தினமணிக்கும், எனக்கும் 1966ஆம் ஆண்டில் இருந்தே தொடர்பு உண்டு. முதலில் படிப்பது தலையங்கம். தொடர்ந்து, துணைக் கட்டுரை மற்றும் செய்திகளைப் படிப்பேன். ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் கலாரசிகன் பகுதியை தவறாமல் படித்து வருகிறேன்.
தினமணியை படிப்பதன் மூலம் உலக அளவில் எந்தவித தகவல்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. நீதித்துறை பற்றி அண்மையில் வெளியான தலையங்கமும், காஷ்மீர் விவகாரம் குறித்து எழுதப்பட்ட தலையங்கமும் உண்மையை அப்படியே வெளிப்படுத்தியுள்ளது.
இதேபோல, இளைஞர்மணி, மகளிர்மணி, வெள்ளிமணி இணைப்புகளில் வெளியாகும் கட்டுரைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. கடந்த ஆண்டு 60 நாள்கள் வெளிநாட்டில் தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் வெளியான தினமணி இதழ் மற்றும் வெள்ளிமணியில் வெளியான கட்டுரைகளை வீட்டில் சேகரித்து வைக்குமாறு கூறி, ஊர் திரும்பிய பிறகு படித்து முடித்த பிறகே எனக்கு முழுமையான நிம்மதி ஏற்பட்டது.
வெள்ளிமணியில் அனைத்து மதத்தினரும் போற்றும்படி கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருவது சிறப்பாக உள்ளது.
தினமணி பத்திரிகை என்றாலே உண்மையை குறிப்பிடும் என்பதை என்னால் ஆணித்தரமாக நம்ப முடிகிறது. தினமணியில் வரும் கட்டுரைகள் பற்றி பலமுறை வழக்குரைஞர் சங்கத்தில் வைத்து சக நண்பர்களோடு விவாதித்துள்ளேன். நடுநிலையோடு மக்கள் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து தினமணியில் செய்திகளும், கட்டுரைகளும் வந்து கொண்டு இருக்கின்றன.
கடந்த காலங்களில் தூத்துக்குடி பகுதியில் பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக நாங்கள் நடத்திய போராட்டங்கள் தினமணியில் செய்தியாக வெளியாகின. அந்தச் செய்தி வெளியான சில நாள்களிலேயே பிரச்னை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தீர்த்து வைத்துள்ளது எங்களுக்குப் பெருமை.
- எம். சொக்கலிங்கம், வழக்குரைஞர், தூத்துக்குடி