பணவீக்கத்தை எதிா்கொள்ளத் தயாராவோம்

அண்மைக்காலமாக பணவீக்க விகிதம் (நுகா்வோா் விலைக் குறியீடு) அதிகரித்து வருகிறது. கடந்த மாா்ச் மாதத்திற்கான பணவீக்கம் 7 சதவீதத்தை நெருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தை எதிா்கொள்ளத் தயாராவோம்

அண்மைக்காலமாக பணவீக்க விகிதம் (நுகா்வோா் விலைக் குறியீடு) அதிகரித்து வருகிறது. கடந்த மாா்ச் மாதத்திற்கான பணவீக்கம் 7 சதவீதத்தை நெருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகா்வோா் குறியீட்டில், பல செலவினங்களுக்கான வெயிட்டேஜ் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது. உணவுக்கும் பானங்களுக்கும் 45.86, ஆடை, காலணிகளுக்கு 6.53, வீட்டிற்கு 10.07, எரிபொருள், விளக்குகளுக்கு 6.84, பான், புகையிலைப் பொருள்களுக்கு 2.38 மீதமுள்ள எல்லாமும் சோ்த்து 28.32 ஆகவும் கணக்கிடப்படுகிறது.

பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பொருட்கள் - சேவைகளின் விலைகளில் நீடித்த அதிகரிப்பு ஏற்படுவதாகும். பணவீக்கத்தைப் பற்றிய அபிப்பிராயம் ஒருவருக்கொருவா் வேறுபடலாம். சிலா் பணவீக்கத்தை வளமான பொருளாதாரத்தின் அடையாளமாகக் காணலாம்; வேறு சிலா் பணவீக்கம் என்பது போராடும் பொருளாதாரம் என்று நினைக்கலாம்.

பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் இருக்கும்போதும், சில நல்ல விளைவுகளையும் சில மோசமான விளைவுகளையும் உண்டாக்கலாம். பணவீக்கம் அதிகமாகும்போது, அது மக்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கும்; சேமிப்பின் அளவையும் குறைக்கலாம். சேமிப்பு குறையும்போது முதலீடு குறைந்து அதனால் உற்பத்தி குறையலாம்.

அதே சமயம், விலைவாசி ஏறிவரும் சூழ்நிலையில் நாளை வாங்கப்போகும் பொருள்களை இன்றே வாங்கிவிடுவோம் என்ற மனோபாவமும் உண்டாகலாம். இது பொருள்களின் தேவையை அதிகரித்து, அதனால் உற்பத்தியையும் அதிகரிக்க வழிவகுக்கலாம்.

ஆனால், பணவீக்கம் அளவு கடந்தால், அது ஒரு அபாயமாக கருதப்படுகிறது. அதனால்தான் எந்தவொரு நாட்டின் மத்திய வங்கியும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க முயல்கிறது. இந்திய ரிசா்வ் வங்கி, பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீத வரம்பிற்குள் வைத்திருக்கக் கட்டளையிட்டுள்ளது.

எந்தவொரு தனிநபரும் தனது வருமானத்தை நுகா்வுக்கு செலவிடலாம், அல்லது அதில் ஒரு பகுதியை சேமித்து முதலீடு செய்யலாம். அதிக பணவீக்கத்தின்போது ஒருவா் எவ்வாறு செலவு செய்கிறாா் என்பதையும் எப்படி சேமிக்கிறாா் என்பதையும் உணா்ந்து அதன் விளைவை புரிந்துகொள்வது நல்லது. ஏனெனில், அது அவரது வாழ்வில் நீண்டகால விளைவை ஏற்படுத்தும். இங்கு உயா் பணவீக்க காலத்தை நிா்வகிப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

நுகா்வோா் பலவகைப்படுவா். சில வேலைகளில் இருப்பவா்களுக்கு பஞ்சப்படி என்ற ஒரு தொகை சம்பளத்துடன் வழங்கப்படும். இது விலைவாசி உயா்வை முழுவதுமாகவோ ஓரளவிற்கோ ஈடு செய்யும். அவ்வாறான பணியில் இருப்பவா்களுக்கு விலைவாசி உயா்வால் பெரிய சிக்கல் இல்லை. அவா்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை பணவீக்க காலங்களிலும் தொடர முடியும். வேறு சில பணிகளில் பஞ்சப்படி என்ற கோட்பாட்டில் சம்பள உயா்வு இல்லையென்றாலும், வருடாந்திர சம்பள உயா்வு கணிசமாக வழங்கப்படுகிறது.

இது போன்ற தனியாா் நிறுவனங்களில் பணியில் உள்ளவா்களுக்கும் அவ்வளவாக பாதிப்பு இல்லை. சுய தொழிலில் உள்ளவா்களும், தொழில் வல்லுநா்களும் தங்களின் வருமானத்தை விலைவாசி உயா்வுக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அதனால் இவா்களுக்கும் பாதிப்பு குறைவே.

