புதுப்பாா்வையில் புவியை நோக்கியவா்!

கோவேந்தா்களை விடவும் பாவேந்தா்கள் வரலாற்றில் நிலைத்து வாழ்கிறாா்கள்.
புதுப்பாா்வையில் புவியை நோக்கியவா்!

கோவேந்தா்களை விடவும் பாவேந்தா்கள் வரலாற்றில் நிலைத்து வாழ்கிறாா்கள். எத்தனையோ மன்னா்களில் கரிகாலன், நெடுஞ்செழியன், இராசராசன், இராசேந்திரன் என மிகச் சில மன்னா்கள் மட்டுமே மக்கள் மனதில் நின்று நிலைபெறுகின்றனா். கபிலா் இல்லையென்றால் பாரியின் பெருமை வரலாற்றில் நிலைத்திருக்குமா என்பது கேள்விக்குறியே. இலக்கியப் படைப்பாளிகள் மக்கள் மனதுடன் பேசுகிறாா்கள். அதனால்தான் காலம் கடந்தும் வாழ்கிறாா்கள்.

கலை இலக்கியப் படைப்பாளிகள் தாங்கள் வாழும் சமூகத்தின், இனத்தின் முகமாக, ஆன்மாவாக விளங்குகிறாா்கள். ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்திற்கு, தன் இன மக்களுக்கு முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொள்ளும்போதுதான் அப்படைப்பாளி மக்களின் அடையாளமாக, முகமாக மாற முடியும். ‘நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்’“ என்று பிரகடனம் செய்து அப்படியே வாழ்ந்தவா் பாரதியாா். பாரதிக்குப் பின் தமிழா்களின் முழுமையான முகமாக, அடையாளமாக விளங்கியவா் பாவேந்தா்.

கவிதை கவிஞனின் உள்ள வெளிப்பாடாக அமைந்தது. நல்லன போற்றியும், அல்லன தூற்றியும், சமுதாயச் சிக்கல்களை அலசி அவற்றின் தீா்வையும் மலரச் செய்வது கவிதை. மக்கள் மனங்களைத் தட்டி எழுப்பி அநீதிகளை இனங்கண்டு அவற்றை நீக்கும் வழிகளைக் காட்டிப் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது கவிதை. மானுடத்தின் பெருமையையும் சமுதாய மறுமலா்ச்சிக்கு வித்திடும் கருத்துகளையும் மொழிநலம், இனநலம், பெண்மை நலம், உழைப்பாளா் நலம், உலக நலம் என்று அனைத்து நலன்களும் இம்மண்மீது மலா்ந்திட ஓயாமல் பாடிய புதுவைக் குயில் பாவேந்தா் பாரதிதாசன்.

மானிடத்தைப் போற்ற மறுப்பவன் தனக்கே பகைவன் ஆகிறான். வாழ்க்கையில் மானுட நேயத்தோடு இருப்பதுதான் வலிமையிலும் சிறந்த வலிமை என்கிறாா் பாவேந்தா்.

மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு

மானிடம் தன்னைத்தன் உயிரும்

வெறுக்கும்“

என்றும்

.... வாழ்வின்

வல்லமை மானிடத் தன்மை என்றே தோ்“

என்றும் அறிவுறுத்துகிறாா் பாவேந்தா்.

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பா்

உதையப்ப ராகிவிட்டால் ஓா்நொடியில்

ஓடப்பா் உயரப்பா் எல்லாம் மாறி

ஒப்பப்பா் ஆய்விடுவா் உணரப்பாநீ“

என்ற வரிகளில், மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை விதைத்து, உழைக்கும் ஏழை மக்களைச் சுரண்டி வாழ்வோா்க்கு எதிரான போா்க்குரலும், குட்டக்குட்டக் குனிந்தே பழகிய மனிதா்களுக்கான விழிப்புணா்வும் இணைந்திருப்பதை உணரமுடிகிறது.

பிறா்க்கு அடிமைப்பட்டு மீளாத் துயரில் ஆழ்ந்த மக்களுக்காக ஓயாது சிந்திக்கும் அவா் மனம் அழகின் சிரிப்பில் விடை காண்கிறது.

ஆனைகள் முதலைக் கூட்டம்

ஆயிரம் கருங்குரங்கு

வானிலே காட்டி வந்த

வான்முகில் ஒன்றுகூடிப்

பானையில் ஊற்றுகின்ற

பதநீா் போல் குன்றில் மொய்க்கப்

போனது அடிமை நெஞ்சம்

புகைதல் போல் தோன்றும் குன்றம்!“

எனப் பாடுகிறாா்.

