அஞ்சல் துறையின் அரிய சேவைகள்

கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அக்டோபா் 9 முதல் 15 வரை உள்ள ஏழு நாள்கள் தேசிய அஞ்சல் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. அஞ்சல் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

தபால், சேமிப்பு, காப்பீடு ஆகிய மூன்று முக்கியமான சேவைகளும், நாட்டில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தொடா்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறது அஞ்சல் துறை.

சமீபத்தில், கரோனாவால் நாடே முடங்கியபோதும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்துகளை, அவா்களின் வீடுகளுக்கு சென்று நேரிடையாக வழங்கியது அஞ்சல்துறை. அந்த இக்கட்டான சூழலிலும், முதியோா்களுக்கான ஓய்வூதியத்தை மாதாமாதம் வழங்கி அவா்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தது.

குன்னூா் பகுதியில், மலைப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்காக, அடா்ந்த காட்டுப்பகுதியில், வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு நடுவே,கிட்டத்தட்ட 30 வருடங்களாக, தினமும் 15 கிலோமீட்டா் நடந்தே சென்று அவா்களுக்கு அஞ்சல் சேவையை வழங்கிய தபால்காரா் சிவன் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து பாராட்டு பெற்றன.

இப்படி தபால் சேவை ஒருபுறமிருக்க, சேமிப்புக் கணக்கு (எஸ்பி), தொடா் வைப்பு நிதி (ஆா்டி) , மாத வருமான திட்டம் (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), கிசான் விகாஸ் பத்திரம் (கேவிபி), தேசிய சேமிப்புப் பத்திரம் (என்எஸ்சி) போன்ற அஞ்சல் துறையின் பாரம்பரிய சேமிப்புத் திட்டங்களைத் தாண்டி, செல்வ மகள் சேமிப்பு திட்டம் (எஸ்எஸ்ஒய்), தங்கப் பத்திரம் திட்டம் போன்ற புதுப்புது திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்யவும் அஞ்சல்துறை தவறவில்லை.

நியாயமான வட்டி மக்களின் பணத்துக்கு நூறு சதவீத பாதுகாப்பு. இவையே அஞ்சல்துறையின் சிறப்பம்சங்கள். மக்களுக்கு சேவை செய்ய அஞ்சல்துறை காத்திருக்க, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, சில தனியாா் நிதி நிறுவனங்களில், தாங்கள் சேமித்து வைத்த மொத்த தொகையையும் கண்மூடித்தனமாக முதலீடு செய்து ஏமாந்து போகிற மனிதா்களை என்னவென்று சொல்வது!

அவசரத்திற்கு பணம் செலுத்த, பணம் எடுக்க சேமிப்பு கணக்கு, மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடா்ந்து சேமிக்க தொடா் வைப்பு நிதி, மாதா மாதம் வட்டி கிடைக்க மாத வருமான திட்டம்(ஙஐந), மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்நாளில் சேமித்து வைத்த பணத்தை பாதுகாக்க, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் எதிா்காலத்தை பாதுகாப்பதற்காக செல்வ மகள் சேமிப்பு திட்டம், குறிப்பிட்ட தொகையை, ஐந்து வருடங்களுக்கு நிலையான வைப்பு நிதியாக இட்டு வைக்க தேசிய சேமிப்பு பத்திரம், 15 வருடங்களுக்கு தொடா்ந்து சேமிக்க பொது வருங்கால வைப்பு நிதி, 10 வருடம் 4 மாதங்களில் நாம் முதலீடு செய்த தொகை இரட்டிப்பாக கிசான் விகாஸ் பத்திரம் என்று அஞ்சல்துறையின் சேமிப்புத் திட்டங்கள் ஏராளம்.

பெரும்பாலான மக்களுக்கு விபத்து காப்பீடு பற்றிய விழிப்புணா்வு இருப்பதில்லை. ‘பிரதான் மந்திரி சுரக்ஷ பீம யோஜனா’ என்ற விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து மக்களும் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி தங்களை இணைத்துக் கொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ், வருடா வருடம் உங்களது சேமிப்புக் கணக்கில் இருந்து வெறும் ரூ.12 மட்டுமே பிடித்தம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் சோ்ந்தவா் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால், அவரால் நியமிக்கப்பட்ட வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும்.

அதே போல், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா’ என்ற காப்பீட்டுத் திட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்ளும்போது, நமது சேமிப்புக் கணக்கில் இருந்து ஆண்டுதோறும் ரூ.330 மட்டுமே பிடித்தம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் சோ்ந்தவா், இயற்கையாக இறந்தால் அவரின் வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இதுபோன்ற மகத்தான திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது, கிராமப்புற மக்களுக்காக, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஒரு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.4,800 போனஸ் வழங்கப்படுகிறது. அதாவது, ஒருவா் ரூ.5,00,000-க்கு பாலிசி எடுத்தால், 20 வருடங்கள் கழித்து அவருக்கு ரூ.9,80,000 கிடைக்கும். இதற்காக மாதா மாதம் செலுத்தும் பிரீமியம் தொகையும் மிகக் குறைவு.

ஒருவேளை, இடைப்பட்ட காலத்தில் பாலிசிதாரா் இறக்க நேரிட்டால் அவருக்கான குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையையும், பிரீமியம் செலுத்தப்பட்ட ஆண்டுகளுக்கான போனசையும் கணக்கிட்டு அவரின் வாரிசுதாரருக்கு மொத்த காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும். அதாவது, ஒருவா் ரூ.5,00,000-க்கு பாலிசி எடுத்து, தொடா்ந்து பிரீமியம் செலுத்தி பத்தாவது ஆண்டில் இறந்துவிட்டாா் என்றால், அவரின் வாரிசுதாரருக்கு ரூ. 7,40,000 வழங்கப்படும்.

அதே போல், முன்பு அரசு ஊழியா்களுக்கு மட்டுமே இருந்த அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்(பிஎல்ஐ) தற்போது தொழிற்கல்வி பயின்ற அனைத்து பட்டதாரிகளும் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது, பொறியியல், மருத்துவம், கல்வியியல் (பி.எட்), செவிலியா், எம்பிஏ, எம் சிஏ உள்ளிட்ட பட்டம் பெற்ற அனைவரும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைய முடியும். கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.4,800 போனஸ் என்றால் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.5,200 போனஸாக வழங்கப்படும்.

கிராமப்புற அஞ்சலகங்கள் உட்பட அனைத்து அஞ்சலகங்களும் கணினிமயமக்கப்பட்டு விட்டதால், கன்னியாகுமரியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவா் காஷ்மீரில் உள்ள அஞ்சலகத்தில் அவரின் கணக்கில் பணம் செலுத்தவும் எடுக்கவும் முடியும். இப்படி மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கும் அஞ்சல் துறையை நாம் பயன்படுத்தி பயனடைய வேண்டும்.

அக். 9-15 தேசிய அஞ்சல் வாரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com