கடந்த ஒரு வருடத்தில் இளையராஜா: பாராட்டு விழாக்களும் தொடரும் சர்ச்சைகளும்!

கடந்த வருட ஜூன் மாதம் முதல் இந்த வருடப் பிறந்தநாள் கொண்டாட்டம் வரை இந்த ஒருவருட காலக்கட்டத்தில்...
கடந்த ஒரு வருடத்தில் இளையராஜா: பாராட்டு விழாக்களும் தொடரும் சர்ச்சைகளும்!

கடந்த வருட ஜூன் மாதம் முதல் இந்த வருடப் பிறந்தநாள் கொண்டாட்டம் வரை இந்த ஒருவருட காலக்கட்டத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு:

ஜூன் 02: 75-வது பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா, மகள் பவதாரணி, பேரன், பேத்திகளுடன் இளையராஜா கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 75-ஆவது பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்கள் மூலமாக இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். பல ரசிகர்கள் இளையராஜாவை சென்னையில் அவர் இசையமைத்து வரும் பிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பின்னணிப் பாடகர்கள், இசைத் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திரையுலகைச் சேர்ந்த பலர் இளையராஜாவுக்கு தங்களது சுட்டுரைப் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து அவரது பெருமைகளைப் பதிவு செய்தனர். அரசியல் உலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஜூலை 10: இளையராஜாவிடம் கடைசியாகச் சேர்ந்ததும் முதலில் பிரிந்ததும் கே. பாலசந்தர் தான்: கரு. பழனியப்பன் பேச்சு!

மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரே ஒரு பாலசந்தர் என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கே.பி.யின் சீடர்களும் திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேசியதாவது: 

பாலசந்தர்தான் இளையராஜாவிடம் வந்து சேர்ந்த கடைசி இயக்குநர். அப்போது, இளையராஜா தமிழகம் எங்கும் வியாபித்து, கோலோச்சி எல்லா இயக்குநர்களும் அவரிடம் இணைந்து படம் செய்து கொண்டிருந்தார்கள். அன்றைக்கு, இளையராஜா இல்லாமல் படம் கிடையாது. தயாரிப்பாளர்கள் இளையராஜாவிடம் சென்று தேதிகள் வாங்கியபிறகுதான் படம் தொடங்கும். இளையராஜா படத்தில் இருந்தால் விநியோகஸ்தர் படத்தை வாங்குவார். யார் நடித்திருந்தாலும் தேவையில்லை. இளையராஜா கை வைத்தபடி உள்ள புரொஃபைல் படம் போட்டு ராகதேவன் இசையில் என்று போஸ்டர் ஒட்டினால் போதும், படம் விற்றுவிடும். 

அப்போது வரைக்கும் இளையராஜாவிடம் செல்லாத ஒரே ஒரு இயக்குநர் பாலசந்தர். அவர்தான் இளையராஜாவிடம் கடைசியாக வருகிறார். இணைந்து செய்த முதல் படம் - சிந்து பைரவி. பாலசந்தர் எதற்காகக் காத்திருந்தார் என்றால், இளையராஜாவிடம் செல்ல வேண்டும்தான், ஆனால் எப்படிப் போகவேண்டும் என்றால் அது அவருக்குச் சவால் அளிக்கக்கூடிய படமாக இருக்கவேண்டும் என்பதற்காக சிந்து பைரவி படத்துக்குத்தான் செல்கிறார். இளையராஜாவும், இவ்வளவு நாள் இவ்வளவு இயக்குநர்களிடம் படம் பண்ணினோமே, இவரிடமல்லவா நாம் படம் பண்ணியிருக்க வேண்டும், நாமல்லவா இவரைத் தேடிச் சென்றிருக்கவேண்டும், நாம் செய்யாமல் விட்டுவிட்டோமே என்பதுபோல அருமையான பாடல்களைத் தருகிறார்.   

இளையராஜா இயக்குநர்களை அவ்வளவாகப் பாராட்டியதில்லை. அவர் ஒருமுறை, இதெல்லாம் நான் யாருக்கு இசையமைக்க முடியும்? இதுபோன்ற சிச்சுவேஷன்களைக் கொண்டுவந்தால்தான் இப்படி இசையமைக்க முடியும் என்று சிந்து பைரவி பாடல்கள் குறித்துக் குறிப்பிடுகிறார். இப்படி பாலசந்தரை இளையராஜா கொண்டாடியது, அவர் இளையராஜாவை விட்டு வெளியே சென்றபிறகு.

இளையராஜாவிடம் கடைசியாக வந்து சேர்ந்தது மட்டுமல்லாமல் இளையராஜாவை விட்டு உடைத்துக்கொண்டு வெளியே சென்ற முதல் இயக்குநரும்  பாலசந்தர்தான். அந்தச் சமயத்தில் எல்லோரும் இளையராஜாவிடம் இருந்தார்கள். எப்படி விலக்குவது என்று தெரியவில்லை. இளையராஜாதான் சினிமா என்றாகிவிட்டது. இந்த நிலையில் பாலசந்தர்தான் வெளியே வந்தார். 

ஒரு படம் மட்டும் அறிவித்தால் விலகியது தெரிந்துவிடும் என்பதால் ஒரே சமயத்தில் மூன்று படங்களை அறிவிக்கிறார். மூன்று படத்திலும் இளையராஜா கிடையாது. ரோஜா, வானமே எல்லை, அண்ணாமலை ஆகியவைதான் அந்த மூன்று படங்கள். ஏ.ஆர். ரஹ்மான், மரகதமணி, தேவா என மூன்று இசையமைப்பாளர்கள் அப்படங்களுக்கு. மூன்று படங்களும் பெரிய வெற்றியை அடைகின்றன. 

தமிழ் சினிமா என்கிற டைனோசர் மெல்ல திரும்பிப் பார்த்தது. ஓ, இளையராஜா இல்லாமல் படம் எடுக்கமுடியுமா, அவரில்லாமல் தமிழ் சினிமாவில் வெற்றியடைய முடியுமா, அது மட்டுமே (வெற்றிச்) சூத்திரம் இல்லையா என்று யோசிக்கிறது. மொத்த அமைப்பையும் உடைப்பது என்பது இதுதான். அதைச் சிறப்பாகச் செய்தவர் பாலசந்தர் என்று பேசினார். 

ஆகஸ்ட் 01: ராதா மோகன் படத்தில் இளையராஜா

தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் 60 வயது மாநிறம் என்றொரு படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு இசை - இளையராஜா. இதற்கான அறிவிப்பு வெளியானது. 

60 வயது மாநிறம் படம் குறித்து ட்விட்டரில் தயாரிப்பாளர் தாணு கூறியதாவது:

கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக  #60VayadhuMaaniram அமையப் பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது என்றார்.

ஆகஸ்ட் 09: கருணாநிதி மறைவுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து இரங்கல் தெரிவித்த இளையராஜா!

