தமிழர் திருநாளும் திருவள்ளுவர் தினமும்...

சங்குகளும் திருவிழாக்களும், சமுதாயத்தை இணைக்கும் சக்தியாக மட்டுமின்றி, மனிதர்களை இயற்கையோடும் காலத்தோடும் இணைக்கும் சங்கிலிகளாகவும்


சங்குகளும் திருவிழாக்களும், சமுதாயத்தை இணைக்கும் சக்தியாக மட்டுமின்றி, மனிதர்களை இயற்கையோடும் காலத்தோடும் இணைக்கும் சங்கிலிகளாகவும் உள்ளன. குறிப்பாக, தமிழ் மாதங்கள் எல்லாம் பௌர்ணமியுடன் இணைத்துப் பெயரிடப்பட்டுள்ளன.
சித்திரை நட்சத்திரம் பௌர்ணமியில் வருவதால் சித்திரை மாதம் என்றும்; வைகாசி, விசாக நட்சத்திரத்தை ஒட்டியும்; மார்கழி, மிருகசீரிஷ நட்சத்திரத்தை ஒட்டியும் பெயர்பெற்றுள்ளன. இந்த நட்சத்திரங்கள் முருகன், சிவன் போன்ற தெய்வங்களுக்குப் புனிதமானவையாகப் போற்றப்படுகின்றன.
காலச் சுழற்சியைக் குறிக்கும் நாளும், பருவமும் மனித வாழ்வின் சந்தங்களோடு இணைக்கப்படுகின்றன. காலச் சக்கரத்தின் சுழற்சியில், நிரந்தரம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது; வாழ்வு, புத்தாடை புனைந்து தன்னைப் புதுக்கிக் கொள்கிறது.
தொல்காப்பியம், காலப்பகுப்பையொட்டி காதல் வாழ்வு நிலைகளைக் காட்டுகிறது. இளவேனில் காலத்தைப் புணர்ச்சியோடும், கார் காலத்தை இருத்தலோடும், வேனிற் காலத்தைப் பிரிவோடும், ஊடலையும் இருத்தலையும் இணைக்கின்றது. ஐந்திணைக்கும் சேயோன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியவை ஆகியவை தனித்தனிக் கடவுள்களாகக் கூறப்படுகின்றனர்.
தமிழ் மரபில், மார்கழி மாதம் திருமாலுக்கும், சிவனுக்கும் உரிய மாதங்களாகக் கருதப்பட்டு, மாதம் முழுதும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை இசைத்து கூட்டு வழிபாடு, பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது.
மாதங்களிலே நான் மார்கழி என்று கண்ணனாலே சிறப்பிக்கப்படும் மாதத்தில், கோபியர்கள் கண்ணனை சிறப்பித்துப் பாடி, நோன்பு நோற்று, மழையையும் நல்ல கணவர்களையும் வேண்டுகிறார்கள். அதே போன்று, திருவெம்பாவையில் சிவனடியார்கள், முன்னைப் பழமைக்குப் பழமையாகவும் பின்னைக்குப் பெயர்த்தும பெற்றியனாக உள்ள சிவன் புகழ்பாடிப் புனலாடுகின்றனர். இரண்டிலும் இயற்கை வழிபாடு இறைவழிபாடாக மலர்ந்தாலும், அடிப்படையில் செழிப்புத் தொன்மத்தின் விளக்கமாக உள்ளன. மழையும், பொய்கையும் கடவுளின் கருணையின் குறியீடுகளாகின்றன.
திருப்பாவை, திருவெம்பாவையின் தொடர்ச்சியான திருப்பள்ளியெழுச்சி ஆகிய இரண்டுமே இறையருளால் வாழ்வு வளம்பெறுவதைக் கூறி முடிகின்றன. திருப்பாவை செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால், எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்றும், திருப்பள்ளியெழுச்சி மெய்க் கருணையும், நீயும் அவனியிற்புகுந்து எமை ஆட்கொள்ளவல்லாய் என்றும் நிறைவு பெறுகின்றன.
இதன் தொடர்ச்சியாகவே தைப் பொங்கலை, சமயச் சார்பு மிகுதியில்லாத வழிபாட்டு விழாவாகக் கருத வேண்டும். சங்க காலத்துத் தை நீராடல் பற்றி பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். தைஇத் திங்கள் தன்கயம் போல என்று புறநானூறும், தைஇ நின்ற தண் பெயற் கடை நாள் என்று அகநானூறும் கூறுவதைக் காட்டுகிறார். இப்போது மகளிரே நீராடினர் என்றும் கூறுவார்.
