கேள்விக்குறியா விவசாயிகளின் எதிர்காலம்? இல்லை, இதோ இருக்கு தீர்வு..

கடனை தள்ளுபடி பண்ணுவதோ, வட்டி விகிதத்தை குறைப்பதோ விவசாயப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஆகாது.
கேள்விக்குறியா விவசாயிகளின் எதிர்காலம்? இல்லை, இதோ இருக்கு தீர்வு..

விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக்கோரும் விவசாயிகளின் கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், அரசாங்கம் விவசாயக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு சுமார் 20,339 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. யதார்த்தம் என்னவெனில், கடனை தள்ளுபடி பண்ணுவதோ, வட்டி விகிதத்தை குறைப்பதோ விவசாயப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஆகாது.

தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட முழுமையான, நிரந்தரமான விவசாயத் தீர்வு என்பதை இலக்காகக்கொண்ட, எங்கள் 15 வருட முயற்சியில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், எங்கள் கருத்தை இக்கட்டுரை மூலம் முன்வைப்பதை கடமையாகக் கருதுகின்றோம்.

விவசாயம் எதற்கு மிக முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவதில் ஏற்பட்டிருக்கிற குழப்பமே விவசாயப் பிரச்னைக்கான காரணம். விவசாயத்தை நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு முக்கியம் எனப் பார்ப்பதா, விவசாயம் சார்ந்த எழுபது கோடி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரம் சார்ந்த நாட்டின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு அத்தியாவசியம் எனக் கருதுவதா அல்லது விவசாயிகள் செய்யும் தொழிலாக, வியாபாரமாகப் பார்ப்பதா என்பதில் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை என்பதுதான் உண்மை.

சில விஷயங்களில் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்காகவும், சில இடத்தில் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாகவும், சில நேரத்தில் விவசாயிகள் செய்யும் தொழில் என்கிற கண்ணோட்டங்களில் பார்ப்பதனால், ஏற்படும் குழப்பமே இன்றைய விவசாயப் பிரச்னைக்கு அடிப்படை.

மழை தேவையான அளவு சரியான நேரத்தில் பெய்யுமா என உறுதியாகத் தெரியாது; விவசாயி தான் வாங்கும் விவசாயக் கடனை விவசாயத்துக்குத்தான் பயன்படுத்துகிறாரா, அதை முழுமையாகப் பயன்படுத்துகிறாரா என்பதை அறிவதற்கு வழிமுறையில்லை; அதிகபட்ச விளைச்சலுக்குத் தேவைப்படும் சிறந்த தகவல்கள், தரமான இடுபொருள்கள் அனைத்து விவசாயிகளுக்கும் (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்) எளிதில் கிடைக்கும் வழிமுறை இல்லை; எவ்வளவு மகசூல் கிடைக்கும், என்ன விலை கிடைக்கும், எவ்வளவு நிகர லாபம் கிடைக்கும் என்பதற்கான உத்திரவாதமும் இல்லை.

இவ்வளவு நிலையில்லாத்தன்மையைக் கொண்டிருக்கும் விவசாயத் தொழிலுக்கு, அரசாங்கம் வங்கிக் கடன் ஏன் வழங்குகிறது? ஏன் வழங்க வேண்டும்? விவசாயத்தை விவசாயியின் தொழிலாக, வியாபாரமாக மட்டும் பார்த்தால் இது சாத்தியமில்லை. இந்த இடத்தில் அரசாங்கம் விவசாயத்தை நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கான பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாகப் பார்க்கிறது. கிராமப்புறம் சார்ந்த பொருளாதாரமாக இன்னும் நாடு இருப்பதால், நாட்டின் முன்னேற்றத்துக்கான மூலதனமாகப் பார்க்கிறது. அதனால்தான், சுமார் பதினைந்து லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேலான அளவு நிதியை விவசாயத்துக்கு ஆண்டுதோறும் அரசு துணிந்து ஒதுக்குகிறது.

