புலம்பெயர் தொழிலாளர்கள் மறுவாழ்வு பெற...

சீனாவின் வூஹானில் தொடங்கிய கரோனா தீநுண்மியால் இன்றைக்கு சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி அடியோடு முடங்கியுள்ளது.


சீனாவின் வூஹானில் தொடங்கிய கரோனா தீநுண்மியால் இன்றைக்கு சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி அடியோடு முடங்கியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக 137 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நம் நாட்டில், கரோனா தீநுண்மி பரவல் உச்சகட்டத்தை எட்டியிருப்பதால் நகர்ப்புறங்களுக்கு பிழைப்பு தேடிச் சென்ற தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மீண்டும் கிராமப்புறங்களுக்கே கடந்த 3 மாத காலமாக படையெடுத்துச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் பொருளாதார, பொது முடக்கத்தால் இந்தியாவில் சுமார் 
4 கோடி புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இக்கட்டான இந்தச் சூழலில் பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஸா ஆகிய 6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில், புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில், "கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்' எனும் வேலை உறுதியளிப்புத் திட்டம் அல்லது கிராமப்புற பொதுப் பணித் திட்டங்களை ரூ.50,000 கோடியில் மத்திய அரசு அண்மையில் தொடங்கியுள்ளது.

25 வகையான பணிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25,000 புலம்பெயர் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், குடிநீர் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்கின்றனர்.

விரைவில் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பிகார் மாநிலத்தின் ககரியா மாவட்டத்தை மையப்படுத்தி பிரதமர் மோடி, அண்மையில் தொடங்கி வைத்த இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்குத் திரும்பிய தையல்காரர்கள், பிளம்பர்கள், சமையல் கலைஞர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நிலையான வருவாயைப் பெறும் பொருட்டு, தாங்களாகவே கூட்டுறவுச் சங்கங்களை நிறுவலாம். ஏனெனில், தொழில்களை அபிவிருத்தி செய்யும் நிலையில், அவர்களின் சேவை அல்லது உற்பத்திப் பொருள்களை லாபகரமான விலையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு விற்பனை செய்ய கூட்டுறவுச் சங்கங்கள் பெரிதும் உதவும்.

எடுத்துக்காட்டாக, ஒரு கிராமத்தில் தையல்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தையல்சார் கூட்டுறவுச் சங்கத்தை நிறுவும் நிலையில், உள்ளூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும் பணி ஆணைகளை ஈர்க்க முடியும். இது போன்ற கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கு உதவ எண்ணற்ற அரசு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன; இது கட்டாயமும்கூட.  மேலும், கூட்டுறவுச் சங்கத்துக்குக் கடன் கொடுத்து உதவ கூட்டுறவு வங்கிகளும் ஆங்காங்கே செயல்படுகின்றன.

இந்திய கூட்டுறவுச் சங்க சட்டம் 1912- இன் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தது 10 நபர்கள் இணைந்து கூட்டுறவுச் சங்கத்தை நிறுவலாம். நகர்ப்புறங்களில் பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் பருவகால தொழில்களில், அதாவது திருமணம் போன்ற விழாக்களில் சமையல் வேலை, உணவு பரிமாறுதல், மேடை அலங்காரம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட ஏராளமான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அச்சுறுத்தலால் வேலைவாய்ப்பை இழந்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய இதுபோன்ற முறைசாரா தொழிலாளர்களும் சேவை சார்ந்த கூட்டுறவுச் சங்கங்களையோ அல்லது யூனியன்களையோ தொடங்கலாம்.

கிராமப்புறங்களில் பணி வாய்ப்புக் கிட்டவில்லை என்றாலும், இதன் வாயிலாக நகர்ப்புறங்களில் பணியாளர் கூட்டுறவுச் சங்கம் அல்லது யூனியன் என்ற அங்கீகாரத்துடன் மீண்டும் அடியெடுத்து வைத்து முறையான ஊதியம் மட்டுமின்றி, கண்ணியமான வாழ்வுக்குத் தேவையான வசதிகளையும் கேட்டுப் பெறலாம். தேசிய கூட்டுறவு யூனியன், பணியாளர் யூனியன் உள்ளிட்ட கூட்டமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்குப் போதிய வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்து கொடுக்கலாம்.

இந்தியாவைப் பொருத்தவரை அபரிமிதமான வளர்ச்சியைக் கூட்டுறவுச் சங்கங்கள் பெற்றுள்ளன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு,  குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கடந்த 1946- இல் தொடங்கப்பட்ட அமுல் பால் பொருள்கள் கூட்டுறவு சங்கத்தைக் குறிப்பிடலாம்.

இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில், இன்றைக்கு குஜராத்தின் 18,700 கிராமங்களிலிருந்து 35 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 கோடியே 30 லிட்டர் பால், நேரடியாகவே சங்க உறுப்பினர்களிடமிருந்து, அதாவது உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

இதன் விளைவாக அமுல் பால் -  பால் பொருள்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு கடந்த மார்ச் 31 நிலவரப்படி, 2019 -  20- இல் ரூ.38,550 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் சுமார் 80% தொகை, கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்குப் பால் கொள்முதல் விலையாகவும், "போனஸ்' என்ற பெயரிலும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு நாட்டில் வறுமையை ஒழிக்க "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' போன்ற எண்ணற்ற திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தினாலும், இது குறுகிய கால வலி நிவாரணியாகத்தான் இருக்குமே தவிர, நீண்ட காலத்துக்கு உகந்தது அல்ல. எனவே, நகர்ப்புற தேவைகளை கிராமப்புறங்களிலிருந்து பூர்த்தி செய்யவும், கரோனா தீநுண்மி நோய்த்தொற்று போன்ற பேரிடர் காலங்களில் நகர்ப்புறங்களில் இட நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கூட்டுறவுச் சங்கம் போன்ற பொருளாதார முறை மிகவும் அவசியம்.

இதன்மூலம் தொழிலாளர்களின் சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்யப்படுவது மட்டுமின்றி, மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் (ஜிடிபி) கணிசமான பங்களிப்பை நல்க முடியும். மேலும், யூனியன் என்ற பெயரில் தொழிலாளர்கள் சட்ட அங்கீகாரத்துடன் இணைந்து செயல்படும் நிலையில், சுரண்டல் முறைகளிலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com