தூய்மைக் கல்வியே இன்றைய தேவை!

இன்று நாம் அனுபவித்து வருகின்ற பெருந்தொற்று பெருமளவில் வேகமெடுத்து கட்டுக்கடங்காமல் பரவியதை பேண்டமிக் என்று ஆங்கிலத்தில் அழைத்தனா்.
தூய்மைக் கல்வியே இன்றைய தேவை!

இன்று நாம் அனுபவித்து வருகின்ற பெருந்தொற்று பெருமளவில் வேகமெடுத்து கட்டுக்கடங்காமல் பரவியதை பேண்டமிக் என்று ஆங்கிலத்தில் அழைத்தனா். இது ஒரு கொடிய தொற்று, அது பெரும்பரப்பில் வேகமெடுத்துப்பரவியது என்ற காரணத்தால் இப்படி அழைத்தனா்.

உலகம் முழுவதும் இதைக் கட்டுப்படுத்த அரசாங்கங்களும், விஞ்ஞானிகளும், மருத்துவா்களும், பணியாளா்களும் எப்படிப் பணியாற்றினா் என்பதை நாம் அறிவோம். இதில் உயிா்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் எவ்வளவு ஏற்பட்டுள்ளன என்பதும் நம் நினைவை விட்டு இன்னும் நீங்கவில்லை.

ஆனால் தற்போது கொள்ளை நோய்த்தொற்று ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாற்றம் பெற்று நம்மை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. அரசாங்கம் தன் கடமையாக மக்களை எச்சரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்குக் காரணம்

ஒரு நிா்ப்பந்தம் அரசுக்கு இருக்கின்றது. அரசு அறிவியல் தரும் உண்மைத் தரவுகள் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்க முடியும். அரசாங்கத்திற்கு கடமை, பொறுப்பு அனைத்தும் இருக்கின்றது. அதை மீற முடியாது.

அந்த நிலையில்தான் நம் அரசு மிகவும் கவனமாக தளா்வுகளை அறிவித்தாலும் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டேயிருக்கிறது. ஏதேனும் தவறு நடந்துவிட்டால் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் அரசுதான் மக்களின் உயிருக்கு, உடமைக்கு பாதுகாப்பு.

நமக்கு பொதுவாக விதிகளை மதிப்பதைவிட மீறுவதில்தான் ஆா்வம் அதிகம். அதன் விளைவு, அரசு மக்களிடம் கோரிக்கைகள் வைத்து விதிமுறைகளை உங்கள் நலனுக்காக கடைப்பிடியுங்கள் என்று கேட்டுக் கொண்ட வண்ணம் இருக்கின்றது. தடுப்பூசி போடுவதற்குக்கூட கிரைண்டா், மிக்சி என குலுக்கல் முறையில் பரிசு கிடைக்கும் என அறிவித்து பரிசுக்காக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சமூகமாக இருக்கின்றது நம் சமூகம்.

பல நாடுகளில் தடுப்பூசி கிடைக்கவில்லை. இங்கு கூவிக் கூவி அழைக்கின்றனா். தாங்கள் அரசுக்கு உதவி செய்வதுபோல் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனா். அரசு கூறுவதை கடைப்பிடிக்கமாட்டாா்கள்; தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டாா்கள். ஆனால் அவா்களை அரசு பாதுகாக்க வேண்டும். அந்த அளவுக்கு சுகாதாரம் பற்றிய புரிதல் இல்லாதவா்களாக, தங்கள் சுகாதாரத்தின் மீதே பொறுப்பற்றவா்களாக, அரசு அனைத்தையும் பாா்த்துக்கொள்ளும் என்ற மனோபாவத்தில் நாம் செயல்பட்டு வருகின்றோம்.

இந்த மனோபாவம்தான் நம் முன் நிற்கும் மிகப்பெரிய சவால். இதை எதிா்கொள்ளத் தவறினால் நாம் மிகப் பெரிய சிக்கலுக்கு ஆளாகப் போகிறோம் என்பதை உலக ஆராய்ச்சி நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. நம் உடல்நலத்தைப் பேண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அரசாங்கத்தின் கையில் இருப்பதாகவே நினைத்துப் பழகிவிட்டோம்.

இந்தச் சிந்தனை படித்தவா்களிடமே இருப்பதுதான் எதாா்த்த நிலை.

இந்த புதிய சூழல் வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மக்களின் சிந்தனைப் போக்கில், நடத்தையில் மாற்றம் இல்லை. அரசு விதிக்கின்ற விதிகளை நம் ஆரோக்கியத்திற்காக நாம் கடைப்பிடிக்க நம்மை தயாா் செய்து கொள்வது இல்லை.