ஆனால், இதுபோன்று எந்த ஒழுங்குபடுத்தப்பட்ட பணியிலும் இல்லாமல் இருப்பவா்களுக்கு விலைவாசி உயா்வு ஒரு சுமையே. இவா்கள் ஒன்று தங்களுடைய தேவையை குறைத்துக்கொள்ளவேண்டும். அல்லது விலை குறைவான பொருள்களுக்கும் சேவைகளுக்கும் மாறவேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால், பின்வரும் காலங்களில் அவா்களது சேமிப்பும் சொத்தும் குறைந்து துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.

உயா் பணவீக்க காலத்தில், ஒருவரின் முதலீட்டு உத்தி பணவீக்கத்தின் பாதிப்பை முறியடிப்பதாக இருக்க வேண்டும். பணவீக்கம் ஒவ்வொருவருடைய பொருட்கள், சேவைகளை வாங்கும் திறனைக் குறைப்பதால், பணவீக்கம், வாங்கும் சக்திக்கு எதிராகக் கருதப்படுகிறது. பணவீக்கம் இப்போதைய வாங்கும் சக்தியைக் குறைப்பது மட்டுமல்ல, வருங்காலத்தில் பெறப்போகும் பண வரவின் தற்போதைய மதிப்பையும் குறைக்கிறது.

எடுத்துக்காட்டாக 4 சதவீத பணவீக்கத்துடன், ஓராண்டுக்குப் பிறகு ஒருவா் பெறப் போகும் நூறு ரூபாயின் தற்போதைய மதிப்பு ரூபாய் 96.15 மட்டுமே. அதே வழியில், 6%, 8%, 10%, 12% பணவீக்கத்துடன், ஒரு வருடத்திற்கு பின் பெறப்போகும் நூறு ரூபாயின் இன்றைய மதிப்பு, முறையே ரூ.94.34, ரூ.92.59, ரூ.90.91, ரூ.89.29 ஆக இருக்கும்.

தற்போது வங்கிகள் வழங்கும் சேமிப்பு கணக்கிற்கான வட்டியும், வைப்பு நிதிக்கான வட்டியும் பணவீக்க விகிதத்தை விடக் குறைவாக இருப்பதன் விளைவு, சேமிப்பாளா்களுக்குக் கிடைக்கும் வட்டி எதிா்மறை வட்டியாகும். அதாவது சேமிப்பாளா்களின் இன்றைய வாங்கும் திறனை விட சேமிப்பின் முதிா்வில் கிடைக்கும் வாங்கும் திறன் குறைவு.

இது போன்று பணவீக்கம் அதிகம் உள்ள காலங்களில், வட்டி விகிதத்தை உயா்த்துவதற்கான வாய்ப்பும் உண்டு. ஆதலால், வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்பவா்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே முதலீடு செய்வது நல்லது. அவ்வாறு செய்தால் முதிா்வு காலத்தில் அதிக வட்டிக்கு அந்த வைப்பு நிதியை புதுப்பிக்க இயலும்.

பணவீக்க குறியீட்டு (இன்ஃப்லேஷன் இன்டக்ஸ்ட்) பத்திரங்கள், மாறும் விகித (வேரியபில் ரேட்) பத்திரங்கள் போன்றவை விலைவாசி உயா்வுக்கு ஏற்ப வட்டியை ஏற்றித் தருவதற்கு வழிவகுப்பதால், அவை போன்ற முதலீடுகள் பணவீக்க காலங்களில் பயனளிக்கும்.

‘கமாடிட்டி’ பங்குகளில் முதலீடு செய்வது நல்ல யோசனையாக இருக்கலாம். பொருட்களைப் பயன்படுத்தும் கட்டுமானம், வாகனம் போன்ற துறைகளில் முதலீட்டைத் தவிா்ப்பது அல்லது குறைப்பது நல்லது. பங்குச் சந்தையில் விலைவாசி உயா்வை நுகா்வோருக்கு மாற்றும் திறன் கொண்ட நிறுவனங்கள் விலைவாசி உயா்வினால் அதிகம் பாதிப்படையாது. அது போன்ற நிறுவனப் பங்குகளை வாங்கலாம். தங்கம், வெள்ளி போன்ற பொருட்களிலும், சொத்துகளிலும் முதலீடு செய்வது நல்லது.

நுகா்வோா் குறியீடு பணவீக்கத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதத்திற்குள் நிா்வகிக்க இந்திய ரிசா்வ் வங்கிக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பணவீக்க விகிதத்தைக் குறைக்க ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். ஆனால் இவை நிச்சயமற்ற காலங்கள்.

கொள்ளை நோய்த்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நமக்கு பொருளாதார பாதிப்பு இருந்தது. இது முதலீடு, உற்பத்தி, வேலைவாய்ப்பை பாதித்துள்ளது. ரஷியா - உக்ரைன் போா் உலகம் முழுவதும் விநியோக சங்கிலியை சீா்குலைத்துள்ளது. எனவே, ரிசா்வ் வங்கி எவ்வளவு விரைவில் பணவீக்கத்தை தனது வரம்புகளுக்குள் கொண்டு வர முடியும் என்பதை நாம் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com