இசை நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: 

கருணாநிதியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவர் உயிரிழந்த நாள் நமக்கெல்லாம் கருப்பு தினம். இந்தத் துக்கத்திலிருந்து நாம் எப்படி மீளப்போகிறோம் எனத் தெரியவில்லை. தூய தமிழ் வசனங்களை திரைப்படங்களில் அள்ளி வழங்கியவர். அரசியல், கலை, இலக்கியம், தமிழ் உள்ளிட்ட பல துறையில் சிறந்து விளங்கியவர். இது ஈடுசெய்யமுடியாத இழப்பு. ஆஸ்திரேலியாவுக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். இந்தத் திட்டம் ஆறு மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.

செப்டம்பர் 04: மிஷ்கின் - இளையராஜா - பி.சி. ஸ்ரீராம் கூட்டணியில் சைக்கோ

2013-ல் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதற்கு முன்பு மிஷ்கின் இயக்கிய நந்தலாலாவுக்கும் இளையராஜா தான் இசை. தற்போது இருவர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. மிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அதேபோல மிஷ்கின் இயக்கும் படத்துக்கு முதல்முறையாக ஒளிப்பதிவு செய்யவுள்ளார் பி.சி. ஸ்ரீராம்.

செப்டம்பர் 13: இளையராஜா இசையமைத்துள்ள புதிய படம்!

இளையராஜா இசையமைப்பில், கட்டம் போட்ட சட்ட என்கிற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இயக்கம் - ஜேப்பி. நாசர், ராதிகா, சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் பலர் இதில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - சரவணன். 

செப்டம்பர் 17: சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும், இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாடுவேன்: எஸ்.பி.பி.

இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே காப்புரிமைப் பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தினார். இந்நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேன். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார் எஸ்.பி.பி.

இந்நிலையில் தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி மேடையில் பாடவுள்ளதாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

எனக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரச்னை இன்னும் ஓயவில்லை. எனக்கு ஏன் அவர் அப்படிச் செய்தார் எனத் தெரியாது. அவர் இசையமைத்த பாடல்களை நான் பாடக்கூடாது என்று சொன்னாலும் நான் பாடுவேன். என் மகன் நடத்திய ஒரு நிறுவனத்துக்குத்தான் நோட்டீஸ் அனுப்பினார். பாடுவதற்கு எனக்குத் தடை விதிக்கவில்லை.

கடந்த ஓர் ஆண்டுகளாக அவர் இசையமைத்த பாடல்களை மேடையில் பாடாமல் தான் இருந்தேன். பிறகுதான் யோசித்தேன். இளையராஜா இசையமைப்பில்தான் நான் அதிகப் பாடல்களைப் பாடியுள்ளேன். எனக்கும் அதில் பங்கு உள்ளது எனத் தோன்றியது. இப்போது மீண்டும் அப்பாடல்களைப் பாட ஆரம்பித்துவிட்டேன். அவர் என்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படி பதில் சொல்ல முடிவெடுத்துள்ளேன். ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது சரியல்ல. எந்தப் பாடலுக்கு அவருக்கு உரிமை உள்ளது என்பதை அவர் கூறவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இதெல்லாம் நடந்தாலும் அவர்மீது எனக்கு துளி மரியாதை குறையவில்லை. ஓர் இசையமைப்பாளராக எப்போதும் அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவதற்குத் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளார். 

அக்டோபர் 23: புதுச்சேரியில் கலை, இலக்கிய அமைப்பு தொடங்க இளையராஜா திட்டம்

புதுச்சேரியில் கலை, இலக்கிய அமைப்பை தொடங்க இசையமைப்பாளர் இளையராஜா திட்டமிட்டுள்ளார். கலை, இலக்கிய அமைப்பை தொடங்குவது தொடர்பாக, அதற்கான இடங்களைப் பார்வையிடுவதற்காக புதுச்சேரிக்கு இளையராஜா வந்தார். அவர் முதல்வர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினார். கலை, இலக்கிய நிறுவனம் தொடங்குவது தொடர்பாக இளையராஜா தெரிவித்தவுடன், கலைகளைக் கற்றுத் தரும் பாரதியார் பல்கலைக்கூடம் புதுச்சேரியில் செயல்படுவதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர், கலைக்கூடம் அமைந்துள்ள தொகுதி எம்எல்ஏ ஜெயமூர்த்தியுடன், அவரை பாரதியார் பல்கலைக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். பாரதியார் பல்கலைக்கூடத்துக்குச் சென்ற இளையராஜா அந்தப் பகுதியைப் பார்வையிட்டு சென்னை திரும்பினார். இதுதொடர்பாக ஜெயமூர்த்தி எம்எல்ஏவிடம் கேட்ட போது, இயல், இசை, நாடகம் தொடர்பான அமைப்பை இளையராஜா தொடங்கும் எண்ணத்தில் உள்ளார். பாரதியார் பல்கலைக்கூடத்தை பார்வையிட்டார். இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். 

அக்டோபர் 25: ஒரு பாடல் நல்ல கருத்தையும், உணர்வையும் கொடுக்க வேண்டும்

இசையமைப்பாளர் இளையராஜா 75-வது பிறந்தநாளை தங்களுடன் கொண்டாட வேண்டும் என்று பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி இசைஞானியுடன் ஓர் இசைமாலை என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி அக்கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது: 

என்னுடன்  நண்பர்களாக பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. எனக்கு ஆர்மோனியப் பெட்டி தான் நண்பன். இந்த ஆர்மோனியப் பெட்டியை கோவை, உக்கடத்தில் ரூ.60-க்கு எனது அண்ணன் வாங்கினார். இதில் பயிற்சி பெற்றுத்தான் இசையமைப்பாளராக முடிந்தது. என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனியப் பெட்டிதான். ஒரு பாடல் நல்ல கருத்தையும், உணர்வையும் கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது பாடல் இல்லை. பாடல் பாடும் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆலோசனைகள் சொல்ல முடியாது. அது பாடுபவர்களைப் பொறுத்து மாறுபடும். நான் எதிர்பார்த்தபடி இதுவரை பாடல்கள் எதுவுமே அமைந்ததில்லை. ஒவ்வொரு பாடலிலும் எங்காவது தவறு இருக்கும். இசையில் அனைத்து செல்வங்களும் இருக்கின்றன. அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.இசையில் வெற்றி, தோல்வி என்பது கிடையாது. ஆகவே, மாணவர்கள் இசையில் வெற்றி, தோல்விகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார். 

அக்டோபர் 31: என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது

காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்தப் புகாரின் மீது காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு சிவில் பிரச்னை. எங்கள் மீது குற்றவியல் புகார் அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதை ரத்து செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது ஒரு சிவில் பிரச்னை. இதன் அடிப்படையில் குற்றவியல் புகார் அளிக்கமுடியாது என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக இளையராஜா ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கின்படி, இன்றளவும் எனது பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்தத் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும். 

நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்தேன். சட்டத்துக்குப் புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை சிடிக்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தது. அந்தக் குற்றவியல் வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது. அதில் நீதியரசர் எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார்.  அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான்கு ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில் உண்மைக்குப் புறம்பான  செய்திகளை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

நவம்பர் 03: சென்னையில் இளையராஜாவைக் கெளரவிக்கவுள்ள தயாரிப்பாளர்கள் சங்கம்! 