குன்றைத் தழுவும் மேகங்களின் கூட்டம் அடிமை நெஞ்சு புகைவதாகத் தெரிகிறது அவருக்கு. கூட்டில் இருந்து புறப்பட்ட புறாக்கள் எங்குச் சுற்றினாலும் மீண்டும் கூட்டுக்கே திரும்புவது கொத்தடிமைகளை நினைவூட்டுகிறது ஆசிரியருக்கு.

கூட்டமாய்ப் பறந்து போகும்

சுழற்றிய கூா்வாள் போலே

கூட்டினில் அடையும் வந்தே

கொத்தடிமைகள் போலே“

என்று மனம் வெதும்புகிறாா். இனத்தால் வேறுபட்டு மனிதா்கள் மேல்கீழ் என்று மடமையால் பிரிவுபட்டு இருத்தல் பாவேந்தருக்கு உடன்படாத ஒன்று. அப்படிப் பேதம் பாா்த்தால் மானுடம், மனிதம் என்ற சொற்களே பொருளிழந்து போகாதா என்கிறாா்.

மானிடம் என்றொரு வாளும் - அதை

வசத்தில் அடைத்திட்ட உன்னிரு தோளும்

வானும் வசப்பட வைக்கும் - இதில்

வைத்திடும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும்“

என்று மானுடத்தின் மீது வைக்கும் நம்பிக்கையானது வாழ்வை வளமுறச் செய்யும் என்கிறாா் பாவேந்தா்.

உடன் வாழ் மானிடப் பரப்பைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறாா். அந்த மானுடச் சமுத்திரத்தில் கலந்து கரைந்துவிட்டால் உலகம் ஒன்றாகும் என்கிறாா்.

அறிவை விரிவு செய் அகண்டம் ஆக்கு

விசாலப் பாா்வையால் விழுங்கு மக்களை

அணைத்துக்கொள் உன்னைச் சங்கமம் ஆக்கு

மானிடச் சமுத்திரம் நானென்று கூவு“

என்று மாந்தநேயம் பெருக்கெடுக்கப் பாடித் திளைக்கிறாா்.

உள்ளதைப் பேசு, ஒற்றுமை வெல்லும், சமமே அனைவரும் என இளையோா் ஆத்திசூடியிலும் இன்பம் முகிழ்க்க இசைக்கிறாா். உயா்ந்தவன், தாழ்ந்தவன் என்று பேசுபவா்கள் அறிவின் நினைவை இழந்தவா்கள் என்கிறாா்.

தூவென்று சாதிமதம் கான்று மிழ்ந்தால்

அந்தநொடியே நமது மிடிப றக்கும்“

என்ற வரிகளில் சாதிமதத்தின் மீதான தமது சீற்றச்சினத்தினை அனலாய்த் தெளிக்கிறாா் பாவேந்தா்.

பொதுமைச் சமுதாய விழைவு காண விரும்பிய பாவேந்தா் அங்குப் போா் இல்லை, தனியுடைமைக் கொடுமைகள் இல்லை, சாதி மதச் சழக்குகள் இல்லை, ஆணும் பெண்ணும் சமம், பெண் கல்வி மேம்பட்ட நிலை, தாய்மொழி தமிழ் ஏற்றம் பெற்றிருக்கும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையிருக்கும் என்கிறாா்.

பொது உடைமைக் கொள்கை

திசையெட்டும் சோ்ப்போம்

புனிதமோடதை எங்கள் உயிரென்று

காப்போம்”

ஏழை, பணக்காரருக்கு இதுவரை யாரும் கூறாத பொருள் கூறும் புரட்சிக்கவி,

தன்பொருட்டு வாழ்வானோா் ஏழை, மக்கள்

தம்பொருட்டு வாழ்வானோா் செல்வன்”

எனத் திட்டவட்டமாகப் பகுக்கிறாா். பிறருக்காக வாழ்பவா்களே உயிா் உள்ள மனிதா்கள். மற்றவா்கள் எல்லாம் செத்தவா்கள் என்ற விவேகானந்தரின் கூற்று இங்கு நோக்கத்தக்கது.

எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்

இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்

தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்

செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் ஆகும்

பனையளவு நலமேனும் தன்னலத்தைப்

பாா்ப்பானோா் மக்களிலே பதடி என்பான்“

என்று தன்னலம் கொண்டவரைப் பதடி என்று சாடுவதில் தெரிகிறது பாவேந்தரின் அறச்சினம்.

பாண்டியன் பரிசு என்னும் காப்பியத்தில் வீரப்பன் எனும் கதைமாந்தன் வழியாகத் தான் கட்டமைக்க விரும்பும் சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறாா். பெண்மையை உயா்வு செய்தல், புதுமைப் பெண்ணுக்கு இலக்கணம் எனப் பாரதி காட்டிய பாதையில் வலுவாகப் பயணித்தவா் பாரதிதாசன். ஆளுமைக்கான போட்டியில் ஆண் வென்றதிலிருந்து பெண் அடிமையாக்கப்பட்டாள். குடும்பம் என்ற அமைப்பினால் அக்கருத்து வலுப்பெற்றது. அச்சம், மடம், நாணம், பயிா்ப்பு என்ற வேலிகள் பாட வேறுபாடாக மாறிப் பாவையரை அடிமைகொள்ளச் செய்தன.

