இந்திய வாக்காளர்களே...

உலக நாடுகளிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா; பல கோடிக்கணக்கான வாக்காளர்களைக் கொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு


உலக நாடுகளிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா; பல கோடிக்கணக்கான வாக்காளர்களைக் கொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற பொதுத் தேர்தலையும், பல மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் தவறாது நடத்துவது என்பது பெரும்  சாதனையாகும்.
பல போராட்டங்களில் ஏராளமான உயிர்களைப்  பலிகொடுத்து, பல லட்சம் பேர்  சிறைவாசம் செய்து பெற்ற சுதந்திரத்தின் பெரும்பலனாக  விளங்குவது நாம் பெற்றிருக்கும் வாக்குரிமை ஆகும்.
இவ்வாறு பெற்ற  வாக்குரிமையினை எவ்வாறு நாம் பயன்படுத்தியிருக்கிறோம் என்ற  சில விவரங்களைப்  பார்ப்போம்; சுதந்திரத்துக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில்,  குறிப்பிட்ட அளவு சொத்துரிமை உள்ளவர்களும்,  படித்தவர்களும் என  மக்கள்தொகையில் வெறும் 12  சதவீதத்தினர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர்.
ஆனால், சுதந்திரம் அடைந்தவுடன், குறிப்பிட்ட வயது வந்த எல்லோரும், கல்வியறிவு-சொத்துரிமை என்ற தளைகள் எதுவுமற்ற, வாக்காளர்களாக உரிமை பெற்றனர். 1951-இல்  நடைபெற்ற   முதல் பொதுத்தேர்தலில், 46 சதவீத மக்கள் மட்டுமே வாக்களித்தனர். ஆனால், 60  ஆண்டுகள் கழித்து , 2014 தேர்தலில் 66 சதவீத மக்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர். 
இந்தப் புள்ளிவிவரத்தின் ஊடே தொக்கி நிற்கும் மிக முக்கியமான கேள்வி, நமக்கு  வாக்குரிமை  இருந்தும்,  வாக்களிக்கும்  கடமையை முறையாகச் செய்கிறோமா?  என்பதுதான்.
வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாக்களிக்காதபோது, தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்களை  பரிபூரணமாகப்  பிரதிநிதித்துவப் படுத்துகிறதா  என்ற  கேள்வி எழுவதையும் மறுப்பதற்கில்லை.
1951 தேர்தலின்போது, நம் மக்களின் கல்வியறிவு விகிதம் 18 சதவீதம் மட்டுமே இருந்தது; அப்போது 46 சதவீதம் வாக்களிப்பு நிகழ்ந்தது என்றாலும்  2014-இல் கல்வியறிவு  75  சதவீதமாக உயர்ந்த பின்னரும், வாக்களிப்போர் விகிதம் 66 சதவீதம் மட்டுமே என்பது  ஒரு விசித்திர முரண் ஆகும்.
கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் வளர்ந்த நாடான அமெரிக்காவில்கூட, குடியரசுத் தலைவர் தேர்தலில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின்றன. வாக்கு அளிப்பவர்கள் சதவீதத்துக்கும், கல்வியறிவு பெற்றோர் சதவீதத்துக்கும் பெரும் தொடர்பு உள்ளதாகவும், கல்வியறிவு குறைவாக  உள்ள நாடுகளில் மட்டுமே வாக்களிப்போர் சதவீதம் குறையும் எனப் பொதுவெளியில் நிலவும் கருத்தினையும்  இது தகர்க்கிறது .
உலகில் தற்போது 22 நாடுகள் தேர்தலில் வாக்களிப்பதைக்  கட்டாயமாக்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில், நியாயமான காரணங்களின்றி  வாக்களிக்கத் தவறுவோர்அபராதம் செலுத்த நேரிடும்.  