இளையராஜாவைக் கெளரவிப்பதற்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையராஜா - 75 என்கிற பெயரில் இசை விழாவை நடத்த திட்டமிடப்பட்டது. 2019, பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகங்களின் பிரபல நட்சத்திரங்களும் இளையராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர்களும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரு தேதிகளிலும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 03: கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் இளையராஜா வழிபாடு

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா தரிசனம் மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்கு இளையராஜா காலை 8.30 மணியளவில் வந்தார். சுவாமியை வழிபட்டு விட்டு சன்னிதானத்தை வலம் வந்த பின்னர், பிரம்மா சன்னிதானத்துக்குச் சென்று பால், தயிர், இளநீர், நெய், தேன், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்து வழிபட்டார். பின்னர், வீரநாராயணப் பெருமாள் சந்நிதிக்குச் சென்று பல்வேறு அபிஷேகங்கள் செய்து வழிபட்டார். தொடர்ந்து, மகாலட்சுமி, ஆஞ்சநேயர், சனீஸ்வரன், கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று வழிபட்டார்.

நவம்பர் 27: பாடல்களுக்கான ராயல்டி: வசூலிக்கும் உரிமையை திரை இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு வழங்கினார் இளையராஜா

தன் சார்பில் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த பாடல்களுக்கான ராயல்டி தொகையை, இனி தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் வசூலிப்பதற்கான உரிமையை வழங்கியுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள விடியோ பதிவு : 

என்னுடைய முன் அனுமதி பெறாமல், என் பாடல்களை பாட விரும்புகிற இசைக் கலைஞர்கள் என்னிடம் முன் அனுமதி பெற்று, பாடுவதுதான் முறையானதாகும். இல்லையென்றால், சட்டப்படி குற்றமாகும். என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுவதும், வாசிப்பதும் தவறு என்பதை இசைக் கலைஞர்கள் உணர வேண்டும். அப்படிச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை ஐபிஆர்எஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இருந்தேன். இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால், இதுவரை என் சார்பாக வசூலித்து கொண்டிருந்த ராயல்டி தொகையை, நமது தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு அந்த உரிமையை நான் வழங்கியிருக்கிறேன். 

ஐபிஆர்எஸ்-க்கு பதிலாக இசைக் கலைஞர்கள் சங்கம், இந்த ராயல்டி தொகையை வசூலித்துக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பாடகர்கள், பாடகிகள் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் இதில் அடங்குவார்கள். யாரும் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். 

பணம் வாங்கிக் கொண்டுதான் நீங்களும் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். என் பாடலை பாடுபவர்கள் பணம் வாங்குகிறார்கள். அதில் எனக்குப் பங்கு இல்லையா? பாடலே என்னுடையது என்கிற போது பங்கு எப்படி இல்லாமல் போகும். பங்கு என்பது சிறிய தொகைதான். 

அதைக் கூட பெயருக்குத்தான் கேட்கிறேன். நாளைய தலைமுறைக்கு இது சரியான நடவடிக்கையாக இருக்கும். முன்னோடி நடவடிக்கையாகவும் இருக்கும். அதில் அடியெடுத்து வைத்தவன் நான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார் இளையராஜா. 

இசைக் கலைஞர்கள் சங்கம் நன்றி: பாடல்களின் காப்புரிமையைக் காக்கும் பணியையும், நெறிப்படுத்தும் பணியையும் இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு தந்து, அதில் வரும் தொகையை இசைக் கலைஞர்கள் பெறுவதும் இதுவே முதல் முறை. இந்த நிதி உறுப்பினர்களின் சேமநல நிதிக்கும், உறுப்பினர்களின் கருணைத் தொகைக்கும் மட்டுமே சென்றடையும். இளையராஜா இந்த பெரிய சேவையை அளித்ததில் இசைக் கலைஞர்கள் சங்கம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது என்று இசைக் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 28: இளையராஜாவின் பாடல்களைக் கச்சேரிகளில் பாட கட்டணம் எவ்வளவு?

தன்னுடைய பாடல்களைப் பாடுவதற்கு இளையராஜா கேட்கும் கட்டணம் தொடர்பாகத் திரையிசைக் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் உள்ள கட்டண விவரங்கள்: 

இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் கச்சேரி செய்வதற்கு ஏ பிரிவினருக்கு ஓர் ஆண்டுக்கு ரூ. 20 லட்சமும் பி பிரிவினருக்கு ரூ. 15 லட்சமும் சி பிரிவினருக்கு ரூ. 10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறக்கட்டளை நிகழ்ச்சிகள், திருமணம், பிறந்தநாள் நிகழ்ச்சிகள், கோயில்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் கச்சேரி நடத்துவதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஏ.பி, சி பிரிவுகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபல பாடகர்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. 

டிசம்பர் 03: ஈரோட்டில் இளையராஜா கச்சேரி!

ஈரோடு, கங்காபுரத்திலுள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் 2019, பிப்ரவரி 10 ஆம் தேதி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

ஈரோடு, கங்காபுரம் டெக்ஸ்வேலி வளாகத்தில் மஹம் என்டர்பிரைசஸ் இயக்குநர் சுரேஷ்வர் தலைமையில், டெக்ஸ்வேலி தலைவர் ராஜசேகர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், ஒய்.ஜி.மதுவந்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இளையராஜா இசை நிகழ்ச்சிக்கான முதல் விளம்பரப் பதாகையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

மஹம் என்டர்பிரைசஸ், அருண் கிரியேஷன்ஸ், சத்யோதயம் ஆகிய நிறுவனங்களின் சார்பில், "எப்போதும் ராஜா' என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக,  ஈரோட்டில் முதல் முறையாக டெக்ஸ்வேலி வளாகத்தில் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடத்தப்படுகிறது.  தன்னுடைய இசையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் நோக்கில்  இளையராஜாவால் நடத்தப்படும்  இந்த இசை நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 30 -க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது ஈரோட்டில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது. இந்தக் கச்சேரி தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெறும். இதன்மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி கஜா  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் என்றார். 

டிசம்பர் 20: இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என விஷால் ஆவேசம்!

இளையராஜா இசை நிகழ்ச்சி தொடர்பாக தயாரிப்பாளர்கள் அனைவரையும் விஷால் கலந்தாலோசிக்கவில்லை என்று தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதன் விளைவாக, விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் டிசம்பர் 19 அன்று போராட்டம் நடத்தினார்கள். பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார். பிரச்னைகள் தொடர்பாகப் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும் என்று போராட்டம் நடத்திய தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள். கடந்த நிர்வாகம் சேமித்து வைத்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்றும் இவர்கள் கேள்வியெழுப்பினார்கள். மேலும் விஷால் குறித்து முதலமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள். விஷால் பதவி விலகக் கோரி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இரு அலுவலகங்களுக்குத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் பூட்டு போட்டார்கள்.