நாட்டின் முக்கிய சமுதாயத் துறைகளுக்குச் செய்யப்படும் முதலீடுகளுக்கு, செலவுகளுக்கு நேரடி வருமானத்தை அரசு எதிர்பார்ப்பதில்லை, எதிர்பார்க்கத் தேவையில்லை என்கிற பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையில், எல்லைப் பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்றவற்றின் வரிசையில், நாட்டின் உணவுப் பாதுகாப்பும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. அப்படியெனில், விவசாயக் கடனுக்கு வட்டி என்பதே தவறானதாகிறது. விவசாயம் பொய்த்துப்போகும்போதோ, விலை வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டமடையும்போதோ விவசாயக் கடனை வசூலிப்பதும்கூட தவறானதாகவே ஆகும். விவசாயத்தை விவசாயிகளின் தொழிலாக, வியாபாரமாக மட்டும் பார்க்கப்படுமேயானால், நிகர லாபம் உத்திரவாதமில்லாத தொழிலுக்குக் கடன் வழங்குவதே தவறு என்பது ஆகிவிடும்.
 

எனவே, நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தை பாதுகாத்தல், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்தல், கிராமப்புற பொருளாதாரம் சார்ந்த நாட்டின் வளர்ச்சி விகிதத்தை அதிகரித்தல் போன்ற மிக முக்கியமான விஷயங்களின் அடிப்படையாக இருக்கும் விவசாயத்தை, வெற்றிகரமாகக் கையாளத் தேவைப்படும் முயற்சிக்கான பெரும் பொறுப்பை அரசாங்கம் கையில் எடுத்துக்கொள்வதுதான் நியாயம். அதில் ஏற்படும் ஆபத்தை அரசாங்கம் சமாளிப்பதுதான் தர்மம். எளிதும்கூட. ஆனால் தற்போது விவசாயம் செய்வதில் உள்ள ஆபத்தின் பெரும்பகுதியை விவசாயிதான் ஏற்கிறார். இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். வெங்காயம் விலை அதிகரிக்கும்போது வெளிநாடுகளில் இருந்து அவசரநிலையில் இறக்குமதி செய்யும் அரசு, அதே வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கும், 50 பைசாவுக்கும் விற்கும்போது மௌனம் காக்கிறது; கண்டுகொள்ளாமல் விடுகிறது.  மிகக்குறைந்த விலை கிடைக்கும்போது எப்படி விவசாயியினால் கடனை திருப்பிச் செலுத்த முடியும்? இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு என்பது விவசாயிகளின் வாழ்க்கையை பணயம் வைத்து சாதிக்கப்படுவதாக இருக்கக்கூடாது.

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் தேவை, நல்ல தரம் மற்றும் அதிக உற்பத்தியைத் தரக்கூடிய விதைகள், உரம், உரிய விலை, விவசாயம் செய்வதில் உள்ள கடினத்தன்மையை இலகுவாக்குதல் மற்றும் வறட்சி, புயல் போன்ற இயற்கை சோதனைகளின்போது முழு இழப்பையும் ஈடுகட்டும்விதமான சிறப்பு பயிர்க் காப்பீடு என்பதே ஆகும். இவை விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் விதமான ஒரு முழு தீர்வை அரசு ஏற்படுத்திக்கொடுப்பது மட்டும்தான் நிரந்தரத் தீர்வாக அமையும். விவசாயிகள் தற்கொலைகள், போராட்டங்கள், உணவு விலை ஏற்றங்கள், உணவுத்தரமின்மை போன்ற துரதிஷ்டமான நிகழ்வுகள் நாட்டில் நிகழாது.

தகவல் தொடர்பு - தொழில்நுட்பம் சார்ந்த நிரூபிக்கப்பட்ட முழு தீர்வு ஒன்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலைகளுக்கும் இந்தத் தீர்வை எடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். சமர்ப்பிக்கப்பட்ட தீர்வின் சிறப்பை உணர்ந்து அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், விவசாய/விவசாயிகளின் பிரச்னையை தீர்ப்பதற்கு இந்தியத் தகவல் தொழில்நுட்பம் தயாராகவே உள்ளது.

‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’ 

என்கிற குறளுக்கு இணங்க, தமிழக தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் பதினைந்து ஆண்டுகால உழைப்பின் பலனாக உருவாக்கியிருக்கும் விவசாயத் தீர்வை அரசு ஏற்று செயல்படுத்த முன்வருமா?

Rm. திருச்செல்வம்
Originator & Project  Director
Mission IT-rural
Email: thiru@it-rural.com; thirurm@gmail.com
Mobile: 9840374266
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com