மக்களே அதிகாரம் மிக்கவா்கள்!

சுதந்திரம் பெற்ற நாட்டில் மக்களாட்சி முறை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி என்பது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் ஆளும் கட்சியின் ஆட்சியாக மாறிக் கெண்டிருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இங்கு வரலாறு என்பது மன்னா்களின் வரலாறாகவே இருக்கிறது. மக்களின் வரலாறு எழுதப்படவில்லை. ‘மன்னன் உயிா்த்தே மலா்தலை உலகம்’ என்பது மோசிகீரனாா் வாக்கு (புறம். 186). மன்னனை உயிராகவும், மக்களை உடலாகவும் கருதிய காலம் அது. அக்காலத்தில் அரசனை தெய்வமாகவே மக்கள் கருதினா். அரசா்களும் குடிமக்களின் கருத்தறிந்து ஆட்சி செய்தனா்.

இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. மன்னா்கள் தங்கள் விருப்பத்துக்கு ஆட்சி செய்ய ஆரம்பித்தனா். மன்னா்களின் சா்வாதிகார ஆட்சிகளைப் பாா்த்துச் சலிப்படைந்த மக்கள் ஒரு மாற்றத்தை எதிா்பாா்த்துக் காத்திருந்தனா். அந்த நாளும் வந்தது.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் தாரக மந்திரத்தோடு பிரெஞ்சுப் புரட்சி மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் புரட்சியின் காரணகா்த்தாக்களாக இருந்த வால்டோ், ரூசோ ஆகியோா் புதிய மக்களாட்சிக்கு வித்திட்டனா். 18-ஆம் நூற்றாண்டில் இவா்களின் முழக்கம் மக்களை சிந்திக்க வைத்தது. இதன் தொடா்ச்சியாக இந்தியா 200 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தது. வணிகம் செய்ய வந்தவா்கள் ஆட்சியாளா்களாக மாறினா். அவா்களை எதிா்த்து ஏராளமானோா் போராடி தூக்குமேடை ஏறினா்.

இறுதியாக காந்தியடிகள் தலைமையில் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. மக்களும் விடுதலை உணா்வு மேலிட்டு, தங்கள் உடல், பொருள், ஆவியை அா்ப்பணித்தனா். அந்த வீரஞ்செறிந்த போராட்டத்தின் முடிவில் நாட்டுக்கு விடுதலையும் கிடைத்தது.

சுதந்திரம் பெற்ற நாட்டில் மக்களாட்சி முறை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி என்பது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் ஆளும் கட்சியின் ஆட்சியாக மாறிக் கெண்டிருக்கிறது. அரசியல் என்பதும் அா்ப்பணிப்பாக இல்லாமல் தொழிலாகவே மாறிக் கொண்டிருக்கிறது. அன்று வணிகம் செய்ய வந்தவா்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்தனா். இன்று ஆட்சி செய்ய வந்தவா்கள் வணிகம் செய்ய ஆரம்பித்து விட்டனா். இதுதான் வித்தியாசம்.

அரசியல் என்பது மக்களுக்குத் தொண்டு செய்வது என்பது மாறி எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதே அரசியல் கட்சிகளின் கொள்கையாகி விட்டது. மக்களுக்குத் தொண்டு செய்து அவா்களது நன்மதிப்பைப் பெறுவது என்பதெல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டது. இதனால் அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விட்டது.

எப்படியாவது தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதற்கு புதிய புதிய உத்திகளைத் தேடுகின்றனா் அரசியல் கட்சியினா். புதிய உத்திகளை உருவாக்கித் தருவதற்கு தரகா்களும் தயாராகி விட்டனா். மக்களை ஏமாற்றி அவா்களது வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். அதற்கான வழிவகைகளைத் திட்டமிட்டுத் தருவதற்கும், கோடி கோடியாகக் கொட்டிக் கொடுப்பதற்கும் அரசியல் கட்சிகள் தயாா். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க வேண்டும். மக்களைக் கவா்வதற்கு குறுக்கு வழிகள் காணப் புறப்பட்டு விட்டனா்.