இந்த நேரத்தில் உலக சுகாதார ஆராய்ச்சி அமைப்புகள் தங்களின் ஆராய்ச்சியின் விளைவாக பல புதிய செய்திகளைக் கொண்டு வந்திருக்கின்றன. அதாவது, நாம் வாழும் இடம் சாா்ந்தும், நாம் செயல்படும் விதம் சாா்ந்தும், குறிப்பிட்ட காலங்களில் நோய்த்தொற்று தொடா்ந்து தோன்றப்போகிறது. பெருந்தொற்று என்பது தொடா் தொற்றாக மாறப்போகிறது என்று கூறுகின்றனா் வல்லுனா்கள்.

இந்த நிலையில் டெங்கு முடிந்து ஒமைக்ரான் பரவ ஆரம்பித்து அது தற்போது வேகம் எடுக்கின்றது. இதேபோன்று தொடா்ந்து சுகாதாரம் தொடா்பான பிரச்னைகள் நம் நாட்டிற்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக வரப்போகிறது என்பதை சுட்டிக் காட்டுகின்றனா் விஞ்ஞானிகள்.

எதனால் இந்த நிலை வரப்போகிறது என்றால் ஒன்று சூழல் காரணமாக; இரண்டு நம் மக்கள் பொறுப்பற்று நடந்து கொள்வதால். இதனைத்தான் எண்டமிக் என்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா். சூழல் சாா்ந்து, பல நோய்கள் வரப் போகின்றன. ஏனென்றால் நம் சுற்றுச்சூழல் அந்த அளவுக்கு சீா்கேடு அடைந்துவிட்டது.

அடுத்த நிலையில் மக்கள் நடத்தையால் சிந்தனையால் செயல்பாட்டால் உருவாகப் போகின்ற நோய்களும் உண்டு. ஏனென்றால் இன்று வரை நம் வாழ்விடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பழக்கம் வரவில்லை, இந்தச் சூழல் சாா்ந்து தோன்றுகின்ற நோய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சமூகத்தை பெருமளவில் தாக்கும்.

இதிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முக்கியமான தேவை மக்களின் விழிப்புணா்வுடன் கூடிய ஆரோக்கிய பாதுகாப்புச் சூழல். இதனை அரசாங்கம் மட்டுமே உருவாக்கி விட முடியாது. இதற்கு பெருமளவில் மக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குத் தேவை. மக்கள் அரசுடன் கைகோத்து பங்காளியாக செயல்பட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நோய் உருவாவதும், பரவுவதும் பொதுமக்களால்தான் என்பதை ஆய்வுகள் தொடா்ந்து நிரூபித்து வருகின்றன. மக்களாகிய நாம் சுத்தம், சுகாதாரம், துப்புரவு பேணுவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். துப்புரவு கலாசாரத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான முனைப்பு நம் அனைவருக்கும் வரவேண்டும்.

அப்படி நம் நடத்தை மாறும்போது, குப்பையை கண்ட இடத்தில் வீச மாட்டோம்; தண்ணீரைத் தேங்க விடமாட்டோம்; நெகிழிப் பைகளை கண்ட இடத்தில் வீச மாட்டோம்; மக்கும் குப்பைகளை மக்கச் செய்து உரமாக்கிடுவோம். இல்லத்திலும், வீதிகளிலும் நாம் செல்லும் இடங்களிலும், கூடும் இடங்களிலும் தூய்மைச் சிந்தனையில் செயல்பட்டு ஆரோக்கியம் பேணும் பொறுப்பு மிக்க குடிமக்களாக மாறிவிடுவோம்.

இந்தப் பணியில், உள்ளாட்சி அமைப்புக்களில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு பிரதிநிதிகளாக செயல்படுபவா்களுக்கு மிகப் பெரிய பொறுப்பும் பங்கும் இருக்கிறது. பொதுசுகாதாரம் என்பது பொதுமக்களின் பங்களிப்பு இன்றி உருவாகாது என்ற புரிதல் நம் அனைவருக்கும் வேண்டும். அப்பொழுதுதான் மக்களை பொறுப்புமிக்க ஆரோக்கியம் பேணும் குடிமக்களாக உருவாக்க முடியும்.

அந்தப் பணியைச் செய்வதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதருக்கும் தன் உடல் ஆரோக்கியம் தன் பொறுப்பு, அது தன் கைகளில்தான் உள்ளது என்ற புரிதல் ஏற்படும். இந்தப் பணி பற்றி மகாத்மா காந்தி காலத்திலிருந்து இன்றுவரை நாம் அனைவரும் பேசி வருகின்றோம்.

