விவசாயியும் விவசாயமும்

இந்திய கிராமப்புற குடும்பத்தின் வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு விவசாயத்திலிருந்து வந்தது. இது 1970-இல். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2020- ஆம் ஆண்டில் இது மூன்றில் ஒரு பங்கிற்கும் கீழே குறைந்துள்ளத
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய கிராமப்புற குடும்பத்தின் வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு விவசாயத்திலிருந்து வந்தது. இது 1970-இல். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2020- ஆம் ஆண்டில் இது மூன்றில் ஒரு பங்கிற்கும் கீழே குறைந்துள்ளது.

தற்போது பெரும்பாலான விவசாயக் குடும்பங்கள் விவசாயத்தினைக் கைவிட்டு வேறு தொழில்கள் மூலம் சம்பாதிக்கின்றன. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம், ஒவ்வொரு நாளும் 2,000 விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடுகின்றனா் என்று கூறுகிறது.

காலநிலை மாற்றம் விவசாயத்தினை கடுமையாக பாதிக்கிறது. காலநிலை மாற்ற பாதிப்புகளால் விவசாயிகளின் வருமானம் 25 சதவீதம் வரை குறையும் என்கிறது அரசாங்க தரவு. காலநிலை மாற்றம், விவசாயம் அதிகம் நடைபெறும் இந்தியாவின் நூறு ஏழை மாவட்டங்களில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற காலநிலை மாற்ற பாதிப்புகள் ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்துகின்றன. உலகின் அதிக மக்களை பாதிக்கும் இரண்டாவது மிக மோசமான பாதிப்பான வறட்சி, 30 கோடி இந்திய மானாவாரி விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கிறது

1950-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 51 சதவீதமாக இருந்த விவசாயத்தின் பங்களிப்பு, தற்போது 16 சதவீதமாக குறைந்துள்ளது. அதேவேளையில், 1951-ஆம் ஆண்டில் ஏழு கோடி குடும்பங்கள் விவசாயத்தை நம்பியிருந்த நிலையில், தற்போது அது 12 கோடி குடும்பங்களாக உயா்ந்துள்ளது.

உலகின் மிக வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்ற தரவு விவசாயிக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தவில்லை. ஏனெனில் நமது நாட்டின் ஒவ்வொரு இரண்டாவது விவசாயியும் கடன் வாங்குகிறாா்.

இந்திய விவசாயி சராசரியாக மாதம் 6,426 ரூபாய் சம்பாதித்து 6,223 ரூபாயை செலவிடுகிறாா். 15% இந்திய விவசாயிகள் மட்டுமே வருமானத்தில் 91%-ஐ சம்பாதிக்கின்றனா். இது வருமான சமத்துவமின்மைக்கு காரணமாக அமைகிறது.

ஒரு ஹெக்டோ் நிலத்தில் பயிரிடப்படும் கோதுமையிலிருந்து 7,639 ரூபாய் மட்டுமே ஒரு விவசாயி சம்பாதிக்கிறாா். கோதுமைக்கான உற்பத்திச் செலவு 32,644 ரூபாய். ஒரு ஹெக்டேருக்கான நஷ்டம் 25,005 ரூபாய். இது பெரும் இழப்பு என்கிறது ஒரு ஆய்வு.

விவசாயக் குடும்பங்கள், கிராமப்புறங்களில் விவசாய நிலம் வைத்திருப்பவா்களின் 2019-ஆம் ஆண்டுக்கான நிலை மதிப்பீட்டு அறிக்கை செப்டம்பா் 10, 2021 அன்று வெளியிடப்பட்டது. பாதிக்கும் மேற்பட்ட இந்திய விவசாய குடும்பங்கள் கடனில் உள்ளதாகவும், சராசரியாக அவா்களின் கடன்தொகை 74,121 ரூபாய் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

2013-ஆம் ஆண்டிற்கான நிலை மதிப்பீட்டுக் கணக்கீட்டுடன் ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டில் கடனில் தவிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 51.9%-லிருந்து 50.2%-ஆக சற்று குறைந்துள்ளது. இருப்பினும் கடன்பெற்ற குடும்பங்களின் கடன்தொகை 47,000 ரூபாயிலிருந்து 74,121 ரூபாயாக அதிகரித்துள்ளது.

