப்பதால் நொந்துபோய் இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு ஒப்புக்கொண்ட, 'சண்டக்காரி' படமும் இன்னும் வெளியாகவில்லை. முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்திருந்த ஸ்ரேயா திடீரென்று தனது மார்க்கெட்டை இழந்து பின்னுக்குத் தள்ளப்பட்டதால், விட்ட இடத்தை பிடிப்பதற்காக இணையதளப் பக்கத்தில் தனது கவர்ச்சிப் படங்களைச் சரமாரியாக வெளியிட்டு கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். திருமணம் ஆகி வருடக்கணக்காகிவிட்டதால் அவர் கர்ப்பமாகியிருப்பார் என்ற சந்தேகமும் பலருக்கு எழுவதால் அதைத் தீர்க்கும்விதமாக ஹீரோயினுக்கு ஏற்ற தோற்றத்துடன் கட்டுக்கோப்பாக இருப்பதை வெளிப்படுத்தவே அவ்வப்போது கவர்ச்சி விருந்து படைத்து வருவதாகத் தெரிகிறது.

திருமணத்துக்கு முன்பே தனது நண்பர் ஜார்ஜ் பனயியோடோவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார் எமி ஜாக்சன். தற்போது நிறைமாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் எமி ஜாக்ஸன் மொராக்கோ நாட்டில் மர்ரகேஷ் நகரில் காதலனுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் எமி ஜாக்ஸனுக்கு குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறி உள்ள நிலையில் காதலனுடன் திருமணம் பற்றி திட்டமிடுவதற்காக இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகருக்குச் செல்கிறார். அதற்கான விமான டிக்கெட் புக் செய்திருப்பதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் எமி, 'நாங்கள் இத்தாலியில் கண் விழிக்கப் போகிறோம். காலை டிபனாக பாஸ்தா சாப்பிடுவேன்' என குறிப்பிட்டிருக்கிறார். வெனிஸ் நகரில் அமர்ந்து தனது திருமணத்தை கிரேக்க நாட்டில் எப்படி நடத்துவது என்று வருங்கால கணவர் ஜார்ஜுடன் பேச முடிவு செய்திருக்கிறார் எமி.

அக்னி சிறகுகள்', 'பாக்ஸர்' ஆகிய படங்களில் நடித்து வரும் அருண் விஜய் நடிக்கும் புதுப்படம், 'மாஃபியா'. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார், ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். படத்தை கார்த்திக் நரேன் எழுதி இயக்குகிறார். படம் குறித்து கார்த்திக் நேரன் பேசும் போது....37 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம். அதற்கான வேலைகள் மும்முரமாக தொடங்கியுள்ளன. 'தடம்' பார்த்த பிறகுதான் இதில் அருண் விஜய்யை நடிக்க வைக்கும் எண்ணம் ஏற்பட்டது. அந்த படத்தில் அந்த அளவுக்கு அவரின் உழைப்பு இருந்தது. படத்தில் அவர் கேங்ஸ்டர் இல்லை. வடசென்னையிலும் கதை நடக்கவில்லை. இது இரண்டும் இல்லாமலும் ஒரு சென்னை கதை. இதுதான் இதன் சிறப்பு. பிரசன்னா, பிரியா பவானி சங்கர் இருவருக்கும் மிகவும் வித்தியாசமான வேடம். கதாநாயகியாக நடிக்க பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியாக பிரியா பவானி சங்கர் தேர்வாகியுள்ளார்' என்றார் இயக்குநர்.
- ஜி.அசோக்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com