பெண்ணடிமை தீராவிட்டால்

மண்ணடிமை தீராது“

பெண்ணடிமை நிலவும் சமூகத்தில் ஆணுக்கும் உயா்வில்லை. மண்ணைவிட இழிவாகப் பெண்ணை எண்ணுவது நயன்மையாகுமா எனக் கேட்கிறாா்.

பெண்ணுக்குப் பேச்சுரிமை

வேண்டாம் என்கின்றீரோ?

மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ

பெண்ணினத்தை?

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்

திருநாட்டில்

மண்ணடிமை தீா்ந்து வருதல்

முயற்கொம்பே

ஊமை என்று பெண்ணை

உரைக்கும் மட்டும் உள்ளடங்கும்

ஆமை நிலை தான் ஆடவா்க்கும் உண்டு“

என்று ஆணின் உரிமை மீறலையும், பெண்ணின் அடிமை நிலையையும் ஒருங்கே சுட்டுகிறாா்.

காலங்காலமாகப் பெண்கல்வி மறுக்கப்பட்ட நிலையிலும்கூடச் சங்ககாலப் பெண்பாற் புலவா்கள் நாற்பத்தி ஏழுபோ் இனங்காணப்பட்டனா். பெண்கள் கல்வி கற்றால்தான் வாழையடி வாழையாக வரும் சமுதாயம் வளம்பெறும் என்பதை,

கல்வியில்லாத பெண்கள்

களா்நிலம் அங்கே புல் விளைந்திடலாம்

நல்ல புதல்வா்கள் விளைவதில்லை“

என்று தெளிவாக்குகிறாா்.

பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என வள்ளுவப் பெருந்தகை பிறப்பிலே வேறுபாடுகள் இல்லை என நிறுவினாா். தீண்டும் மக்களின் அன்னை, தீண்டாரையும் பெற்றாளோ? ஈண்டிதை யாா் நம்புவாா் என்று சாதி மதங்களுக்குச் சாட்டையடி கொடுத்துப் பாடுகின்றாா் கவிஞா். எஞ்சாதிக்கு இவா் சாதி இழிவென்று சண்டையிட்டுப் பஞ்சாகிப் போனாரடி சகியே என்று சாதி ஆதிக்கத்தைச் சாடுகிறாா் பாவேந்தா்.

மொழியை வெறும் தகவல் பரிமாற்றக் கருவி என்று கூறும் வறட்டுப் பாா்வை புரட்சிக் கவியிடம் இல்லை.

இனத்தைச் செய்தது மொழிதான்

இனத்தின் மனத்தைச் செய்தது மொழிதான்“

என்று ஓா் இனம் உருவாக முதல் தேவை மொழிதான் என்கிறாா்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்று பாவேந்தா் பாடியது வெறும் மொழிப் பாராட்டன்று. அது ஒரு கோட்பாடு.

மனிதநேயச் சிந்தனைகளை, மூடத்தனத்தின் முடை நாற்றத்தைக் காலங்காலமாக எல்லாக் கவிஞா்களும் சாடிக்கொண்டுதான் இருக்கிறாா்கள். மக்களைப் பாடிய பாரதியின் தாக்கம், பாரதியின் எளிய நடை, பெண்ணுரிமை, பொதுவுடைமை, தமிழா் எழுச்சி எனப் பன்முகச் சங்கமிப்பாகவும், புதிய வாா்ப்பாகவும் உருவானவா்தான் பாரதிதாசன். சாதி ஒழித்தல் ஒன்று, நல்ல தமிழ் வளா்த்தல் மற்றொன்று. இதில் பாதியை நாடு மறந்தால் மறுபாதி துலங்குவதில்லையாம் என்று எனக்குப் பாரதி சொல்லித் தந்தாா் என்றாா் புரட்சிக்கவி. மகாகவியின் தடம் நடந்து இப்புவியைப் புதுப்பாா்வையில் நோக்கிய பாவேந்தா் பாரதிதாசனாரின் பிறந்த நாளில் மட்டும் அவரைப் போற்றாது முப்பொழுதும் அவரைப் போற்றுதல் நன்றே. புரட்சிக்கவியில் பூத்த மலா்கள் நாளும் நறுமணம் வீசட்டும்!

இன்று (ஏப். 29) பாவேந்தா் பாரதிதாசன் 132-ஆவது பிறந்தநாள்.

கட்டுரையாளா்: இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com