நடிகை சமந்தா பிறந்த நாள்: பல்லாவரத்திலிருந்து கிளம்பிய அழகுப் புயல்!

அவருடைய கவனமெல்லாம் அன்று முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும்தான் உள்ளது....
நடிகை சமந்தா பிறந்த நாள்: பல்லாவரத்திலிருந்து கிளம்பிய அழகுப் புயல்!


தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தந்தைக்கும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்க்கும் பிறந்தவர் சமந்தா. வீட்டில் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுவோம். எனக்குத் தெலுங்கே தெரியாது. படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு தெலுங்கைக் கற்றுக்கொள்கிறேன் என்கிறார் சமந்தா. சென்னைப் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்தில் வீடு. பல மேடைகளில், தான் பல்லாவரம் பகுதியிலிருந்து வந்தவள் என்று பெருமையாகக் கூறியிருக்கிறார். ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த பிறகு, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அழகான தோற்றம் கொண்ட சமந்தாவுக்கு கல்லூரிக் காலத்தில் மாடலிங் வாய்ப்புகள் வந்துள்ளன. நாயுடு ஹால் உள்ளிட்ட பல நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். விளம்பரப் படங்களில் சமந்தாவைப் பார்த்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் உடனடியாகத் தான் இயக்கும் மாஸ்கோவின் காவேரி படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். அதுதான் சமந்தா ஒப்புக்கொண்ட முதல் படம். ஆனால் முதலில் வெளியான படம் - விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அதன் தெலுங்குப் பதிப்பான Ye Maaya Chesave. தமிழில் த்ரிஷாவும் தெலுங்கில் சமந்தாவும் கதாநாயகிகளாக நடித்து வெற்றி பெற்ற படம். இருவருமே மற்ற மொழிப் பதிப்பில் சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் நடித்ததால், உலகத் தமிழ் மாநாட்டுக்காக கெளதம் மேனன் இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலின் விடியோவில் சில நொடிகள் இடம்பெறவும் சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

* முதல் தெலுங்குப் படமே ஹிட் ஆனதால் தெலுங்குத் திரையுலகம் சமந்தாவை அரவணைத்துக்கொண்டது. அடுத்து தெலுங்கில் நடித்த பிருந்தாவனமும் ஹிட். மகேஷ் பாபுவுடன் நடித்த டூக்குடு, வசூலை அள்ளியது. இதனால் குறுகிய காலத்தில் தெலுங்குத் திரையுலகில் நட்சத்திரமானார் சமந்தா. அடுத்ததாக அமைந்தது தான் ராஜமெளலி இயக்கிய ஈகா.  

* தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் நான் ஈ (ஈகா) வெற்றி பெற்றது. இதனால் தன் சொந்த ஊரில் முதல்முறையாக வெற்றியை ருசித்தார் சமந்தா.

* தெலுங்கில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தாலும் தமிழில் மட்டும் சமந்தாவால் உடனடியாக வெற்றி பெற முடியவில்லை. பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி போன்ற ஆரம்பக் காலப் படங்கள் வெற்றி பெறாததால் பெரிய படங்களில் நடிக்க முடியாமல் தவித்தார்.

* கல்லூரியில் பயிலும் வரை தமிழ்ப் படங்களை சமந்தா பார்த்தது கிடையாது. ஒருமுறை கல்லூரி விழாவுக்கு வந்திருந்த சூர்யாவைப் பார்த்தவுடன் அவருடைய ரசிகையாகியிருக்கிறார். பிறகுதான் காக்க காக்க படத்தைப் பார்த்திருக்கிறார். அதுதான் நான் பார்த்த முதல் தமிழ்ப்படம் என்கிறார் சமந்தா.

* எந்த நடிகையாலும் இதைத் தாங்கியிருக்க முடியாது. தெலுங்கில் பெரிய வெற்றிகள் பெற்றிருந்த நேரத்தில் தமிழில் ஒரே சமயத்தில் ஷங்கர் இயக்கிய ஐ, மணி ரத்னம் இயக்கிய கடல் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் சமந்தாவுக்குக் கிடைத்தன. ஆனால் அந்தச் சமயத்தில் தோல் ஒவ்வாமை காரணமாக இந்த இரு படங்களிலும் நடிக்க முடியாத நிலைமை அவருக்கு ஏற்பட்டது. சில மாதங்கள் ஓய்வெடுத்துக்கொண்டு பிரச்னைகள் முழுமையாகத் தீர்ந்த பிறகுதான் படப்பிடிப்புக்குச் செல்ல ஆரம்பித்தார்.

* முதல் படத்துக்குப் பிறகு தொடர்ந்து வாய்ப்பளித்தார் கெளதம் மேனன். நடுநிசி நாய்களில் சிறிய வேடம் அளித்தவர், நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் கதாநாயகியாக சமந்தாவைத் தேர்வு செய்தார். கெளதம் மேனன் இயக்கம், இளையராஜா இசை என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படமும் சமந்தா எதிர்பார்த்த ஒரு வெற்றியைத் தரவில்லை. எனினும் படத்தில் இடம்பெற்ற பல உணர்வுபூர்வமான காட்சிகளில் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு சமந்தாவுக்குக் கிடைத்தது.

