சுமார் 30 ஆண்டு காலமாக நான் தினமணி வாசகராக இருந்து வருகிறேன். ஆரம்பத்தில் இருந்தே தினமணியின் துணிச்சலான தலையங்கங்களும், ஆய்வுக் கட்டுரைகளும் அதன் தனி முத்திரையாகத் திகழ்கின்றன.
தினமணியின் ஆரம்பப் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை உள்ள எல்லா செய்திகளும் பரபரப்புக்காக எழுதப்படாமல் உள்ளதை உள்ளபடி உரைக்கும் உண்மையின் உரைகல்லாக இருப்பதுதான், இப்பொழுது 86-ஆம் ஆண்டில் வெற்றிகரமாகக் கால் பதித்துத் தன் வெற்றிப் பயணத்தைத் தொடரக் காரணம்.
தினமணி வாசகர் கடிதங்களும், நடுப்பக்கக் கட்டுரைகளும் தரமாக இருப்பதும் இதன் வெற்றிக்கு மற்றொரு காரணம்.
நம் நாட்டிலும் நம் தமிழகத்திலும் நடக்கும் தினசரி செய்திகளின் தரம் அறிந்து அவற்றை முதல் பக்கத்தில் கொடுப்பது தினமணியின் தனிச்சிறப்பு.
நம் நாட்டின் விடுதலைப் போரின் ஆரம்பம் முதல் இன்று வரை நாட்டு நலனில் அக்கறை கொண்டு உண்மையான தேசத் தியாகிகள், தலைவர்களின் செய்திகளை மக்களிடையே எடுத்துச் சென்று சேர்த்து வரும் அரிய சேவையை தினமணி செய்து வருவது மற்றொரு சிறப்பு.
ஆக முக்கிய நாட்டுச் செய்திகள், விளையாட்டு, தலையங்கம், ஆய்வுக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள், புகைப்படங்கள், இலக்கியச் செய்திகள்... என எல்லாமே தரமாக உண்மையாக இருப்பதால் தினமணியை தினமும் வாங்கிப் படித்து சுவைத்து மகிழ்ந்து வருகிறேன்.
பலமுறை எனது வாசகர் கடிதங்கள், விவாதமேடை கடிதங்கள் தினமணியில் பிரசுரமாகி உள்ளன.
தினமணியின் இணைப்புப் புத்தகங்களும், இளைஞர்களை, மாணவர்களை, புதிய இலக்கிய அன்பர்களை ஊக்குவிக்கும்படி அமைந்துள்ளன.