நந்தமிழ்நாடு போற்றும் நாளிதழ்களில் குறிப்பிடத்தக்க சிறப்புடையது "தினமணி' நாளிதழ். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தோன்றிய தினமணி பிற்காலத்தில் கதிர், தமிழ்மணி, சிறுவர்மணி, வெள்ளிமணி, மகளிர்மணி, இளைஞர் மணி, கொண்டாட்டம் என்றெல்லாம் அணி அணியாக இனிய ஒளி வீசி அனைவர் இதயங்களையும் கவர்ந்து வருகிறது. உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை.
"தினமணி நாளிதழ் வருங்கால தமிழகத்துக்கு நல்வழி காட்டும்; நாடறிந்து போற்றும் நடு நாயகமாக, பொறுமை, புதுமைச் சிந்தனைகளோடு பூத்து மணம் வீசும்'' என்று தீர்க்கதரிசனச் சிந்தனையுடன் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வாழ்த்துப்பா அருளியதை மறக்கத்தான் இயலுமா?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய வாழ்த்துப் பாவிலிருந்து சில வரிகள்..
வையமிசைப் புத்தொளி வீசிப் பொலிந்து தினமணி நீ
நித்தமும் வாழ்க நிலைத்து
எக் கலையும் போற்ற எழுந்த தினமணி நீ
மக்களிடை வாழ்க வளர்ந்து
எவ்வறமும் போற்றி இனிய தினமணி நீ
செவ்வையுற வாழ்க தினம்
தேடும் அடியவர் தம் சிந்தையிலும் அம்பலத்தும்
ஆடும் பெருமான் அருளாலே - நீடு புகழ்
நன்னகராம் சென்னை நகரில் உதித்த "கதிர்'
மன்னுலகில் வாழ்க வளர்ந்து.
கவிமணி "தினமணி கதிர் இணைப்பு இதழ்' பற்றி தனியே சிறப்பித்து எழுதிய பாடல் இது. கவிமணி - தினமணி இரண்டும் லட்சிய வாசகனின் கண்மணிகள். ஆண்மணிகள், பெண்மணிகள், குழந்தை மின்மினிகள் அனைவரும் படிக்க வேண்டிய பன்மணிக் கருத்துப் பெட்டகமே தினமணி.
- எஸ். அருணாசலம்