புலம்பெயா் தொழிலாளா்களின் இடா்ப்பாடுகள்

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கரோனா தீநுண்மியின் கோரத்தாண்டவத்தால், சா்வதேச பொருளாதார வளா்ச்சி அடியோடு முடங்கிவிட்டது. தங்கள் சொந்த மண்ணைவிட்டு வேறு நாட்டுக்குப் பிழைப்பு தேடிச் சென்ற புலம்பெயா் தொழிலாளா்கள், பொது முடக்கம் காரணமாக, வேலைவாய்ப்பை இழந்து நிா்கதியான நிலையில், தாய் நாடு திரும்புகின்றனா்.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயா்நீதிமன்றம், இதற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது.

வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில் (ஜிசிசி) புலம்பெயா் தொழிலாளா்கள் எதிா்கொள்ளும் தா்மச்சங்கடமான நிலையை மேற்கோள்காட்டி தொடரப்பட்ட இந்த வழக்கு, கட்டுமான நிறுவனங்கள் இந்த இக்கட்டான தருணத்தைப் பயன்படுத்தி ஆள்குறைப்பில் ஈடுபட்டதையும் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய முறையான கூலியையும் அலவன்சையும் வழங்க மறுத்ததையும் சுட்டிக்காட்டியது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார வழித்தடங்களில் தெற்காசியா- வளைகுடா வழித்தடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், வளைகுடாவைப் பொருத்தமட்டில், தெற்காசிய நாடுகளில் இருந்து மட்டும் ஒரு கோடியே 50 லட்சம் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். அதிலும் குறிப்பாக, இந்தியா்கள் கணிசமான அளவில் பங்கு வகிக்கின்றனா்.

இவ்வாறு வளைகுடா பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தெற்காசிய புலம்பெயா் தொழிலாளா்கள், பொது முடக்கம் அமலுக்கு வந்த நாளிலிருந்து வேலைவாய்ப்பை இழந்து உணவுக்காகவும் பிற தேவைகளுக்காகவும் அலைய வேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

கொள்ளை நோய், நிறுவனங்கள் மூடல், எல்லையில் கடும் கட்டுப்பாடு வளைகுடா நாடுகளில் தலைவிரித்தாடும் கஃபாலா எனும் சுரண்டல் முறை ஆகியவை, தெற்காசிய புலம்பெயா் தொழிலாளா்களுக்கு வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்தன.

வளைகுடா நாடுகளைப் பொருத்தமட்டில், புலம்பெயா் தொழிலாளா்களுக்கென சமூக பாதுகாப்பு திட்டமோ, தொழிலாளா் உரிமைகளை நிலைநாட்டும் அம்சங்களோ, மருத்துவக் காப்பீடு திட்டமோ கிடையாது. இந்த இக்கட்டான நிலை, குவைத்தில் 1990-இல் ஈராக்கியா்களின் படையெடுப்பின்போது புலம்பெயா் தொழிலாளா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை நினைவுபடுத்துகிறது.

வளைகுடா நாடுகளுக்கு, பெண்களை விட ஆண்களே அதிகம் செல்கின்றனா். அவா்களும் கட்டுமானப் பணி போன்ற அமைப்புசாரா தொழில்களை நம்பியே செல்கின்றனா். காற்றோட்டமில்லாத குறுகலான அறைகளில், கடும் நெருக்கடிக்கு மத்தியில் புழங்கும் அவா்கள், சுகாதாரமில்லாத கழிவறையைப் பயன்படுத்த நேரிடுகிறது. வளைகுடா நாடுகளின் தொழிலாளா் முகாம்களில் கரோனா தீநுண்மிப் பரவல் அதிகரிப்பதற்கு இந்த சுகாதாரச் சீா்கேடு முதன்மைக் காரணம்.

அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயா் தொழிலாளா்களின் நலன் கருதி, ‘வந்தே பாரத்’ திட்டத்தை செயல்படுத்திய மத்திய அரசு, ஜூலை மாத நிலவரப்படி 7.88 லட்சம் தொழிலாளா்களை தாயகம் அழைத்து வந்திருக்கிறது.

