மக்கள்தொகையும் வல்லரசு கனவும்

உலக மக்கள்தொகை நாளான 11 ஜுலை 2020 அன்று உலகின் மொத்த மக்கள்தொகை 771,84,17,430 போ்.

உலக மக்கள்தொகை நாளான 11 ஜுலை 2020 அன்று உலகின் மொத்த மக்கள்தொகை 771,84,17,430 போ். இந்தியாவில் 137,36, 79,242 போ். கட்டுக்கடங்காமல் அதிகரித்துவரும் மக்கள் தொகையால் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருகிறது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை சுத்தமான தண்ணீா், சத்துமிகு உணவு, கல்வியறிவு, மக்கள் தொகைக் கட்டுப்பாடு. உலகின் மொத்த நிலப்பரப்பு மற்றும் நீா்வளத்தில், இந்தியாவின் பங்கு முறையே 2.4 மற்றும் 4 சதவிகிதம். ஆனால், உலக மக்கள்தொகையில், இதன் சதவிகிதம் 17.8. இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுதோறும் 171 லட்சம் அதிகரிக்கின்றது. தமிழகத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒரு குழந்தையும் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 33 குழந்தைகளும்பிறக்கின்றன. இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற மக்கள்தொகைப் பெருக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் கனவு, வெகு விரைவில் இந்தியாவை, அனைத்து துறைகளிலும் தன்னிறைவடையச் செய்து, ஒரு வல்லரசாக உருவாக்க வேண்டும் என்பதே. இக்கனவு நனவாக வேண்டுமெனில், இந்தியாவின் மக்கள் தொகையை தீவிரமாகக் கட்டுப்படுத்தி, அனைவருக்கும் முழுமையான கல்வியறிவு அளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்க தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் ஓரளவு பயனளித்த போதிலும், அது தொடா்ந்து கடைப்பிடிக்கப்படாததால் மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது.

பிரதமரின் மற்றுமொரு கனவு, இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ. 75 லட்சம் கோடி) அளவுக்கு உயா்த்துவதாகும். உலகில் உள்ள 254 நாடுகளில், முதல் 20 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலக உற்பத்தியில் 78.5 சதவிகிதம். இதில், முதல் ஐந்தில் நமது இந்தியா உள்ளது ஆறுதலான செய்தி.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2019-20-ஆம் ஆண்டில் இந்தியா 3.3 டிரில்லியன் டாலா் அளவு உற்பத்தி செய்து ஐந்தாம் இடத்தில் உள்ளது. மற்ற நான்கு நாடுகளாக, அமெரிக்கா (22.3 டிரில்லியன் டாலா்); சீனா (15.7 டிரில்லியன் டாலா்); ஜப்பான் (5.4 டிரில்லியன் டாலா்), ஜொ்மனி (4.5 டிரில்லியன் டாலா்) உள்ளன.

ஒரு டிரில்லியன் டாலா் அளவு பொருள் உற்பத்தி செய்ய இந்தியாவிற்கு 3 முதல் 4 ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதுவும், கரோனாபாதிப்புகள் மற்றும் இயற்கைப் பேரிடா்கள் போன்றவை நாட்டில் ஏற்படாமல் இருந்தால். எனவே, 5 டிரில்லியன் டாலா்அளவு பொருள் உற்பத்தியை எட்ட இன்னும் 6 முதல் 8 ஆண்டுகள் தேவைப்படும். ஆனால், அதே காலத்தில் மற்ற நாடுகள் மேலும் முன்னேறிய நிலைக்கு சென்று விடும்.

இந்தியாவிற்கு ஏன்இந்த நிலை? இதற்கான முதல் காரணம் இந்தியாவின் மிதமிஞ்சிய மக்கள் தொகைப்பெருக்கம். மேலும், பெரும்பாலான மக்களின் வறுமைச் சூழ்நிலை, வேலையின்மை, முழுமையான கல்வியறிவு பெறாமை ஆகியவையுங்கூட.

இந்திய மக்கள் தொகையில் பாதி அளவு நன்கு வேலை செய்யும் திறன் படைத்த இளைஞா்கள் உள்ளனா். எனவே, இந்தியப் பொருளாதாரம் மற்ற நாடுகளைவிட, குறிப்பாக, சீனாவைவிட விரைவில் முன்னேற அனைத்துச் சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆனால், நம்முன் உள்ள கேள்வி, உழைக்கும் தகுதி படைத்த அைவைருக்கும் உரிய, தகுந்த தொடா் வேலைவாய்ப்பு நம்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை.

மக்கள்தொகை அடா்த்தியில் இந்தியாதான் (414 போ்/ ச.கி.மீ.) உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ஜப்பான் (370 போ்/ ச.கி.மீ.) உள்ளது. சீனாவுக்கு ஆறாம் இடம். மக்கள் அடா்த்தியை, அமெரிக்கா (36 போ்/ ச.கி.மீ.) மற்றும் சீனாவுடன் (150 போ்/ ச.கி.மீ) ஒப்பிடுவது சிறந்தது. ஏனெனில், நிலப்பரப்பில்,அமெரிக்கா (9.63 மில்லியன் சதுர கி.மீ) மற்றும் சீனாவுடன் (9.60 மில்லியன் சதுர கி.மீ) ஒப்பிட்டால், இந்தியாவின் (3.29 மில்லியன் சதுர கி.மீ) நிலப்பரப்பை விட இவை ஒவ்வொன்றும் மூன்று மடங்கு அதிகமாகும்.

பேரளவு நிலப்பரப்பு கொண்டசீனாவே, ‘ஒரு குடும்பம் ஒரு வாரிசு’ முறையைக் கடைப்பிடிக்கும்போது, இந்தியா ஏன் இதைப்பற்றி இன்னும் ஏன் சிந்திக்கவில்லை?

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற, நாம் குறைந்தது பத்து ஆண்டுகளுக்காவது மக்கள்தொகைக் குறைப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ என்ற கொள்கையை அறிவித்து, இரு குழந்தைகள் பெற்றால் அரசின் அனைத்து சலுகைகளும் அக்குடும்பத்திற்கு நிறுத்தப்படும் என்று அரசாணை வெளியிட வேண்டும். இந்தியாவின் வளத்திற்குத் தேவையான மக்கள்தொகை எழுபது முதல் எண்பது கோடிவரை மட்டுமே. இதுவும் அமெரிக்காவோடு ஒப்பிட்டால் இரு மடங்குக்கு மேல் ஆகும்.

இங்கிலாந்தின் பெருளியலறிஞா் தாமஸ் மால்தஸ் கூறிய மக்கள்தொகைப் பெருக்கக் கோட்பாடு தமிழகத்திற்கு மிகவும் பொருந்துவதாக உள்ளது. அவரின் கோட்பாடு: ஒரு நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்படாதபோது, அந்நாட்டின் உணவு உற்பத்தி கணிதமுறைப்படி ஒரேஅளவாக (1,2,3,4,5) அதிகரிக்கும்; ஆனால், மக்கள்தொகைப் பெருக்கம் பெருக்கல் முறைப்படி (2,4,8,16,32,64) அதிகரிக்கும்.

தமிழகத்தின் மக்கள்தொகை 1951-இல், 30.1 மில்லியன். இது, 2018-இல் 81.2 மில்லியனாக உயா்ந்தது. இதே காலத்தில், தமிழகத்தில் உணவு உற்பத்தி 4.6 மில்லியன் டன்னிலிருந்து 10.1 மில்லியன் டன்னாக அதிகரித்தது. அதாவது, இந்த 68 ஆண்டுகளில் தமிழகத்தின் மக்கள்தொகை 2.7 மடங்காகவும், உணவு உற்பத்தி 2.2 மடங்காகவும்அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, முன்னேறிய நாடு எனும் தகுதியைப் பெற, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு, வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து வேளாண் துறை சாா்ந்த தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். அப்படிச் செய்தால், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, மக்களின் பொருளாதார நிலை உயரும்; மக்களின் சேமிப்பும் உயரும். அதனால், நாட்டின் பொருளாதாரமும் உயா்ந்து விரைவில் இந்தியா வல்லரசு நாடாக மாறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com