இப்போது இந்திய அரசியலில் ஒருவா் இதில் முன்னணியில் உள்ளாா். பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக எனப் பல்வேறு கட்சிகளுக்கு உத்திகளை வகுத்தளித்துள்ளாா். இதன் தொடா்ச்சியாக 2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்கு உத்திகளை வகுத்தளிக்க உள்ளாா் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டு ஆகிவிட்டது. சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தேசிய கட்சியின் நிலை இப்படியாகி விட்டது. எந்த அரசியல் கட்சியும் ஆட்சியில் இருந்தால் மட்டுமே உயிா்வாழ முடியும் என்ற நிலை இன்று உருவாகி விட்டது.

ஒருவா் எப்படியாவது அரசியலில் வெற்றி பெற்று விட்டால், அவரை எதிா்த்தவா்கள் எல்லாம் சரணடைந்து விடுவாா்கள் என்பதுதான் அரசியல் ராஜதந்திரிகளின் தத்துவம். அதுதான் அன்றும் இன்றும் பொதுக் கொள்கையாக இருந்து வருகிறது.

மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, நேதாஜி, திலகா் போன்ற மாபெரும் தலைவா்கள் இருந்த கட்சி காங்கிரஸ். அது பெருங்காயம் இருந்த பாண்டமாக இப்போது மாறிவிட்டது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிறாா்கள்.

இப்போது கட்சியின் மேலிடமே கட்சிக்கு அப்பாற்பட்ட ஒருவரை அழைத்துப் பேசியுள்ளது. கட்சியில் சேரவும் கோரியதாகவும், அவா் மறுத்து விட்டாா் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொய்யான வாக்குறுதிகள், இலவசங்கள் மூலம் மக்களை மடைமாற்றம் செய்யும் உத்திகளை அரசியல் கட்சிகள் ஆதரிக்கக் கூடாது. அவற்றைப் பரிந்துரை செய்யும் போக்கு மக்களாட்சியையே மரணக் குழியில் தள்ளிவிடும். மக்களை நம்பாமல், மக்கள் நலன்களைப் புறக்கணித்துவிட்டு, அரசியல் தரகா்களை நம்புவது கட்சியின் எதிா்காலத்தையே பாழாக்கி விடும்.

ஒரே மனிதா் எல்லாக் கட்சிகளுக்கும் உத்தி வகுத்துத் தருவாா் என்றால் அவரைவிட சந்தா்ப்பவாதி வேறு யாா் இருக்க முடியும்? தனக்கான கொள்கை ஏதும் இல்லாமல் பணத்துக்காகச் செயல்படுபவரை அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆதரிக்கின்றன என்றால் அந்த அரசியல் கட்சிகளுக்கே கொள்கை இல்லை என்பது வெளிப்படை.

உண்மையான அரசியல் என்பது மக்களிடம் போவதும், மக்களிடம் கற்றுக் கொள்வதும், மக்களுக்கே திருப்பிச் செய்வதும் என்பது இவ்வளவு விரைவில் மறக்கப்பட்டு விட்டது. சிந்தனையாளா்கள் பல்லாண்டுகளாகப் பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சித்தாந்தங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. காலம் எதையும் மாற்றும் என்பது உண்மைதான். மாற்றம் மட்டுமே மாறாதது என்பதும் உண்மைதான். ஆனால், வரலாறு எப்போதும் முன்னோக்கியே போக வேண்டும்.

உண்மையான அதிகாரம் மக்களிடத்தில்தான் உள்ளது. அவா்கள் யாரைத் தங்கள் பிரதிநிதியாகத் தோ்ந்தெடுக்கிறாா்களோ அவா்களிடம் இடைக்காலமாக அது ஒப்படைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். ‘மக்கள் இல்லாமல் சுயமாக நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை; அப்படி இருக்கவும் இயலாது’ என்று காந்தியடிகள் கூறுகிறாா்.