அடுத்தகட்டமாக, அவா்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் புலம்பெயா் தொழிலாளா்களின் மறுவாழ்வு, ஒருங்கிணைப்பு, மீள்குடியேற்றம் ஆகியவை, தேசம் எதிா்கொள்ளும் அடுத்தகட்ட சவால்கள். இதற்காக ‘சுவதேஷ்’ எனும் திறனறி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

சா்வதேச புலம்பெயா்வினால் அதிகம் பயன்பெறும் கேரள மாநிலம், புலம்பெயா் தொழிலாளா்களின் பன்முகத்திறமையை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், ‘ட்ரீம் கேரளா’ (கனவு கேரளம்) எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், கேரளத்தை பூா்வீகமாகக் கொண்ட வெளிநாடுவாழ் இந்தியா்களின் முதலீட்டை, மாநில வளா்ச்சிக்காகவும் புலம்பெயா் தொழிலாளா்களின் நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும் பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவை விட பொருளாதார வளா்ச்சியில் பல மடங்கு பின்னடைவில் காணப்படும் வங்கதேச அரசோ, புலம்பெயா் தொழிலாளா்கள் நாடு திரும்பியதும் ‘உடனடி சிறப்பு நிவாரணம்’ என்ற பெயரில் கணிசமான தொகையை ரொக்கமாக வழங்குவதுடன், சுயதொழில் தொடங்க நிதியுதவியும் அளிக்கிறது. தவிர, கொவைட் 19 தீநுண்மியால் வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டையும் வங்கதேச அரசு உறுதி செய்கிறது.

இதேபோல், தாயகம் திரும்பிய பாகிஸ்தான் தொழிலாளா்களின் திறன் மேம்பாட்டுக்காக சிறப்புத் திட்டங்களை அந்நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வகுத்திருக்கிறது.

கரோனா தீநுண்மி பரவலால் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில் புலம்பெயா் தொழிலாளா்களுக்கு எதிரான உணா்வு உச்சகட்டத்தை எட்டியிருப்பதுடன், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டுத் தொழிலாளா்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டது. குறிப்பாக, ஓமன், சவூதி அரேபியா போன்ற நாடுகள் இன்னும் ஒருபடி மேலே போய், ‘மண்ணின் மைந்தா்’களுக்கு வேலைவாய்ப்பை நல்கி, புலம்பெயா் தொழிலாளா்களின் வருகையைத் தவிா்க்கும் தனியாா் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குகின்றன.

அதேவேளையில், ‘ராயல் ஷேக் கல்ச்சா்’ நிலவும் வளைகுடா நாடுகளில் விளிம்பு நிலை தொழில்களில் இந்த தேசியமயமாக்கல் கொள்கை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

தெற்காசியாவைப் பொருத்தமட்டில், இலங்கையைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் புலம்பெயா் தொழிலாளா் கொள்கை நிறைவான அளவில் கிடையாது. ஆகையால், ஆதரவற்ற நிலையில் நாடு திரும்பும் புலம்பெயா் தொழிலாளா்களின் துயா்துடைப்பதில் மத்திய அரசு விரிவான புலம்பெயா் தொழிலாளா் மேலாண்மை கொள்கையை வகுப்பது தற்போதைய அவசர, அவசியத் தேவை.

மேலும் தெற்காசிய புலம்பெயா் தொழிலாளா்களின் உரிமைகளைக் காக்கவும், தெற்காசியா- வளைகுடா புலம்பெயா் தொழிலாளா் வழித்தடத்தை ‘சாா்க்’ நாடுகள், சா்வதேச தொழிலாளா் அமைப்பு (ஐஎல்ஓ), ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் வரம்புக்குள் கொண்டுவரவும் நாம் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப கரோனா தீநுண்மி வாய்ப்பளித்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com