* 2013-ல் Seethamma Vakitlo Sirimalle Chettu, Attarintiki Daredi ஆகிய படங்கள் சமந்தாவுக்கு வெற்றியை அளித்தன. இதன்பிறகு மனம், அ ஆ, ரங்கஸ்தலம், ஓ பேபி என தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துவிட்டார் சமந்தா. திருமணத்துக்குப் பிறகும் அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையிலும் புகழிலும் குறையில்லாமல் பார்த்துக்கொள்கிறார்.

* மணி ரத்னம், ஷங்கர் ஆகிய இரு மெகா இயக்குநர்களின் படங்களில் நடிக்க முடியாததால் சமந்தாவுக்குத் தமிழில் இறங்குமுகமாக இருந்தது. இதை உடைக்க அவர் பயன்படுத்திக்கொண்ட படம் தான் அஞ்சான். தமிழில் அதுவரை நடித்த படங்களில் எல்லாம் அடுத்த வீட்டுப் பெண் போன்ற ஒரு தோற்றத்தை அளித்ததால் அதை மாற்ற முயற்சி செய்தார். தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அஞ்சான் படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார். படம் வெற்றி பெறாமல் போனாலும் சமந்தாவுக்கு ஒரு புதிய தோற்றத்தை அளித்தது அந்தப் படம்.

* 2010-ல் அறிமுகமானாலும் 2014-ல் தான் சமந்தா நடித்த ஒரு நேரடித் தமிழ் படம் ஒன்று பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் ஹிட் ஆகி சமந்தாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து விஜய், விக்ரம் தனுஷ், சூர்யா என வரிசையாகப் பெரிய நடிகர்களில் நடிக்கும் வாய்ப்பு சமந்தாவுக்குக் கிடைத்தது.

* கத்தி வெற்றியை சமந்தாவால் தக்கவைத்துக்கொள்ள முடியாதபடி 2015-ல் வெளியான தங்கமகன், 10 எண்றதுக்குள்ள ஆகிய இரு படங்களும் தோல்வியடைந்தன. கத்தி வெற்றிக்குப் பிறகு அதிகமான தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார் சமந்தா. அதற்குப் பிறகு சமந்தா நடிப்பில் வெளியான ஆறு படங்களில் 5 தமிழ்ப் படங்களாக இருந்தன.

* 2016 தமிழ்ப் புத்தாண்டுக்கு விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி, சமந்தாவுக்கு இன்னொரு பெரிய வெற்றியை அளித்தது. எனினும் அதே வருடத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த 24 படம் தோல்வியடைந்தது.

* 2017-ல் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்த மெர்சல் படமும் வெற்றி பெற்றது. இதனால் விஜய் - சமந்தா கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது. விஷாலுடன் இணைந்து நடித்து 2018-ல் வெளியான இரும்புத் திரையும் வெற்றி பெற்றது.

* இரும்புத் திரைக்குப் பிறகு சமந்தா நடித்த தமிழ்ப் படங்கள் தோல்வியையே தழுவின. சீமராஜா, யு டர்ன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் சமந்தாவுக்கு ஆதரவாக அமையவில்லை. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் சமந்தா.

* தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா கதையை கெளதம் மேனன் ஹிந்தியில் இயக்கியபோது சிறிய வேடத்தில் நடித்தார். அவ்வளவுதான். மற்றபடி அவருடைய கவனமெல்லாம் அன்று முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும்தான் உள்ளது.

* சமீபகாலமாக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார் சமந்தா. யு டர்ன், மகாநடி, ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ், ஜானு போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

* தமிழில் பல படங்களில் சொந்தக் குரலில் பேசியுள்ளார் சமந்தா.

* பிரதியுஷா என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் சமந்தா. இந்த அமைப்பின் மூலம் ஏழைக் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்து வருகிறார்.

* 2017-ல் ஜஸ்ட் ஃபார் வுமன் என்கிற பெண்கள் பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம்பெற்றார் சமந்தா. கைத்தறியால் உருவான ஆடைகளை சமந்தா அணிந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தெலங்கானா மாநிலத்தின் கைத்தறி ஆடைகளின் தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். தெலங்கானா மாநிலத்தில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த இப்பதவி சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. இதனால் கைத்தறித் தொழிலுக்குப் பிரபலமான டப்பாகா என்கிற கிராமத்துக்குச் சென்று கைத்தறி நெசவாளர்களைச் சந்தித்தார் சமந்தா. தான் இனிமேல் தெலங்கானா கலைஞர்களின் கைத்தறி உடைகளை அதிகளவில் உடுத்துவேன், இந்த உடைகளை மக்களிடம் பரப்புவேன் என்று அவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கைத்தறி உடைகளை அணிந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்றது. கைத்தறிதான் எதிர்காலம். தொழிலாளியால் உருவாக்கப்படும் துணியை அணிந்தால் அதில் எப்போது ஒரு சிறப்பு இருக்கும் என்று கூறினார் சமந்தா.

* பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை 2017 அக்டோபரில் திருமணம் செய்துகொண்டார் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறினார்கள். இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com