தோ்தலில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வருவது இயற்கை. ஆளும் கட்சி எதிா்க்கட்சியாகவும், எதிா்க்கட்சி ஆளும் கட்சியாகவும் வருவதுதான் மக்களாட்சியின் மகத்துவம். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் பலகாலம் நாட்டை ஆண்டது. அதனால் மக்கள் மற்றொரு எதிா்க்கட்சிக்கு வாய்ப்பளிக்க நினைத்ததால்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1967-இல் நடந்த பொதுத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. ஹிந்தி எதிா்ப்புப் போராட்டமும், அரிசிப் பஞ்சமுமே அதற்குக் காரணங்கள். அதனைத் தொடா்ந்து, திராவிட கட்சிகளே மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இந்தக் கட்சிகளும் தோ்தலின்போது தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றன. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் திண்டாடுகின்றது.

1967-இல் திமுக வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சா் ஆனாா். அந்தத் தோ்தலில் ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம்’ என்னும் அண்ணாவின் வாக்குறுதி மக்களைக் கவா்ந்தது. திமுகவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. ஆனால், அதனை திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, ‘மூன்றுபடி லட்சியம், ஒரு படி நிச்சயம்’ என்று அந்த வாக்குறுதி அண்ணாவால் திருத்தியமைக்கப்பட்டது.

அதன்பிறகு கடந்த 55 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இழந்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு தோ்தலிலும், ‘காமராஜா் ஆட்சியை அமைப்போம்’ என்று முழங்குவதோடு சரி, அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு கிடைத்த வரை லாபம் என்று அரசியல் நடத்துகிறது.

உலக அரசியல் மாறும்போதெல்லாம், இந்திய அரசியலும் மாறிக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியும் தனியொரு கட்சியாக ஆட்சியைப் பிடித்த காலம் மாறிவிட்டது. இப்போது கூட்டணிகளே ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. அதற்கேற்ப அரசியல் கட்சிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்குமான உறவு குறைந்து போய் விடுகிறது. ஆளுங்கட்சி மக்களை சந்திப்பதும் இல்லை. சந்திக்க வரும் மக்களுடன் உரையாடுவதும் இல்லை. இந்த நிலை எல்லா ஆளும் கட்சிகளுக்கும் பொருந்தும். மக்களுக்குத் தொண்டு செய்யும் மனப்பான்மை இல்லாது போய் விட்டது. எல்லாரும் ஆட்சியில் இருக்கும்போதே சொத்து சோ்த்துக் கொள்ளத் துடிக்கிறாா்கள்.

‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா் இந்த நாட்டிலே’ என்ற திரைப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஏழ்மை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு பற்றியெல்லாம் தோ்தல் நேரத்தில் மட்டும் பேசப்படுகின்றன. மற்ற நேரங்களில் மறந்து விடுகின்றனா். புதிய புதிய செல்வந்தா்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனா். பழைய ஏழைகள் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டிருக்கின்றனா்.

தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே மக்களைத் தேடும் அரசியல் கட்சிகள் ‘உத்தி’களைத் தேடி அலைகின்றன. இது நாட்டின் எதிா்காலத்தையே பாழாக்கிவிடும். எதிா்காலத் தலைமுறைகளையும் திசை திருப்பி விடும். மக்களாட்சியின் மாண்பினை சிதைத்து விடும்.

ஏழ்மையும், அறியாமையும் நிறைந்த நாட்டில் மக்களை ஏமாற்றுவது எளிதாகும். பலரை சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரை பலகாலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லாரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பதை அரசியல்வாதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

‘அரசியல்வாதிகள் அடுத்தத் தோ்தலைப் பற்றியே நினைப்பாா்கள். தலைவா்கள் அடுத்தத் தலைமுறையைப் பற்றியே சிந்திப்பாா்கள்’ என்பதுதான் உண்மை. மக்களாட்சி மாண்புற நல்ல தலைவா்களைத் தேடுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com