இந்நிலையில் இளையராஜா இசை நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சைக்கு நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

அனைத்தையும் இழந்துள்ள தயாரிப்பாளர்களுக்கு நான் நல்லது செய்ய எண்ணுகிறேன். அதற்காக என்னைக் குறி வைக்கிறார்கள். என்ன நடந்தாலும் இதை நாங்கள் செய்துமுடிப்போம். என்னுடைய மனசாட்சி தெளிவாக உள்ளது. கடவுளும் உண்மையும் என் பக்கம் உள்ளார்கள். தொடர்ந்து முன்னேறுவேன். இளையராஜா சார் இசை நிகழ்ச்சி நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். 

டிசம்பர் 21:  பாரம்பரிய இசைகளைப் பாதுகாக்க வேண்டும் - இளையராஜா

பறை இசை, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய இசைகளைப் பாதுகாக்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா வலியுறுத்திப் பேசினார். சேலத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளையராஜா கேக் வெட்டினார். பின்னர் மாணவ, மாணவியரின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து அவர் பேசியது: 

நான் இசையமைத்ததில் கரகாட்டக்காரன் படத்தில் உள்ள மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கு மிகக் குறைந்த நேரத்தில் இசையமைத்துள்ளேன். அதிக நேரம் இசையமைக்க எடுத்துக் கொண்ட பாடல், உதயகீதம் படத்தின் பாடும் நிலாவே பாடல் ஆகும். நான் இசையமைத்த பாடல்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஒரே மாதிரிதான் உள்ளன. இதில் வேறுபாடு எதுவுமில்லை. எல்லா பாடல்களிலும் சரிகமபதநி இருக்கும். பாடல்களுக்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது, சிந்தனையும் தேவையாகும். நான் முதல் படத்துக்கு வாங்கிய சம்பளம் ரூ.5 ஆயிரமாகும். பறை இசை, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய இசைகளைப் பாதுகாக்க வேண்டும். தொழில்நுட்பம் என்ற பெயரில் உருவாக்குகிற இசையைக் கேட்பதால்தான், பாரம்பரிய இசை அழிந்து வருகிறது. அதைக் கேட்பதை நிறுத்திவிட்டாலே போதுமானது. பாரம்பரிய இசைக் கலைஞர்கள் அடுத்த தலைமுறையினருக்கு பாரம்பரிய இசையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதை அழிவிலிருந்து காக்க முடியும். நான் லைலா, மஜ்னுவைத்தான் அதிகளவில் காதலித்தேன். என்னுடைய காதல் கற்பனையில் மட்டும் தான். 

நான் தினந்தோறும் பாரதியாரைச் சந்தித்து கொண்டு இருக்கிறேன். அவரை நினைத்தாலே இசை கசிந்து ஓடுகிறது. யார் முன்னால் உங்கள் மனம் அமைதியாக உள்ளதோ, அவர்தான் உங்களுக்கு குருவாக முடியும் என்றார்.  விழாவில், இளையராஜா பாடல்களைப் பாடி மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தினார். கல்லூரி நிர்வாகிகள் கைலாசம், ராஜவிநாயகம், செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

டிசம்பர் 22: எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்

பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறையாகத் தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தான் இசையமைத்த பாடல்களின் உரிமையும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் தனக்கே வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா கோரி வருகிறார். இதனால் இளையராஜா இசையமைத்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பாடல்களின் ராயல்டி மூலம் கிடைக்கும் வருவாய் கிடைக்காமல் உள்ளது. இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் பலர் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். இளையராஜாவின் பரிந்துரையின்படியே ஆடியோ உரிமத்தை எக்கோ நிறுவனத்துக்குத் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். அதில் வரும் 50 சதவிகித ராயல்டி பங்கு இதுவரை எந்தத் தயாரிப்பாளர்களுக்கும் கிடைத்ததில்லை. பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு உரியது. சம்பளம் வாங்கி இசையமைத்த இளையராஜாவுக்கு அந்த உரிமை கிடையாது. இதுவரை ரூ. 200 கோடி வரை தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய ராயல்டி பணம் வரவில்லை. கச்சேரி, காலர் டியூன், பாடல் ஒலிபரப்பு மூலமாகக் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவைக் கெளரவிப்பதற்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையராஜா - 75 என்கிற பெயரில் இசை விழா ஒன்று நடைபெறவுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகங்களின் பிரபல நட்சத்திரங்களும் இளையராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர்களும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த இரு தேதிகளிலும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசை நிகழ்ச்சி தொடர்பாக தயாரிப்பாளர்கள் அனைவரையும் விஷால் கலந்தாலோசிக்கவில்லை என்று தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால், இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று விஷால் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது ராயல்டி விவகாரம் தொடர்பாக இளையராஜாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிசம்பர் 28: மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து வாழ்வில் முன்னேற வேண்டும்: கல்லூரி விழாவில் இளையராஜா பேச்சு

மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், கலந்து கொண்ட இளையராஜாவை கல்லூரி நிர்வாக தலைவர் மோகன் தலைமையில் மாணவர்கள் வரவேற்றனர்.

விழாவில், அவர் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாதவற்றிற்கு ஆசைப்படக் கூடாது. கிடைப்பதை சந்தோஷமாக ஏற்கவேண்டும் என்றார். மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடலின்போது அவர் பேசுகையில், குருவருளும், திருவருளும் ஒன்றுதான். இசையே இறைவன்தான். இசைக்கு மூலம் இறைவன் என்று சொல்லலாம். அறிவார்ந்த சிந்தனைகளால் மனிதர்களிடத்தில் வேற்றுமை இல்லை. மனிதனின் அனைத்து செயல்களும் இறைவன் அருளாசியுடன் நடந்து கொண்டு இருக்கிறது. இசையின் மூலம் நான் உங்களுடன் வசிக்கிறேன். மாணவர்கள் தங்கள் சக்தியை முறையாக பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். இவ்விழாவில் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பிரசன்ன வெங்கடேசன், சுதா மீனாட்சி, ரேணுகா மற்றும் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஜனவரி 05: புதிய சர்ச்சை: மகளிர் கல்லூரியில் அப்படி என்னதான் பேசினார் இளையராஜா?

இன்று இசையமைப்பாளர்களே கிடையாது என்று இளையராஜா பேசியது தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவொன்றில் இளையராஜா கலந்துகொண்டார். அப்போது அவர், இன்று கம்போஸர்களே கிடையாது என்று பேசியது தொடர்பாக சர்ச்சையும் குழப்பமும் எழுந்துள்ளன. மற்ற இசையமைப்பாளர்கள் குறித்து இளையராஜா இப்படிப் பேசலாமா என்று ஒருதரப்பும் இளையராஜா அதுபோல பேசவில்லை. திரித்துக் கூறுகிறார்கள் என்று இன்னொரு தரப்பும் இளையராஜா பேசியது குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதித்துவருகிறார்கள். இளையராஜாவின் இந்தப் பேச்சுக்கு அவரது சகோதரர் கங்கை அமரன் ட்விட்டரில் கூறியதாவது: மன்னிக்கவும். நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வரமுடியாது என்று கிண்டலுடன் பதில் அளித்துள்ளார்.

சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரி விழாவில் இளையராஜா பேசியது இதுதான்: 

அப்போதெல்லாம் எப்படி கம்போஸிங் நடக்கும் என்றால் இப்போது போல இல்லை. மாணவிகளே, இப்போது வருகின்ற கம்போஸர்கள் எல்லாம் கம்போஸர்கள் இல்லை. இன்னைக்கு கம்போஸர்களே கிடையாதுங்கிறதை ஞாபகம் வைச்சுக்குங்க. இப்போது எல்லாம் சிடியோடு வருவாங்க. அங்க இருந்து இங்க இருந்து ஒண்ணை எடுத்து, இயக்குநருக்குப் போட்டு காட்டி, சார் இதுமாதிரி இருக்கலாமா எனக் கேட்பார்கள். இது மாதிரி இருக்கலாம். இது மாதிரி போடறேன்னு சொல்லிட்டு அதையே போட்டுருவாங்க. ஆனால் அந்தக் காலத்தில் நாங்கள் கம்போஸ் செய்யவேண்டும். பெர்பார்ம் பண்ணனும். நாங்க வாசிக்கணும். ஒவ்வொரு ஸ்வரமும் அமைச்சு அதை இயக்குநர் ஓகே செய்து அதற்குப் பிறகுதான் கவிஞரைக் கூப்பிட்டுப் பாட்டு எழுதவைப்போம் என்று கூறியுள்ளார்.

ஜனவரி 20: மாணவிகளுக்கு வாய்ப்பு அளிக்கவுள்ள இளையராஜா

இளையராஜாவின் 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த சில மாதங்களாக பல்வேறு கல்லூரிகளில் விழா கொண்டாடி வருகின்றனர். இவற்றில் அவரும் கலந்துகொண்டு, தன் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார் இளையராஜா. கடந்த வருடம் முழுவதும் தமிழக அளவில் பல கல்லூரிகளுக்குச் சென்றார். மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடினார்.  இந்த விழாக்களில், அவர்முன்பு பாடல்கள் பாடிய மாணவிகள், அவரது இசையில் பாட  விரும்புவதாகவும் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். இதையடுத்து, இசை நாட்டம் கொண்ட சில மாணவிகளை அழைத்து, குரல் சோதனை நடத்தியுள்ளார். அதில் நன்றாகப் பாடும் 9 மாணவிகளை தேர்வு செய்துள்ளார். இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பின்னணிப் பாடகிகளாக அவர்களை அறிமுகம் செய்ய உள்ளார். இந்த அறிவிப்பால், அந்த 9 மாணவிகளும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

ஜனவரி 23: விரைவில் இசைக் கல்லூரி தொடங்குவேன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறை சார்பில், இளையராஜாவின் 75-ஆவது பிறந்த நாள் விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலை. நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:

அண்ணாமலைப் பல்கலை. சாஸ்திரி அரங்குக்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன். இதற்கு முன்பு கெளரவ டாக்டர் பட்டம் பெற வந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைந்துள்ள மற்றுமொரு கோயிலாகும். இது, புனிதமான இடம். பாடல்கள், இசையின் மூலம் மனிதனுக்கு சுத்தமான ஆற்றல் கிடைக்கிறது. இசையின் மூலம் பல்வேறு அதிசய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இது இசையின் மகத்துவம் என்றார் இளையராஜா. தொடர்ந்து, மாணவர்கள் கேட்ட கேள்விக்கு இளையராஜா பதிலளித்தார். 

அப்போது, மாணவர் ஒருவர், நீங்கள் இசையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு, இசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. இசைதான் என்னைத் தேர்த்தெடுத்தது என்றார்.

வெளிநாடுகளில் இசைக் கச்சேரிக்கு சென்றபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து மற்றொரு மாணவர் கேட்ட போது, அங்கே நடைபெறும் இசை நிகழ்ச்சியின்போது அமைதி, ஒழுக்கம், கட்டுப்பாடு காணப்பட்டது என்றார். இசைக் கல்லூரி தொடங்குவீர்களா? என்ற கேள்விக்கு, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளேன். விரைவில் இசைக் கல்லூரி தொடங்கப்படும் என்றார். 

முன்னதாக, பல்கலை. துணைவேந்தர் வி.முருகேசன் தலைமை வகித்துப் பேசியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு 90-ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவாக இளையராஜாவின் பிறந்த நாள் விழா நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் அவரது இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதியளித்தால், அதில் வரும் தொகையை வைத்து பல்கலை. இசைக் கல்லூரியில், இளையராஜா பெயரில் இருக்கை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஆண்டுதோறும் இசை வல்லுநர்கள் கெளரவிக்கப்படுவார்கள் என்றார் அவர். இந்த வேண்டுகோளை ஏற்ற இளையராஜா, பல்கலை. 90-ஆவது ஆண்டு விழாவில் இசை நிகழ்ச்சியை நடத்த ஒப்புதல் அளித்தார்.

ஜனவரி 29: இளையராஜா விழாவில் ஆளுநர்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும்  'இளையராஜா -75' விழாவை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், "இளையராஜா -75' என்ற விழா மலரை  வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

ஜனவரி 29: இளையராஜா 75 - பாராட்டு விழாவுக்கான செலவு விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள "இளையராஜா 75' பாராட்டு விழாவுக்கான செலவுத் தொகை, விழா தொடர்பான ஒப்பந்தம் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா தயாரிப்பாளரான ஜே.எஸ்.சதீஸ்குமார் தாக்கல் செய்த மனுவில், "சென்னையில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற முடிவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் முன்னாள் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சங்கத்துக்கு ஏற்கெனவே ரூ.7.73 கோடிக்கு முறையான கணக்குகளைக் காட்டவில்லை. இந்த நிலையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டால் அந்த விழாவிலும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் மற்றும் பொதுக்குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கூட்ட உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவுக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "நடிகர் விஷால் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், வெளிப்படையாக கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்படுவதில்லை. மேலும் "இளையராஜா 75' இசை நிகழ்ச்சிக்காக பலரிடம் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "இந்த விவகாரத்தில் தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதால், நிகழ்ச்சியை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்தால் என்ன என கேள்வி  எழுப்பினார். அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது. எனவே நிகழ்ச்சியை ஒத்திவைக்க முடியாது' என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ள தொகை, நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்களை புதன்கிழமைக்குள் (ஜன.30) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

பிப்ரவரி 01: 'இளையராஜா 75'  நிகழ்ச்சிக்குத் தடையில்லை: உயர்நீதிமன்றம்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3-ஆம் தேதிகளில்  நடைபெறவுள்ள "இளையராஜா 75' பாராட்டு விழாவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு கடைசி நேரத்தில் தொடரப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, "இளையராஜா 75'  நிகழ்ச்சிக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தார்.