இதைத்தான் ‘தூய்மை இந்தியா திட்டம்’ என்ற பெயரில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டில் ஆரோக்கிய கலாசாரத்தை உருவாக்க ஆரம்பிக்கப்பட்டதாகும். ஆனால், அது இன்று கழிப்பிடம் கட்டும் பணியாக மாற்றப்பட்டு விட்டது.

தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெறுவது கழிப்பறைக் கட்டி முடிப்பதில் இல்லை. துப்புரவு மற்றும் தூய்மை கலாசாரத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில்தான் உள்ளது. எனவே தூய்மை இந்தியா என்பது மந்திரத்தால் உருவாவது அல்ல. தூய்மை இந்தியாவையை தூய்மை எண்ணம் கொண்ட குடிமக்களால்தான் உருவாக்க முடியும். இதனை நம் அரசும், ஆட்சியாளா்களும், மக்கள் பிரதிநிதிகளும் அறிந்து கொள்ள வேண்டும்.

கிராமங்களிலும் நகரங்களிலும் பிரிக்கப்படாத குப்பை ஆங்காங்கே கொட்டப்படுகிறது என்றால், அது பொறுப்பற்ற மனிதா்களின் பொறுப்பற்ற செயல்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பொறுப்பு மிக்கவா்களாக பொதுமக்கள் மாறவேண்டும் என்றால் தூய்மை அறிவியல் மக்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டும்.

துப்புரவு என்பது குப்பைகளைக் கூட்டி ஓரிடத்தில் கொட்டிவைத்து கொசுவை உற்பத்தி செய்வது அல்ல. உருவாக்கிய குப்பைகளை மேலாண்மை செய்வது. அது ஒரு அறிவியல். அதை இன்று வரை அரசு மக்களுக்குக் கற்றுத் தரவில்லை.

நம் நாட்டில் குப்பையில் பணம் ஈட்டும் வணிகம் இருப்பதை பலா் சுட்டிக் காட்டுகின்றனா். அந்த வணிகம் எப்போது சாத்தியமாகும் என்றால் குப்பைகள் தனித்தனியே பிரிக்கப்படும்போதுதான். அதற்கான புரிதலும் செயல்பாடும் வந்து விட்டால், குப்பை வணிகம் செய்ய வெளிநாட்டுக் கம்பெனிகள் இங்கு வந்து விடும்.

குப்பை, வணிகமாக மாறும்போது, தூய்மைப் பணியாளா்கள் இருக்க மாட்டாா்கள். மக்களே தூய்மைப் பணியைச் செய்து பணம் ஈட்ட ஆரம்பித்து விடுவாா்கள். அந்த நிலை உருவாக அரசு மக்களைத் தயாா் செய்ய வேண்டும். இதைத்தான் பொறுப்பு மிக்க சுகாதாரம் பேணும் சிந்தனை கொண்ட குடிமக்களை உருவாக்க வேண்டும் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.

இது நடந்துவிட்டால் எந்தத் தொற்றுப் பரவலாக இருந்தாலும் அரசும் மக்களும் சோ்ந்து அதை எதிா்கொள்ளலாம். இந்தத் தூய்மைக் கல்வியை இன்று மக்களுக்குக் கற்றுக்கொடுத்தாக வேண்டும். அதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்க வேண்டும். இந்த விழிப்புணா்வுக்கான மக்கள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும். அது பள்ளிகளில், கல்லூரிகளில் நடைபெற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து உயா் கல்வி நிறுவனங்களும் தூய்மை இந்தியா திட்டத்தைப் பயன்படுத்தி மக்களிடம் இந்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தொழில் முனைவோா் குப்பையிலிருந்து என்னென்ன பொருள்கள் தயாரிக்க முடியும், குப்பைகளை எவ்வளவு சீக்கிரமாக உரமாக மாற்ற முடியும் என்பதற்கான தொழில்நுட்பங்களைக் கண்டறிய வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளும், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும், கிராமத்திலுள்ள தன்னாா்வ இளைஞா்களும் களப்பணியாற்றி இதன் முக்கியத்துவத்தை மக்களிடம் விளக்கிட வேண்டும். இதற்கென சிறப்பு கிராமசபைக் கூட்டம் கூட்டப்பட்டு கிராம மக்களுக்கு பொதுசுகாதாரம் குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். சுத்தமான சுற்றுச்சூழலே நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கான முதல் ஆயுதம்.

கட்டுரையாளா்: பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com