எக்கணத்திலோ
பெண்ணொருத்தி கேட்கிறாள்
அவரை நீங்கள் காதலித்தீர்களா?
சன்னச் சிரிப்பில் முகத்தாமரை மலர
யார் தான் அவரைக் காதலிக்கவில்லை;
கேள்விக்கு கேள்வியே பதிலானது
அக்கணமே;
வதந்திகளைப் பதங்கமாக்கி
புதைகின்றன யூகங்கள்;
தெற்காசியப் பெருநிலத்தில்
வாழ்வெனும்
நெருஞ்சி முற்படுகளத்தில்
நீயே சொன்னாற்போல்
மனைவி என்றால் மரியாதை கிடைக்கலாம்
இறந்தும் அருகிருக்கும் புகழ் கிடைக்குமா?
உனக்குக் கிட்டியது அம்மா
நிறைவுடன் நீ போய் வா!
குறத்தி குத்திய பச்சையாய்
என்றென்றும் உன் மக்கள் நெஞ்சத்தில்
நீ இருப்பாய்!
காவிரி தந்த கலைச் செல்வியாய்
எங்கிருந்தோ வந்தவளே;
இருந்திருக்கலாம் இன்னும் சில நாள்
இத்தரணியிலே!