அசதிக்குச் சுடர்தந்த தேன்

அசதிக்குச் சுடர்தந்த தேன்

 உரைவேந்தரின் திருமகன் நாவேந்தர் ஒளவை நடராசன், வெளியூர்ப் பயணங்களின்போது - அது வானொலி நிகழ்ச்சியாக இருந்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசியல் மேடையாக இருந்தாலும், தமிழ் மன்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் - என்னை உடனழைத்துக்கொண்டு செல்வார். நிகழ்ச்சியில் தான் பேசப் போவது பற்றி என்னுடன் விவாதிக்கும் பழக்கமுடையவர் அவர். மாற்றுக் கருத்துகளைக் கவனத்துடன் காது கொடுத்துக் கேட்பார். அவருடன் பேசுவது எப்போதும் ஓர் அலாதியான மகிழ்ச்சியைத் தரும்.
 வயதை மீறிப் பொங்கும் இளமை, காலத்தால் மங்காத கூர்மை, புதியன தேடிக் கொண்டேயிருக்கும் தணியாத ஆர்வம், எதிலும் ஆழம் அகலம் காணும் அறிவின் விரிவு, நடைமுறை வாழ்வின் நெளிவு சுளிவுகளில் கரைகண்ட கூரிய புலமை.... ஐயா ஒளவை பற்றி இப்படி எத்தனையோ சொல்லி வியக்கலாம்.
 பழந்தமிழ்ப் பாடல்களின் சிறப்பைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால், அவருக்குக் காலம் போவதே தெரியாது. ஒருநாள் அவருக்கு நல்ல காய்ச்சல். "ஏதாவது ஒரு சங்கப்பாடல் சொல்லுங்களேன்' என்றார். "அகமா புறமா சார்' எனக் கேட்டேன். "புறநானூற்றிலிருந்து ஒரு பாட்ட எடுத்து விடுங்க' என்றார்.
 உடையன் ஆயின் உண்ணவும் வல்லன் கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும் மடவர் மகிழ்துணை நெடுமான் அஞ்சி என்றேன்.
 "பலே சோழா! சொல்லு' என்றார்.
 "பலே பாண்டியான்னுதானே பாரதியார் சொல்லுவார்னு சொல்லுவாங்க. நீங்க என்ன இப்படிச் சொல்றீங்க' என்றேன்.
 "எத்தன வாட்டி நான் உங்களுக்குச் சொல்லியிருக்கேன். எதைச் சொன்னாலும் நாம சொந்தமா ஒரு சொல்லாவது சேர்த்துச் சொல்லணும். கிளிப்பிள்ளைப் பேச்சு எனக்கு பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியாதா? நீங்க திருவாரூர்க்காரர்தானே, அப்புறமென்ன? மீதிப் பாடலையும் கணீர்னு சொல்லுங்க ராஜா' என்றார்.
 இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
 தோன்றாது இருக்கவும் வல்லன் மற்றதன்... என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்து, கான்றுபடு கனைஎரி போலத் தோன்றவும் வல்லன் தான் தோன்றும் காலே என்று பாட்டை முடித்துவிட்டார்.
 "புறநானூறில இது எத்தனாவது பாட்டு ராஜா' என்று கேட்டார்.
 ஐயோ! இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று எனக்கு எப்படித் தெரியும்?
 "என்ன ராஜா முழிக்கிறீங்க? 315-ஆம் பாடலாச்சே இது' என்றார்.
 அது ஒரு பாடம். அவர் சொல்லிக் கொடுக்கும் முறை அப்படித்தானிருக்கும். அதற்கப்புறம் எந்த இலக்கியத்தில், எந்தப் பாடலை நான் படித்தாலும், இன்றுவரை அது எங்கே வருகிறது, எத்தனையாவது பாடல் என்ற விவரங்களையும் சேர்த்தேதான் படித்துக்கொள்கிறேன்.
 "இப்ப தொட்டுப் பாருங்க என்னை' என்கிறார். அவர் கழுத்தில் கைவைத்துப் பார்க்கிறேன். இயல்பாக இருக்கிறது! காய்ச்சலைக் காணோம். சரியாகிவிட்டார். அவர் வாய் முணுமுணுக்கிறது. "தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்'.
 என்னை நிறையப் பாடல்களைச் சொல்லச் சொல்லிக் கேட்பது அவர் இயல்பு. பல தருணங்களில், ஒரு பாடலின் தொடக்க அடிகளை அவர் சொன்னவுடன், அடுத்துவரும் அடிகளை நான் சொல்ல வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்.
 வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் மணிவயிரத் தோளன் என்று அவர் தொடங்கியதும், தான்நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்பதற்கு நாணான் என்று அடுத்த அடியை நான் சொல்லவேண்டும். அதற்கடுத்த வரியை அவர் சொல்வார். இறுதியை நான் சொல்லி முடிக்கவேண்டும்.
 இது செம்மையாக நடைபெற்றால், அவரைக் கையில் பிடிக்க முடியாது. அவ்வளவு உற்சாகத் துள்ளலுடன் உரையாடுவார்.
 அவரைப் பார்க்கப் போவதாயிருந்தால், புதிதாகச் சில பாடல்களைத் தேடிப்பிடித்துப் படித்துக் கொண்டுதான் போவேன். அவரை வியக்க வைப்பதும், அவர் வாயால் உண்மையான ஒரு பாராட்டுச் சொல்லைப் பெற்றுவிடுவதும் எனக்கு ஒரு சவால். அதைப் பெரும்பாலும் சமாளித்துத் தப்பிவந்திருக்கிறேன் என்பதுதான் என் நிறைவு.
 எத்தனையோ பெரிய பெரிய இடங்களுக்கு என்னை உடனழைத்துப் போயிருக்கிறார். "நான் அவரைப் பார்த்துட்டு வரேன். நீங்க வெளியில கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ராஜா' என்று என்னிடம் ஒருபோதும் அவர் சொன்னதில்லை.
 ஒரு பெரும் செல்வந்தரின் வீட்டுத் திருமண விழா. விழா முடிந்து ஊரின் பிரபல அரசியல்வாதியைப் பார்க்கப் போனார். "நீங்க போங்க. நான் காரிலேயே காத்திருக்கிறேன்' என்று நான் சொன்னாலும், என்னை அவர் விடவில்லை. உள்ளே போனோம். அருமையான கவனிப்பு நடந்தது.
 கோதுமை அல்வா, காஃபி. சுமார் 50 வருடமாக, அவருக்குச் சுகர் இருக்கிறது. கவலையே படமாட்டார். இனிப்பை உண்டுவிட்டு, ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார்.
 அப்போது ஒரு வயதான பெண்மணி உள்ளே நுழைந்தார். முருகனைப் பற்றித் தான் ஒரு காவியம் பாடியிருப்பதாகவும், அதை ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க வேண்டும் என்றும் சொன்னாள். "30,000 போதுமா' என்று கேட்டார் அரசியல்வாதி. அந்தப் பெண்மணி வாயடைத்துப் போய்விட்டார். கண்களில் நீர் தளும்ப, "மிக மிக நன்றி ஐயா" என்று கையெடுத்துக் கும்பிட்டார். அவர் போன பிறகும், மாநில அரசியல் பற்றிக் கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் பிறகு விடைபெற்றுக்கொண்டு வந்தார்.
 இந்தச் சந்திப்பு முடிந்து வெளியில் வந்ததும், காரில் ஏறிக்கொண்டோம். ஒளவையிடம் நான் கேட்டேன். "என்ன சார் இது? இவ்வளவு நல்லவரா இருக்காரு. எவ்வளவு பெரிய மனசு' என்று நான் வியந்தேன்.
 ஒரு திருக்குறள் சொல்றேன், கேளுங்க.
 அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
 இல்லை பெறுவான் தவம்
 என்றாரே பார்க்கலாம்! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! "842-ஆம் திருக்குறள் ராஜா. வீட்டுக்குப் போய் நல்லா படிங்க' என்றார்.
 இப்படியும் ஒரு திருக்குறளா? அதற்குப் பின், அந்த அரசியல்வாதி பற்றி அவர் என்னிடம் என்ன சொன்னார் என்பது ரகசியம். அதை நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. முடிந்தால் நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்! நான் கண்ட மிகச்சிறந்த பின்நவீனத்துவவாதி டாக்டர் ஒளவை நடராசன் அவர்கள்தான்!
 
 கட்டுரையாளர்:
 முதல்வர்,
 மாநிலக் கல்லூரி, சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com