கடந்த 1957-இல் இருந்து தினமணியை என் கண்ணிலும் கருத்திலும் சுமந்து வருகிறேன். காலை எழுந்தவுடன் காபியை ஒரு கரம் ஏந்தும்; தினமணியை மற்றொரு கரம் ஏந்தும். ஆசிரியர் ஏ.என். சிவராமன் எழுதிய பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகளையும் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருக்கிறேன். எனது மேடைப் பேச்சுக்கு விதை நெல்லாக அமைந்தவை அவரது எழுத்துகள் எனலாம்.
ஆசிரியர் இராம.சம்பந்தம் காலத்திலிருந்து தினமணியை வாசித்து வருவதோடு அதில் நடுப்பக்கக் கட்டுரைகளையும் எழுதி வருகிறேன். நான் எழுதிய கட்டுரைகளை 5 நூல்களாக வெளியிட்டிருக்கிறேன். அந்த நூல்கள் எனக்கு திசைகள் தோறும் நண்பர்களை தேடித் தந்திருக்கின்றன. நான் எழுதிய கட்டுரைகளில் ஒன்றைக் கூட வெட்டாமல், ஒட்டாமல் பிரசுரித்த பெருமை தினமணியை சாரும்.
ஐராவதம் மகாதேவன் எதையும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய நெற்றிக் கண்ணையும் தினமணிக்கு வழங்கியிருக்கிறார். வைத்தியநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் தினமணியின் வாசகர் வட்டத்தை விசாலப்படுத்தினார். தினமணியைத் திரும்பி பார்க்காதவர்களையும் விரும்பி படிக்க வைத்தவர் வைத்தியநாதன். ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கண்டறியும் ஜன்னலையும் திறந்து வைத்தவர் அவர்.
ஓவியர் தாமரை வரைந்த புதுவிதமான கார்ட்டூன்கள் இன்றைக்கும் என் கண்ணில் நிற்கின்றன. அதுபோன்ற கார்ட்டூன்கள் இப்போது எந்தப் பத்திரிகைகளிலும் காண முடிவதில்லை. தினமணி தலையாய தலையங்கங்களை தருவதோடு தலையாய பிரச்னைகளை தரத்தோடு படைத்து வருகிறது. அதன் தொண்டு வளர்க வாழ்க.