பிப்ரவரி 02: ஹிந்தி பட ரசிகர்களை தனது இசையால் தமிழ்ப் பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 2 மற்றும் 3-ஆம் தேதிகளில்  நடைபெறவுள்ள "இளையராஜா 75' பாராட்டு விழாவின் வரவு- செலவு கணக்கு விவரங்களைக் கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், தமிழ் சமூகத்தின் பெருமை இளையராஜா என கருத்து தெரிவித்துள்ளது.  

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ.சதீஷ்குமார் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இளையராஜா-75 பாராட்டு நிகழ்ச்சிக்கான வரவு -செலவு கணக்கு விவரங்களை மேற்பார்வையிட்டு கண்காணிக்க இடைக்கால நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழ்ச் சமூகத்தின் பெருமை இசையமைப்பாளர் இளையராஜா. ஹிந்தி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களை தனது இசையால் தமிழ் பாடல்களைக் கேட்க வைத்தவர் இளையராஜா. ஹிந்தி திரைப்படங்களுக்கான இசையை தமிழில் இருந்து எடுக்க வைத்தவரும் அவர் தான். இந்தியாவே கவனித்து வரும் அந்த மிகப்பெரிய இசை கலைஞனின் பாராட்டு விழாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு அவரை அவமதித்ததாகவே கருத முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து வரவு -செலவு கணக்கு விவரங்களை மேற்பார்வையிட்டு கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள்,  தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பான விவரங்களை இரண்டு வார காலத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 

பிப்ரவரி 03: ராஜாவின் பாடலுக்கு கீபோர்டில் வாசித்த ஏ.ஆர். ரஹ்மான்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய 'இளையராஜா -75' விழாவை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார். இசையமைப்பாளர் இளையராஜாவைக் கௌரவிக்கும் விதமாகவும், அவரின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், 'இளையராஜா -75' என்ற விழா மலர் வெளியிடப்பட்டது. ரஜினி, கமல், ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், பால்கி உள்ளிட்ட பிரபலங்களும் திரையுலகினரும் ராஜா ரசிகர்களும் பெரும்திரளாக இந்த இருநாள் விழாவில் கலந்துகொண்டார்கள்.

ஏ.ஆர். ரஹ்மானும் இளையராஜாவும் பங்கேற்ற நிகழ்ச்சி ரசிகர்களின் அதிகப் பாராட்டைப் பெற்றது. ராஜாவின் மன்றம் வந்த தென்றலுக்குப் பாடலை ராஜா பாட, அப்பாடலை கீபோர்டில் வாசித்துக் காண்பித்தார் ரஹ்மான். அப்போது இசையில் ஏதோ விட்டுவிட்டார் ரஹ்மான். அவரிடம் ராஜா, ஏன் இப்படி வாசிக்கிறே, உனக்குத்தான் டியூன் தெரியுமே என்றார். மூன்றாம் பிறை படத்திலிருந்து என்னிடம் 500 படங்களுக்குப் பணியாற்றியுள்ளார் ரஹ்மான் என்று கூறினார் ராஜா. உங்களிடம் ஒரு படத்துக்கு வேலை பார்ப்பதே பெரிய விஷயம் சார் என்றார் ரஹ்மான். ரசிகர்களால் மறக்கமுடியாத தருணம் இது. 

பிப்ரவரி 03: என்னை விடவும் கமலுக்கு நல்ல பாடல்களை அளித்துள்ளீர்கள்: ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில்!

இளையராஜா -75 விழாவில் இளையராஜாவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் 15, 16 படங்கள் வெளியாகும். அதில் 12 படங்களுக்கு ராஜா தான் இசையமைத்திருப்பார். எத்தனையோ தயாரிப்பாளர்களுக்குப் பணம் வாங்காமல் இசையமைத்துள்ளார். இப்போது ஒரு படத்தின் பின்னணி இசைக்கு 30 நாள்கள் ஆகின்றன. ஆனால் இளையராஜா 3 நாள்களில் முடித்துவிடுவார். 

முதலில் அவரை ராஜா சார் என்றுதான் அழைப்பேன். பேண்ட் சட்டையிலிருந்து வேட்டி, ஜிப்பாவுக்கு மாறிய பிறகு சாமி என்றுதான் அழைக்கிறேன். இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் சாமி என்றுதான் அழைத்துக்கொள்கிறோம். மன்னன் படத்தில் 6 வரிகள் பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது. என்னை விட கமலுக்கு நல்ல பாடல்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள் என்றார் ரஜினி.

அதற்குப் பதில் அளித்த ராஜா, இதையே கமலிடம் கேட்டால், ரஜினிக்குத்தான் நல்ல பாடல்களை வழங்குகிறீர்கள் என்பார். ஏன் ராமராஜன், மோகனுக்கு நல்ல பாடல்களை நான் வழங்கவில்லையா? எந்த நடிகருக்கும் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவருடைய படங்களுக்கும் ஒன்றுபோலத்தான் நான் இசையமைத்தேன் என்றார். 

பிப்ரவரி 05: ‘எனக்கு ஷங்கரிடம் சான்ஸ் கேக்குறியா?’: இளையராஜாவின் கோபம் குறித்து ரோஹிணி பதில்!

இளையராஜா 75 நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றிய ரோஹிணியை இளையராஜா ஒரு தருணத்தில் கடிந்துகொண்டார்.

இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜாவைப் பாராட்ட மேடைக்கு வந்தார் இயக்குநர் ஷங்கர். அப்போது அவரிடம் ரோஹிணி, நீங்களும் ராஜா சாரும் மேடையில் இருக்கீங்க. உங்க ரெண்டு பேரோட கூட்டணியைப் பார்க்க நிறைய பேர் ஆவலா இருக்காங்க என்றார். அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட இளையராஜா, நீ எனக்கு சான்ஸ் கேக்கறியா என்று கடிந்துகொண்டார். அப்படி இல்லை என்று சமாளித்தார் ரோஹிணி. பிறகு ரோஹிணியிடம் ராஜா கூறியதாவது:

ஐ டோண்ட் லைக் திஸ்...  இப்ப ஏன் அந்த மேட்டரை எடுக்குற நீ? அவருக்குச் செளகரியமானவர்களை வைத்து அவர் வேலை பார்த்துட்டு இருக்கார். அவரைப் போய் ஏன் தொந்தரவு செய்றே என்று கோபமாகவும் படபடவென்றும் பேசினார். 

இந்தச் சம்பவம் சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து ரோஹிணி கேள்வி கேட்ட விதம் குறித்தும் ராஜாவின் கோபம் குறித்தும் பரவலான விமரிசனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை ரோஹிணி ட்விட்டரில் எழுதியதாவது:

இளையராஜா என்னிடம் பேசிய விதம் குறித்துப் பேசும் அனைவருக்கும் - இது ஒரு பெரிய விஷயமில்லை, இதை மறந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

பிப்ரவரி 05: இளையராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்வு இயக்குநர் பார்த்திபனால் சாத்தியமானது: விஷால்

தமிழக முதல்வரை நடிகரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால் நேரில் சந்தித்துப் பேசினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இளையராஜா 75 பாராட்டு விழாவுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு அளித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். இளையராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்வு இயக்குநர் பார்த்திபனால் சாத்தியமானது. விழாவில் ஒரே மேடையில் இளையராஜா பாட, ரஹ்மான் இசையமைக்க... இதுபோன்று வேறு எங்கும், கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்தில் கூட நடக்காது. எவ்வளவு கோடி கொடுத்தாலும் இதைப் பார்க்கமுடியாது. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் பாராட்டு விழாவில் ராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் தோன்றினால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்து செய்த விஷயம் இது. பாராட்டு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கினோம். நடிகர், நடிகைகள் பலர் வரவில்லை என்றார். 