இதற்குப் பின் எழுநூறு ஆண்டுகளுக்குப் பின் சமய உணர்வுள்ள மார்கழி நீராடலாயிற்று, பரிபாடலிலும் கலித்தொகையிலும் தை நீராடலே சமய உணர்வோடு பேசப்படுகிறது. திருவாதிரையன்று இது தொடங்குவதாகவும் குறிப்பிடப்படுகிறது. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நாள் என்று ஆண்டாள் தொடங்குவதால், இது மார்கழி பௌர்ணமியில் தொடங்கியிருக்க வேண்டும். எது எப்படியாயினும் தை முதல் நாள் விழாவை, மார்கழி நோன்பின் தொடர்ச்சியெனக் கொள்வதில் தவறில்லை.
தை முதல் நாள், பொங்கல் திருநாளாக நீண்ட காலமாகவும், அண்மைக் காலமாக தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இது அடிப்படையில் இயற்கையோடு இணைந்த, சூரியனை வழிபடும் திருநாள்; உழைப்பைப் போற்றும் பெருநாள். 
பொதுவாக, தமிழ் மாதங்கள் திங்களின் இயக்கத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன. ஆனால், தை மாதப் பிறப்பு, சௌர மானம் என்ற சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கு முறையை ஒட்டியுள்ளது. உத்தராயணம் அல்லது சூரியனின் வடதிசை பயணம் தை முதல் நாளில் நிகழ்வதால், தைப் பொங்கல் சூரிய வழிபாடாகவும் உள்ளது. 
சூரியனால் உயிர்களும் உழவும் சிறப்புறுவதால், அவன் புத்தொளி வீசி வருவதை, அறுவடைக்குப் பின் புதுப் பானையில் புத்தரிசியில் பொங்கலிட்டு, அவனுக்கு நன்றி செலுத்தும் நன்னாளாகிறது. போகியில் பழையன கழிந்து, பொங்கலில் புதியன பொலிகிறது.
அறிஞர் தெ.பொ.மீ. கருத்துப்படி, மனிதனுடைய சிறப்பு, கூடி உழைத்து, கூடி வாழ்ந்து, கூடி அனுபவித்தலே பொங்கல் திருநாள். மனிதனோடு உழைத்த மாடுகளுடன் கூடிக் கொண்டாடப்படுவதால், இது தலைசிறந்த கூட்டுறவுத் திருநாளாகும். மேலும், இத் திருநாளை சாதி, மத பேதமின்றி அனைவரும் இணைந்து கொண்டாடுவதால் இதை ஒரு சமரச , சமதர்ம, சமநிலைத் திருவிழா என்றும் அவர் கூறுவார்.
தமிழர்களின் இயற்கை மற்றும் உழைப்பைப் போற்றும் நெறியின் வெளிப்பாடாக உள்ள பொங்கல் விழா, தமிழர் திருநாளாக மாறியதில் வியப்பில்லை. சென்ற நூற்றாண்டில் தமிழின மறுமலர்ச்சி பல நிலைகளிலும் நிகழ்ந்ததன் ஒரு பகுதியே இது. இது, தமிழகம் தாண்டி மலேசியா, சிங்கப்பூர் போன்ற மற்ற உலக நாடுகளிலும் சிறப்பாகத் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது இலக்கியம், மொழி சார்ந்த நிகழ்ச்சிகளும் நடைபெறத் தொடங்கின.
தமிழர் திருநாளையொட்டி வரும் ஜல்லிக்கட்டும் பண்டைத் தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்த வீர விளையாட்டே. இது ஏறுதழுவல் என்று முல்லைக்கலியில் கூறப்பட்டுள்ளது. இந்த விழாவும், காளைகளும் இளங்காளைகளும் இணைந்து வாழ்ந்ததன் எடுத்துக்காட்டே.
இப்படி உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் இந்த விழாவுக்கு அடுத்து, உலகத் தமிழரின் முழுமையான அடையாளமாக உள்ள திருக்குறளைப் போற்றும் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்படுவதும் இயல்பே. திருக்குறளும் உழவைப் பெரிதும் போற்றுகிறது.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவதை தலையான பண்பாடாகக் கூறுகிறது. ஒரு நாட்டின் சிறந்த செல்வமாக தள்ளா விளைவுளைக் குறிக்கிறது. மாடு என்ற சொல்லை செல்வம் என்ற பொருளில் பயன்படுத்துகிறது. அனைத்துக்கும் மேலாக அறம், பொருள், இன்பம் என்ற தமிழ் வாழ்வின் முப்பெரும் கூறுகளை முப்பாலாகக் காட்டுகிறது.
