Enable Javscript for better performance
பஞ்சமி நிலம் மீட்பு - விடிவுகாலம் இல்லை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பஞ்சமி நிலம் மீட்பு - விடிவுகாலம் இல்லை

    By  ப. இசக்கி  |   Published On : 04th November 2019 02:55 AM  |   Last Updated : 04th November 2019 02:55 AM  |  அ+அ அ-  |  

    திரைப்படங்கள் பேசும் அரசியல் என்பது வியாபாரத்துக்கான தந்திரம். வியாபாரம் முடிந்தவுடன் அது பரணில் தூக்கி வீசப்படும் என்பதுதான் இன்றைய நிஜம். "அசுரன்' திரைப்படம் பேசிய "பஞ்சமி நிலம்' குறித்த பிரச்னையும் அப்படித்தான்.
     அது இன்று நேற்று உருவான பிரச்னை அல்ல. ஒன்றேகால் நூற்றாண்டைத் தாண்டி இன்னமும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்னைகளில் ஒன்று. அதனால்தான், தமிழ்நாட்டில் இரு பெரும் அரசியல் கட்சிகளுக்கு இடையே அது மோதலை உண்டாக்கியது. அதற்குப் பின்னாலும் ஓர் அரசியல் ஒளிந்து கொண்டிருக்கிறது.
     பஞ்சமி நிலக் கொடை என்பது, பட்டியலின மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்துக்காக சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயே ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட திட்டம். அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவர், பட்டியலின மக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து ஓர் விரிவான அறிக்கையை தயார் செய்தார். அந்த அறிக்கையை 1891-இல் ஆங்கிலேயே அரசிடம் அளித்தார். அதில், பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும், உழைக்கும் மக்களான அவர்கள், நில உடைமையாளர்களால் வஞ்சிக்கப்படுவது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறியிருந்தார்.
     பட்டியலின மக்களுக்கு நிலம் அளிக்கப்பட்டால் அவர்களது சமூக-பொருளாதார நிலை உயரும் என ஆலோசனை கூறியிருந்தார் ட்ரெமென்கீர். ஆட்சியரின் அந்த ஆலோசனையில் ஒரு மறைமுக செயல் திட்டமும் உண்டு. அதாவது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நில வரியே அரசாங்கத்துக்கான பிரதான வருமானமாக இருந்தது. ஆதலால், உழைப்பாளர்களான பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் ஆங்கிலேய அரசுக்கான வரி வருவாய் அதிகரிக்கும் என்பது அவரது எண்ணம்.
     அந்த அறிக்கையானது ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892-ஆம் ஆண்டு விவாதிக்கப்பட்டு பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்குவதற்கான சட்டமும் உடனடியாக இயற்றப்பட்டது. அதன்படி, இந்தியா முழுவதும் பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 62,745 பேருக்கு சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலங்களே "பஞ்சமி நிலங்கள்' (வர்ணாசிரம கொள்கைப்படி, மனித சமூகம் பிராமணன், சத்ரியன், வைஷ்ணவன், சூத்திரன் என 4 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. இந்த நான்கு பிரிவுகளிலும் அடங்காத ஐந்தாவது பிரிவாக உள்ளவர்கள் "பஞ்சமர்' என அழைக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலம் என்பதால், அந்த நிலம் "பஞ்சமி நிலம்' எனக் கூறப்படுகிறது) என அழைக்கப்படுகின்றன.
     இவற்றில் பெரும்பாலான நிலங்கள் வட மாவட்டங்களிலேயே உள்ளன. தென் மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் குறைவு. பஞ்சமி நிலங்களை முதல் 10 ஆண்டுகளுக்கு விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ, தானம் கொடுக்கவோ கூடாது. 10 ஆண்டுகள் கழித்து அந்த நிலத்தை மற்றொரு பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ அல்லது தானம் கொடுக்கவோ செய்யலாம். இந்த நிபந்தனைகளை மீறி செய்யப்படும் நில உரிமை மாற்றங்கள் எதுவும் சட்டப்படி செல்லாது.
     பெரும்பாலான பஞ்சமி நிலங்கள் பாசன வசதி இல்லாத தரிசு நிலங்களாகவே இருந்துள்ளன. பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்த பட்டியலின மக்கள், அந்த நிலத்தைச் சீர்படுத்தவோ, பாசன வசதி செய்து கொள்ளவோ வழி இல்லாமல் இருந்துள்ளனர். எனவே, பெரும்பாலான நிலங்கள் பயன்படுத்தப்படாமலேயே கிடந்தன. காலப்போக்கில் வறட்சி, பஞ்சம் போன்றவற்றால் அம்மக்கள் இடம்பெயர்ந்து சென்றதும், அருகில் உள்ள நிலவுடைமை ஆதிக்க ஜாதியினரின் அச்சுறுத்தல், பாசனத்துக்கு தண்ணீர் கொடுக்காதது, வழிகளை அடைத்தல், ஆக்கிரமிப்பு போன்றவற்றால் பஞ்சமி நிலங்கள் படிப்படியாக கைமாறத் தொடங்கின.
     இதில் பெரும்பகுதி கைமாற்றம் என்பது 1965-க்கும் 1969-க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கைமாற்றம் அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் கூட்டணியுடன் நடைபெற்றதால் பட்டியலின மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்றைய நிலையில் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் பிற இன மக்களிடமே உள்ளதாகக் கூறப்படுகிறது.
     பின்னர் பட்டியலின மக்களிடையே நிலவுடைமை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதால் பஞ்சமி நிலங்களை மீட்க போராடத் தொடங்கினர். உச்சகட்டமாக 1994-இல் செங்கல்பட்டில் ஏற்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் இறந்தனர். ஆனாலும், பிரச்னைக்கு விடிவுகாலம் ஏற்படவில்லை.
     தொடர்ந்து பஞ்சமி நில மீட்புக்காக பட்டியலின மக்கள் நல அமைப்புகளும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் போராடி வருகின்றன. பஞ்சமி நிலத்தை மீட்பதற்காக தமிழக அரசு இதுவரையில் 3 முறை குழுக்களை அமைத்த போதிலும் பலன் கிடைக்கவில்லை. கடந்த 100 ஆண்டுகளில் அந்த நிலங்கள் பலருக்கு கைமாறி இருப்பதாலும், தற்போது அந்த நிலங்கள் வீடுகள், கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மையங்கள் எனப் பெரிதும் நிலை மாறி இருப்பதாலும் அவற்றை மீட்பது என்பது அத்தனை எளிதானதாக இருக்கப்போவதில்லை. சட்டத்தின் மூலம் மீட்கலாமே என்றாலும், நீதிமன்றம் செல்வோர், இழப்பீடு கோருவோர் என பெரியதொரு சட்டப் போராட்டம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
     பஞ்சமி நிலம் குறித்த பிரச்னையில் திமுகவும், பாமகவும் மோதிக் கொண்டதிலிருந்து அந்த நில மீட்பு எத்தனை சிக்கலானது என்பது புரியும். பஞ்சமி நிலங்களின் இன்றைய உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் போன்றோர். அதனால், பஞ்சமி நிலங்கள் மீட்பு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நடைபெறுமா என்றால், அது அத்தைக்கு எப்போது மீசை முளைப்பது, அவரை சித்தப்பா என்று கூப்பிடுவது என்பது போன்றதுதான்.
     
     
     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp