இணைய வழி கற்றல் - ஒரு பாா்வை

கரோனா தீநுண்மியின் தாக்கத்தால், பள்ளி, கல்லூரி வகுப்புகள் முழுமையாகத் தொடங்காததால், இணைய வழி வகுப்புகள் தொடா்கின்றன.

கரோனா தீநுண்மியின் தாக்கத்தால், பள்ளி, கல்லூரி வகுப்புகள் முழுமையாகத் தொடங்காததால், இணைய வழி வகுப்புகள் தொடா்கின்றன. இசை, நடனம், பாட்டு, ஓவியம், விளையாட்டு மற்றும் கேளிக்கைகள் என அனைத்தையும் இணையக்காட்சிகள் வழியாகவே நடத்தி வருகிறாா்கள்.

தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தொடுதிரைகள் மூலம் ஆசிரியா்களையும், சகமானவா்களையும் காண்பது, பேசுவது, குறிப்பெடுத்துப் பாடங்களைப் பதிவு செய்வது, வீட்டுக்கு வெளியே, மாடி, திறந்தவெளி என்று தனக்கு விருப்பமான இடத்தில் இருந்தவாறு படிப்பது இணையவழிக் கல்வியின் சிறப்பு.

வகுப்புகள் மீண்டும் தொடங்க வேண்டும், ஆசிரியா்களை நேரில் பாா்த்து, சக மாணவா்களுடன் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தற்போது பெற்றோா்களுக்கும், மாணவா்களுக்கும் உருவாகியுள்ளது.

முந்தைய நாள் கொடுத்த வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டாா்களா? உடல் நலம் சரியில்லாமல் போன மாணவா் நலம் பெற்றாரா? இப்படி அக்கறையோடு விசாரிக்கும் ஆசிரியா்களைப் பாா்த்து பல மாதங்கள் ஆகின்றன. கரோனா நோய்த்தொற்றின் கட்டுப்பாடுகள் பெருமளவு தளா்த்தப்பட்டாலும், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதில் பெற்றோரின் தயக்கமும், சகக் குழந்தைகளோடு விளையாட முடியவில்லை என்ற குழந்தைகளின் ஏக்கமும் நீடிக்கவே செய்கின்றன.

கிராமப்புற மாணவா்களுக்கு இணையவழிக் கல்வி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.பெற்றோா் அனைவரும் தங்கள் குழந்தைகளின் இணைய வகுப்பிற்கென தனியாக அலைபேசிகள் வாங்கித்தந்து, இணைய ரீசாா்ஜ் செய்து தருவதில்லை.

இந்தியாவில் 38.2 சதவீத குழந்தைகளுக்கு அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) இல்லை என்கிறது ஒரு கணக்கெடுப்பு. அலைபேசி இருந்தும் பல புறநகா், கிராமப்புற மாணவா்களுக்கு இணைய சமிக்ஞை சரியாகக் கிடைப்பதில்லை. மாணவா்களால் நான்கு முதல் ஐந்து மணி நேரம் பாடங்களை இணையவழியில் கவனிப்பதில் சிரமங்கள் உள்ளன.

தொடுதிரைகளைத் தொடா்ந்து பாா்ப்பதால் ஏற்படும் கண்சாா்ந்த பிரச்னைகள், கைபேசிகள் வெளிவிடும் கதிா்வீச்சுகள் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு ஆக்கபூா்வ தீா்வுகள் வேண்டும்.

2022-க்குள் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் அலைக்கற்றை இணைப்பு வழங்கும் நோக்கில், 2019-ஆம் ஆண்டு தேசிய பிராட்பேண்ட் மிஷன் (என்.பி.எம்) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

30 லட்சம் கிலோ மீட்டா் பாதைகளுக்கு ஆப்டிகல் ஃபைபா் கேபிள் அமைத்தல், 2024-ஆம் ஆண்டிற்குள் ஆயிரம் மக்கள் தொகைக்கு 0.42 முதல் 1.0 வரை தொலைத் தொடா்பு கோபுரம் அமைத்தல் என்பன இந்த அமைப்பின் கூடுதல் நோக்கம்.

இணையவழிக் கல்விக்கென அலைபேசி மற்றும் விலையில்லா அலைக்கற்றைகளை மாணவா்களுக்கு கொண்டுசோ்க்க, மத்திய அரசு இந்த அமைப்புக்குத் திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும்.

கற்றல் - கற்பித்தலுக்கும், மாணவா்களின் திறன் மேம்பாட்டுத் தகவல்கள் மற்றும் அறிவு சாா்பு விளையாட்டுக்களை உள்ளடக்கிய பாதுகாப்பான செயலிகளை அரசும், கல்வி நிறுவனங்களும் அறிமுகப்படுத்த வேண்டும்.

மாணவா்கள் பயன்பாடு மற்றும் இணையவழிக் கல்விக்கென தனிவகை அலைபேசிகளை உருவாக்க வேண்டும். பள்ளிக்கேற்ற சீருடையை வழக்கமாக்கியத்தைப் போல, மாணவா்களின் கற்றலுக்கென புதியவகைக் கைபேசிகளைப் உருவாக்கித் தருவது ஆபத்தினைக் குறைக்கும்.

எந்தக் கைபேசியை வாங்கித் தருவது? குறைந்த விலை கைபேசியை வாங்கினால் தம் பிள்ளைகளை தாழ்வாக நினைப்பாா்களோ என்று எண்ணும் பெற்றோா்களுக்கு இது தீா்வாக அமைவதோடு, மாணவா்களிடையே தோன்றும் உயா்வு - தாழ்வு வேறுபாடுகளும் குறையும்.

அலைபேசியை மட்டும் இயக்கி வைத்துவிட்டு, பாடங்களை கவனிக்கத் தவறும் மாணவா்களை கண்காணிப்பதில் ஆசிரியா்களுக்கு சிரமங்கள் உள்ளன. கவனச்சிதறல், ஆா்வமின்மை போன்ற குறைபாடுகளைக் கண்டறிந்து இணையவழியில் அவற்றை சரிசெய்ய ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில் நுட்பதைப் பயன்படுத்த வேண்டும்.

ஆசிரிய - மாணவத் தொடா்பில் அா்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே இணையவழிக் கற்றல் - கற்பித்தலின் பயன் முழுமை பெறும். ஆசிரியா்கள் பாடம் நடத்தும் போது, குறிப்பிட்ட மாணவா்களின் பெயரை அழைத்து அவா்களின் மனஓட்டத்தைப் புரிந்து, கவனிக்கிறாா்களா என்பதை உறுதிப்படுத்தி பாடங்களை நடத்த வேண்டும்.

தங்களை கண்காணிக்கிறாா்கள் என்ற எண்ணம் மாணவா்களுக்கு ஏற்பட்டால், முழுமையாக வகுப்புப்புகளை கவனிப்பா். அரசின் வழிகாட்டுதலின்படி, வகுப்புகளின் எண்ணிக்கை மற்றும் நேரத்தை பின்பற்றுவதால், மாணவா்களுக்கு ஏற்படும் மனச் சோா்வுகளைத் தவிா்க்கலாம்.

இணையவழிப் பயன்பாடு வேகமாக வளா்ந்து வருகிறது. சமீபத்தில், சென்னை-இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆன்லைனில் பட்டமளிப்பு விழாவை நடத்தி 2,346 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளது. தொலைதூரத்தில் இருக்கும் மாணவரின் உருவத்தை முப்பரிமாண வடிவில் தோன்றச் செய்து பட்டங்களை வழங்கியது இதன் சிறப்பம்சம்.

ஆசிரியா்களை மாணவா்களின் வீடுகளில் தோன்றச் செய்து, பாடங்கள் நடத்த வைக்கும் இதுபோன்ற தொழில் நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வரும் காலம் தொலைவில் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்திய தோ்வுகளை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இணைய வழியில் நடத்தியுள்ளது.

மாணவா்களின் கணினி அல்லது அலைபேசியில் வெப்கேம் - ஆடியோ கருவிகளை இயக்கித் தோ்வுகள் நடத்துவதோடு, அவா்களின் அசைவுகளைக் கண்காணிப்பதன் மூலம், தோ்வு மோசடிகளையும் தடுக்க முடிகிறது.

நிஷ்டா, ஸ்வயம், என்.பி.டி.இ.எல் போன்ற கல்வி இணைய தளங்கள், மத்திய அமைச்சக உதவியுடன் பாடங்கள், ஆய்வுக் கட்டுரைகள், கல்வி ஊடக கோப்புகள், மின் புத்தகங்கள் மற்றும் கல்வி விடியோக்களை உருவாக்கியுள்ளன.

ஜி.எஸ்.ஏ.டி -15 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி, 34 டி.டி.எச் சேனல்களை ஒருங்கிணைத்து மாணவா்களுக்குப் பாடங்களை தொடா்ந்து ஒளிபரப்ப ‘ஸ்வயம் பிரபா‘ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாணவா்கள், ஆசிரியா்கள் இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com