கல்வி, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை விடப்  பின்தங்கியிருக்கும் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டிலும், இத்தகைய கட்டாய வாக்களிப்பு நடைமுறையில் இருக்கிறது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மக்கள்தொகையும், மக்கள் தொகை அடர்த்தியும்   மிகக் குறைவாக உள்ள ஆஸ்திரேலியா, காங்கோ போன்ற நாடுகளில் இந்தக்  கட்டாய வாக்களிப்பு  முறை  சாத்தியமாகிறது .
வாக்களிப்போர்  எண்ணிக்கையை அதிகரிக்கும் வழிமுறைகளை அமெரிக்கா ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அங்கு பணப் பரிவர்த்தனை, பொருள்கள் வாங்குதல் ஆகியவை செல்லிடப்பேசி  மூலம் நிகழ்கிறது; அதற்குரிய பாதுகாப்பும், ரகசியத் தன்மையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது .
எனவே, அதன் நீட்சியாக, தேர்தலிலும் செல்லிடப்பேசி மூலம் மக்கள் வாக்களிப்பதை பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்துகிறது.  அதன்  முதல் படியாக, சில மாகாணங்களில்  உள்ளாட்சித் தேர்தலில் செல்லிடப்பேசி மூலம் வாக்களிக்க வழிவகைச்  செய்யப்படுகிறது; பின்னாள்களில் இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.
நம்  நாட்டில், இவை நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், ஆராயப்பட வேண்டிய முக்கிய   விஷயம் , நமது தேர்தல்களில் வாக்களிப்பு குறைவதற்கான காரணங்கள் எவை என்பதுதான். வாக்களிக்காமல் இருப்பதற்கு வாக்காளர்களின் சில பிரச்னைகள் ஏற்கத்தக்கவை. 
உதாரணமாக, தேர்தலன்று ஊரில் இல்லாதிருப்பது, முதுமை, நோய்  போன்றவை காரணமாக வாக்களிக்கத் தவறுவது  ஓரளவு  ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது. ஆனால், தேர்தல் குறித்த அலட்சியம், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வின்மை மற்றும் தேர்தல்  மீது  அவநம்பிக்கை போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாதவை ஆகும். 
 வாக்களித்தல் குறித்த  அறிவூட்டலில் ஈடுபடுவது மக்களிடம் ஓரளவேனும் விழிப்புணர்வினையும், அதைத் தொடர்ந்து மக்கள் வாக்களிப்பதையும் அதிகரிக்கும். இதில், ஊடகங்களின் - குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்களின் பங்களிப்பு  முக்கியமானதாகும். 
கணிசமான வாக்காளர்கள், தங்களது வாக்கு அரசியல் கட்சிகளின் போக்கினை மாற்றாது  என்றும்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மீது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற அவநம்பிக்கையையும் கொண்டுள்ளனர்  என்பது இன்னொரு முக்கியக்  காரணம் ஆகும்.
இந்த அவநம்பிக்கைக்கு ஒரு மாற்று மருந்து, வாக்காளர்களுக்கு இருக்க வேண்டிய  சரியான புரிதலும் தளராத நம்பிக்கையும் ஆகும்.
அரசியல்  கட்சிகளை  நெறிப்படுத்தும் வாய்ப்பும் பொறுப்பும் உள்ளது என்பதையும், அதற்குரிய வலிமை தங்களது வாக்குக்கு உள்ளது என்பதையும் ஒவ்வொரு வாக்காளரும் நினைவில் கொள்ளவேண்டும். அனைவரும் வாக்களிப்பது என்பது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல நல்ல மாற்றங்களை அரசியல் கட்சிகள் மீது ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்.
வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வாக்காளர்கள் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருவதும் பாராட்டுக்குரியது. 
வலிமை வாய்ந்த வாக்கு என்பது, வாக்காளர்கள் பெற்றிருக்கும் உரிமை மட்டுமல்ல; முறையாக செய்ய  வேண்டிய  சமுதாயக்  கடமையும் ஆகும்.  அத்தகைய  புரிதல்  ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திடும் என்பதை சர்வ வல்லமை படைத்த வாக்காளர்கள் உணர வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com