பிப்ரவரி 11: தமிழகத்தில் எனது பாதம் படாத இடம் கிடையாது​!

இளையராஜாவின் 75 ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு  வெளிநாடு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  "எப்போதும் ராஜா' என்ற தலைப்பில்  இன்னிசைக் கச்சேரி  நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஈரோடு அருகே கங்காபுரம் டெக்ஸ்வேலி வளாகத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்று இளையராஜா பேசியதாவது: நான் ஏற்கனவே ஈரோடு புத்தக திருவிழாவில் பங்கேற்று  பேசியபோது, எனது குழுவினருடன் ஈரோட்டில் இசை நிகழ்ச்சி நடத்துவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்  இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் எந்தக் குக்கிராமத்திலும் எனது பாதம் படாத இடம் கிடையாது. எனக்கு எப்போதும் நெருங்கிய நண்பன் என்னுடைய ஆர்மோனிய பெட்டிதான். இந்தப் பெட்டியிலிருந்து வரும் இசையால் உங்களை குளிர வைக்கிறேன். எனது இசையையும், ரசிகர்களையும் என்னிடமிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது என்றார். பின்னணி பாடகர்கள் ஹரிசரண், சித்ரா, மனோ, பிரசன்னா, மதுபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பல்வேறு பாடல்களைப் பாடினர். ஹங்கேரி நாட்டைச்  சேர்ந்த இசையமைப்பாளர் லாஸ்லோ கோவாச் தலைமையிலான இசைக் குழுவினர் 40 பேர் உள்பட 100 -க்கும்  மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று இசைக் கருவிகளை மீட்டினர். 

நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு, சக்தி மசாலா நிறுவனங்கள் சார்பில் ஏலக்காய்கள் மூலமாக செய்யப்பட்ட செங்கோல்  பரிசளிக்கப்பட்டது. 

பிப்ரவரி 13: விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்துக்கு வித்தியாசமான பாணியில் இசையமைக்கவுள்ள இளையராஜா!

யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கி முடித்துள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது.

இப்படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கவுள்ளார்கள்.  இந்நிலையில் மாமனிதன் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளுக்குப் பாடல்களும் பின்னணி இசையும் இளையராஜா எப்படி அமைத்துத் தரப்போகிறார் என ஆவலாக உள்ளேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார். கமல் இயக்கிய ஹே ராம் படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்குத்தான் பாடல்கள் உருவாக்கினார் இளையராஜா. அதேபோல இந்தப் படத்திலும் முழுப்படமும் படமாக்கப்பட்ட பிறகு பாடல்களை உருவாக்கவுள்ளார்.

மார்ச் 15: இளையராஜாவுக்குப் பாரத ரத்னா, நடிப்புத் துறையில் எம்ஜிஆர் பெயரில் தேசிய விருது: பாமக தேர்தல் அறிக்கை

2019 மக்களவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பாமக சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் திரைத்துறை தொடர்பாகக் கூறப்பட்டுள்ளதாவது:

திரைத்துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது போன்று, நடிப்புத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாரத ரத்னா விருது பெற்ற நடிகரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் பெயரில் தேசிய விருது தோற்றுவித்து வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தும். 

மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலகம் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றுத் தர பாமக பாடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.

மார்ச் 16: பொள்ளாச்சி சம்பவம் குறித்து இளையராஜா!

சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில், பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வே என் உணர்வு என தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா, பொள்ளாச்சி சம்பவம்போல இன்னொரு சம்பவம் நடந்துவிடக்கூடாது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

ஏப்ரல் 11: தேர்தலில் இளையராஜா படத்தை பயன்படுத்த வேண்டாம்

அரசியல் லாபத்திற்காக இசையமைப்பாளர் இளைய ராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இளையராஜாவின் மியூசிக் மேனஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட  செய்தி: சில அரசியல் கட்சிகள் இந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகளைப் பெற இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தைப் பயன்படுத்துகின்றனர். எந்த அரசியல் கட்சியும், அவரது பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ அரசியல் லாபத்துக்காக பயன்படுத்த வேண்டாம் என்று  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 3: ரமணரின் ஆராதனை விழா: இளையராஜா பங்கேற்பு

திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமத்தில் பகவான் ரமணரின் 69-ஆவது ஆராதனை விழா நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை ஆஸ்ரமத்தில் உள்ள ரமண லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்த ரமண மாலை பாடல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ரமணர் பற்றிய பாடல்களை இளையராஜா பாடினார். விழாவில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் உள்ளூர், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மே 07: தீர்ந்தது மனவருத்தம்: ஒரே மேடையில் இளையராஜா - எஸ்பிபி!

இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடவுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இதையடுத்து இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக நிலவிய மனவருத்தம் தீர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியானது.

மே 13: ஏகாம்பரநாதர், சித்ரகுப்தர் கோயில்களில் இளையராஜா வழிபாடு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், சித்ரகுப்தர் கோயில்களில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.

இசையமைப்பாளர் இளையராஜா காஞ்சிபுரத்துக்கு வருகை புரிந்தார். அப்போது, பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவரை வரவேற்ற கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மூலவர், சோமாஸ்கந்தர், மாவடி, காலபைரவர் உள்ளிட்ட பிரகாரங்களில் அவர் வழிபாடு செய்தார். தொடர்ந்து, ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, சித்ரகுப்தர் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவர் தனது குடும்பத்தினருக்கு அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார்.

மே 13: இசை தெரபி மையம் அமைக்க இளையராஜாவுக்கு நிலம் வழங்கத் தயார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் இசை தெரபி சிகிச்சை மையம் அமைக்க இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நிலம் வழங்க புதுவை அரசு தயாராக இருப்பதாக அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில், 54-ஆம் ஆண்டு கம்பன் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலாவைப் பாராட்டி, கேடயம் வழங்கிய முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

தற்போது, அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளில் இசை தெரபி என்ற மருத்துவம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்ற இசை தெரபி மையத்தை புதுவை மாநிலத்திலும் அமைக்க இசையமைப்பாளர் இளையராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, புதுச்சேரியில் இந்த மையம் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்குத் தேவையான நிலத்தை இளையராஜாவுக்கு வழங்கவும் புதுவை அரசு தயாராக உள்ளது என்றார்.

மே 27: 96 பட சர்ச்சை!