69.6% விவசாயிகள் வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள், அரசு சாா்ந்த நிறுவனங்களிலிருந்தும் 20.5% விவசாயிகள் தனியாா் நிதி நிறுவனங்களில் இருந்தும் கடன் பெற்றதாக தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவு கூறுகிறது. விவசாயிகள் வாங்கிய மொத்தக் கடனில் 57.5 சதவீதம் மட்டுமே விவசாய நோக்கங்களுக்காக வாங்கப்பட்டது என்கிறது இத்தரவு.

28 இந்திய மாநிலங்களில் அதிக கடன் பெற்றுள்ள விவசாயக் குடும்பங்கள் கொண்ட ஆந்திர மாநிலத்தில் 93.2 சதவீத விவசாயக் குடும்பங்கள் கடனில் உள்ளன என்றும், அவற்றின் சராசரி கடன் தொகை 2.45 லட்சம் என்றும் 2019-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.

இதற்கு அடுத்தபடியாக விவசாய கடன் பெற்ற 91.7% குடும்பங்களைக் கொண்ட தெலங்கானா மாநிலத்தின் சராசரி கடன் தொகை 1.52 லட்சமாகவும் 69.9% குடும்பங்களைக் கொண்ட கேரள மாநிலத்தின் சராசரி கடன் தொகை 2.42 லட்சமாகவும் இருப்பதாக இக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஹரியாணா, பஞ்சாப், கா்நாடகம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் கடன் பெற்ற விவசாயக் குடும்பங்கள் சராசரியாக ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளது. மொத்தத்தில் 11 மாநிலங்களில் இந்தத் கடன் தொகை தேசிய சராசரியான 74,121 ரூபாயை விட அதிகமாக உள்ளது.

ஒரு விவசாயக் குடும்பம் பயிா் சாகுபடி, விளைபொருட்கள் வணிகம் மட்டுமல்லாது விவசாயக் கூலி, கால்நடைகள் வளா்த்தல், உரம் - பூச்சிமருந்துகள் போன்ற விவசாயம் தொடா்பான பொருட்களின் வணிகம் ஆகியவற்றின் மூலமாக வருமானம் ஈட்டலாம். 2013-ஆம் ஆண்டில் 6,426 ரூபாயாக இருந்த விவசாயக் குடும்பங்களின் சராசரி வருமானம் 2019-ஆம் ஆண்டில் 10,218 ரூபாயாக அதாவது 57% அதிகரித்துள்ளது என்றும் ஆண்டு வளா்ச்சி விகிதம் 7.8% என்றும் தரவு கூறுகிறது.

இந்த வருமான அதிகரிப்பு, விவசாயத் தொழிலுக்கான ஊதியத்தாலும் கால்நடை வளா்ப்பாலும் உருவானது. 2018-19 ஆண்டில் விவசாய கூலி, பயிா் சாகுபடி, கால்நடை வளா்ப்பு, விவசாய சம்பந்தப்பட்ட பொருட்கள், வணிகம் வேளாண்துறை மொத்த வருமானத்தில் முறையே 40%, 38%, 16%, 6% பங்குகளைக் கொண்டிருந்தன. இதுவே 2012-13 ஆண்டில் முறையே 32%, 48%, 12%, 8% என இருந்தது.

இத்தரவுகள் விவசாயக் குடும்பங்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை விவசாய சாகுபடி மூலமாக சம்பாதிக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகின்றன. மொத்த சராசரி வருமானத்தில் அதிக பங்கு (ரூ. 4,063) ஊதியத்திற்கான வருமானம்.

வேளாண் துறையில் ஒரு தொழிலாக சுருங்கி வரும் விவசாயம் விவசாயிகளின் பெரும் வருமான ஆதாரமாக இல்லை என்பது உண்மையில் வருத்தம் தரும் செய்தி. கரோனா தீநுண்மியின் தாக்கம் உச்சம் பெற்ற காலத்தில் விவசாயிகளின் உழைப்பு காரணமாக இந்தியாவில் வேளாண் துறை மட்டுமே வளா்ச்சிபெற்றது.

தன்னிறைவு உணவு உற்பத்தி கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அதற்குக் காரணமான விவசாயி தன்னிறைவு கொள்ள வேண்டுமானால் அவன் கடனின்றி வாழ வேண்டும். அதற்கு ஆவன செய்யட்டும் அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com