இந்திய தத்துவ மரபிலேயே தனித்தன்மை வாய்ந்தது திருக்குறள் என்பார் ஆல்பர்ட் ஸ்வைட்சர்; அதற்குக் காரணம், அதன் வாழ்வு ஏற்புத் தத்துவம். திருக்குறளின் அடித்தளம், அன்பு என்னும் அக ஒழுக்கம். அந்த அன்பு காதலாக அரும்பி, குடும்பப் பாசமாக மலர்ந்து, உலகையும் எல்லா உயிர்களையும் ஏற்கும் அருளாக மணம் வீசுவதற்கு வாழும் வழியை ஆக்க நெறியாக, எல்லோரும் அவரவர் நிலையிலிருந்து உய்வு பெறும் ஒழுக்க நெறியாக அது காட்டுகிறது.
தனி மனித, குடும்ப வாழ்வை அறமாகவும், சமூக வாழ்வைப் பொருளாகவும், காதலை இன்பமாகவும் குறள் வகுத்துள்ளது. ஓர் அறநூலிலே காதலின் நுணுக்கங்களை விரிவாக, ஆனால், நெறி தவறாமல் கவித்துவத்தோடும், நாடகப் பாங்கோடும் காட்டுவது ஒரு புரட்சியே. ஊடல் நுணுக்கத்தை ஓர் அதிகாரம் முழுதும் கூறிவிட்டு, ஊடுதல் காதற்கின்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்று, இன்பம் இன்பம் என்று இரண்டு முறை கூறி முடிகிறது. திருக்குறள் உயிர் இறையோடு ஒன்றுவதில் தொடங்கி, உடல்கள் காதலில் ஒன்றாவதில் முடிகிறது. தமிழின் முதல் உயிர் எழுத்தான அகரத்தில் தொடங்கி, கடைசி மெய்யெழுத்தோடு முடிகிறது.
இப்படித் தமிழ், தமிழரின் முதலும் முடிவுமாக இருந்தாலும், திருக்குறள் சாதி, மதம், இனம் ஏன், தேச எல்லைகளைக் கடந்த ஒரு பொதுமையான நெறியைக் கூறுவதால், அதை ஒரு உலகப் பொது நூலாக யுனெஸ்கோ அங்கீகரிக்கும் என நம்புவோம்.
யாதானும், நாடாமால், ஊராமால்... என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்றும் பிரகடனம் செய்யும் திருக்குறளை உலகப் பாரம்பரிய சின்னமாக மட்டுமின்றி, உலக நாடாளுமன்றத்தின் அறநெறி சட்ட நூலாக ஐ.நா. அறிவித்தால்தான், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்ததாகத் தமிழர்கள் பெருமை பெற முடியும்.
ஷேக்ஸ்பியர் பிறந்த ஏப்ரல் 23-ஆம் தேதியை, உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுவது போன்று, திருவள்ளுவர் நாள் உலக அறநூல் நாளாகக் கொண்டாடப்படவேண்டும்.
இதற்கு முதல்கட்டமாக திருக்குறளுக்கு தேசிய நூல் என்றோ, வேறு வகையிலோ தனி அங்கீகாரத்தை மத்திய அரசு தர வேண்டும். இந்தியாவின் பன்முகப் பண்பாட்டின் அடையாளமாகத் திருக்குறள் விளங்குகிறது. இதில், இந்து மதத்தின் பயன் கருதாப் பணி, பௌத்தத்தின் தர்ம நெறி, ஜைனத்தின் அஹிம்சை, கிறிஸ்துவத்தின் அன்பு நெறி, இஸ்லாமின் சகோதரத்துவம், சீக்கிய நெறியின் சமத்துவம் ஆகிய அனைத்தும் ஒருசேரப் போற்றப்படுவதால் இந்தியாவின் பொது அறநூலாக இதை மத்திய அரசு அறிவிப்பது பொருத்தமாக இருக்கும்.
இதைத் தமிழர்களின் பொதுமையான வாழ்வியல் நூலாக தமிழக அரசும் ஏற்க வேண்டும். தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வின் வழிகாட்டியாக, ஒளிவிளக்காக ஏற்று, அவரவர் நிலைக்கேற்ப வள்ளுவ நெறியில் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com