இசை கொண்டாடும் இசை என்ற இளையராஜாவின் இசை கச்சேரி தொடர்பாக சினிமா எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துக்கு இளையராஜா பேட்டியளித்துள்ளார். அவரிடம், சமீபத்தில் வெளிவந்த 96 படத்தில் அப்படக் கதாநாயகி ராஜாவின் பாடல்களைப் பாடுவது குறித்து இளையராஜா கூறியதாவது: 

அதெல்லாம் மிகவும் தவறான விஷயங்கள். ஏதோ ஒரு காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலக்கட்டத்தின் பாடல்களையே பயன்படுத்தவேண்டும் என்கிற அவசியம் இல்லை. எங்கு அவர்களால் முடியவில்லையோ, அங்கு புகழ்பெற்ற பாடலைத் திணிக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அதற்கு ஈடான பாடல்களை அவர்களால் தரமுடியாததுதான். யோதோன் கி பாரத் என்றொரு ஹிந்திப் படம். இசை - ஆர்.டி. பர்மன். அந்தக் கதையில் ஒரு குடும்பத்தில் 3 சகோதரர்கள் உள்ளார்கள். சிறிய வயதில் சந்தோஷமாக ஒரு பாடலைப் பாடுகிறார்கள். அவர்கள் பிரிந்து போய், எங்கெங்கோ சென்று கஷ்டப்படுகிறார்கள். இறுதிக்கட்டக் காட்சியில் அதே பாடலைப் பாடுகிறார்கள். அந்தப் பாடலின் மூலம் குடும்பம் ஒன்றாகிறது. 20 வருடங்களுக்கு முன்பு வேறொரு இசையமைப்பாளர் பயன்படுத்திய பாடலை இசையமைப்பாளர் அந்தப் படத்தில் பயன்படுத்தவில்லை. அவர் சொந்தமாக கம்போஸ் செய்தார், 20 வருடத்துக்கு முன்பு இந்தப் பாடலைத்தான் பாடினார்கள், அதை மீண்டும் இப்போது பாடுகிறார்கள் என. அதை இசையென்று சொல்வதா?!

இது தன்னுடைய பலவீனத்தைக் காண்பிக்கிறது. இது ஆண்மையில்லாத்தனமாகத் தானே உள்ளது?! ஒரு கதையில் 1980-ல் உள்ள பாடல் என்றால் 80களில் வெளியான பாடல்களுக்கு நிகரான பாடலையே இசையமைக்கவேண்டும். ஏன் இசையமைக்க முடியவில்லை? ஜனங்களை என்னுடைய இசையை விட்டுப் பிரிக்கமுடியாது. அதனால் என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துகிறீர்கள். அது ஆண்மையில்லாத்தனம் என்றார். இதற்குப் பதிலளித்துள்ள 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, தான் என்றென்றும் இளையராஜாவின் ரசிகன் என்றார். 

மே 27: மீண்டும் இணைந்த இளையராஜா - எஸ்பிபி!

இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் இளையராஜா - எஸ்.பி.பி. இருவரும் மீண்டும் சந்தித்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ராயல்டி உரிமை தொடர்பாக இளையராஜாவுக்கும், எஸ்.பி.பி-க்கும் இடையே பிரச்னை வெடித்தது.  இது இசை ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. சினிமாவிலும் இருவரும் இணையவில்லை. அண்மைக் காலங்களில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளிலும் எஸ்.பி.பி. கலந்து கொண்டு பாடவில்லை.  இது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடந்து வந்தது. 

இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒத்திகைக்காக இளையராஜாவை திங்கள்கிழமை சந்தித்தார் எஸ்.பி.பி. இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து தங்களது நட்பைப் புதுப்பித்துக் கொண்டனர். ராயல்டி உரிமை பிரச்னைக்கு பிறகு, இருவரும் ஒரே மேடையில் தோன்றும் நிகழ்வாக இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சி அமையவுள்ளது. 

மே 31: உலகத்தில் எங்கேயும் நடந்ததில்லை!

இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் இளையராஜா கூறியதாவது:  

பல ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் கண்ணதாசனுக்கு சிலை எடுக்க வேண்டும் என்பதற்காக நான், எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் மற்றும் சுசீலா, ஜானகி என பெரும் இசைக் கலைஞர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு, மூன்று இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி கண்ணதாசனுக்கு  என் வீட்டுப் பக்கத்திலேயே சிலை வைத்தோம். இப்போது நடக்கவுள்ள இந்த இசை நிகழ்ச்சியை சினிமா இசையமைப்பாளர் சங்கத்துக்காக நடத்துகிறோம். இந்த இசை நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியால் மட்டும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய இயலாது. 

இந்த இசை நிகழ்ச்சி மூலமாக கிடைக்கும் தொகை நிகழ்ச்சியை நடத்துவதற்கே சரியாகி விடும். இசை சங்கத்துக்கும், இசைக் கலைஞர்களுக்கும் என்னுடைய அன்பளிப்பாக ஒரு நல்ல காரியம் செய்ய இருக்கிறேன். அது என்னுடைய சொந்த முயற்சியின் மூலம் நடக்கவுள்ளது. இது மக்களிடம் வசூல் செய்து நடத்துகிற காரியம் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். அறிவிக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் கடைசி நேரத்தில் வராமல் கூட போகலாம். அது அந்த கலைஞர்களின் மனநிலையைப் பொறுத்தது.  யாராவது ஒரு கலைஞர், எங்களால் கொடுக்க முடியாத தொகையைக் கேட்கலாம். அது போன்று ஏதாவது நடக்கலாம். 

நான் எங்கு சென்றாலும் மக்கள் இன்முகத்துடன் வரவேற்பது எனக்குத் தெரியும். 75-ஆவது பிறந்தநாளை, ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஆண்டு முழுவதும் கொண்டாடியது இங்கேதான் என்று நினைக்கிறேன். உலகத்தில் எங்கேயும் நடந்ததில்லை. கல்லூரியில்  மாணவ, மாணவிகள் கொண்டாடினார்கள். நான் பொதுவாக என் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. ஏனென்றால் பிறந்த நாள் என்பது ஒரே ஒரு முறைதான். அது மீண்டும் வருவதில்லை என்பது என் எண்ணம். 1943 -ஆம் ஆண்டு வைகாசி 20 நான் பிறந்த நாள்.  அந்த நாள் வருமா... மறுபடியும் வராது. அதனால் அதைக் கொண்டாடுவதில்லை. மக்கள் கொண்டாடுகிறார்கள். மக்களோடு மக்களாக நான் இருப்பதும், என் இசை அவர்களின் உள்ளத்தைத் தொடுவதும், உயிரில் கலந்து வாழ்வதைப் போல இருக்கிறேன். மக்களுக்கும் எனக்குமான பிணைப்பு இருக்கிறதே,  அது கயிறு போட்டோ அல்லது வேறு எதைக் கொண்டோ கட்டப்பட்டதில்லை.  இசைதான் எங்களைப் பிணைத்திருக்கிறது. அதுதான் அவர்களை மயக்கி வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத புது விதமாக பின்னணி இசை எப்படி வாசிக்கப்படும் என்பதை இசைத்துக் காட்டப் போகிறோம். அது ரசிகர்களுக்கு புது அனுபவத்தைத் தரும். முதன்முறையாக 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றார் இளையராஜா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com