‘பெற்றோரைக் கொண்டாடுங்கள்’ அம்மா ஸ்ரீதேவி நினைவுகளில் கரைந்து மகள் ஜான்வி கபூர் எழுதிய உருக்கமான கடிதம்!

‘அம்மா, மனம் முழுதும் அரித்துக் கொண்டிருக்கிறது நீயில்லாத வெறுமை. எனக்குத் தெரியும் இனி நீயற்ற வெளியில் நான் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இப்போதும் நான் உனது அன்பை உணர்ந்து கொண்டே தான் இருக்கிறேன்.
‘பெற்றோரைக் கொண்டாடுங்கள்’ அம்மா ஸ்ரீதேவி நினைவுகளில் கரைந்து மகள் ஜான்வி கபூர் எழுதிய உருக்கமான கடிதம்!

ஜான்வியின் இன்ஸ்டாகிராம் கடிதம்...

‘அம்மா, மனம் முழுதும் அரித்துக் கொண்டிருக்கிறது நீயில்லாத வெறுமை. எனக்குத் தெரியும் இனி நீயற்ற வெளியில் நான் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இப்போதும் நான் உனது அன்பை உணர்ந்து கொண்டே தான் இருக்கிறேன். கவலைகளிலிருந்தும், வலிகளிலிருந்தும் என்னை மீட்டெடுக்க நீ எப்போதும் இருக்கிறாய் என உணர்கிறேன் நான். நான் கண்களை மூடிக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் எனக்குள்ளே சந்தோசமான நினைவுகளே ஊற்றெடுக்கின்றன அத்தனைக்கும் காரணம் நீ மட்டுமே! நீ எங்கள் வாழ்வில் கடவுள் எங்களுக்கு அளித்த ஆசிர்வாதம். நீ எங்களுடன் இருந்த காலம் முழுவதும் நாங்கல் கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களாக உணர்ந்திருந்தோம். ஆனால் நீ இந்த உலகத்துக்குப் பொருத்தமானவள் இல்லை எனக் கடவுள் நினைத்து விட்டார் அம்மா, நீ மிகவும் நல்லவள், மிக, மிக பரிசுத்தமானவள், உனக்குள்ளே எப்போதும் நிரம்பியிருந்தது அன்பு மட்டுமே! அதனால் தான் கடவுள் உன்னை இத்தனை சீக்கிரம் தன்னிடமே திரும்ப அழைத்துக் கொண்டார். குறைந்த காலத்துக்காவது உன்னை அம்மாவென அடைந்திருந்தது எங்களது பாக்கியம்.

என் நண்பர்கள் சொல்வார்கள், நான் எப்போதும் பூரணமான சந்தோசத்துடன் இருக்கிறேன் என்று, இப்போது உணர்கிறேன் அது அனைத்தும் உன்னால் என, யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தியதில்லை, எந்தப் பிரச்னையையுமே பெரிதாகக் கருதியதில்லை, எந்த நாளையுமே சோர்வாகவோ, வெறுமையாகவோ கடந்ததில்லை. ஏனென்றால் எங்களுடன் நீ இருந்தாய். நீ எங்களை மிக விரும்பி அன்பு செய்தாய். நான் எப்போதும் உன்னை மட்டுமே தேடிக் கொண்டிருந்ததால் எனக்கு நம்பிக்கைக்கும், பகிர்தலுக்குமாக வேறு யாருடைய தேவையுமிருந்ததில்லை. நீ என் ஆன்மாவின் ஒரு பகுதி. என் சிறந்த தோழி. எனது எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக இருந்தவளும் நீயே. நீ உன் முழு வாழ்வையும் எங்களுக்கெனத் தந்தாய். ஒவ்வொருநாளும் காலையில் நான் விழுத்தெழும் போது என் மனதில் தோன்றும் ஒரே ஆசை என்னால் நீ பெருமையுற வேண்டும் என்பதாகவே இருக்கும். நானுனது மகள் எனும் பெருமை தரத்தக்க எனது இந்த ஆசை நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும். ஏனெனில் நீ என்றென்றைக்குமாய் என்னுடன் இருந்து எனது ஆசையை நிறைவேற்றித் தருவாய். நீ இல்லாத இந்த வெறுமையிலும் என்னால் உனது இருப்பை உணர முடிகிறதே. நீ என்னுள்ளும், தங்கை குஷியினுள்ளும், அப்பாவினுள்ளும் முடிவே இன்றி நீக்கமற நிறைந்திருக்கிறாய். எங்களிடத்தில் நீ பதித்துச் சென்ற தடங்கள் வலிமையானவை. அந்த வலிமை எங்களை இனி வழி நடத்தும். ஆனால் அந்த வலிமை முழுமையானதாக இல்லாத போதும் நீயற்ற வெறுமையக் கடக்கவும் எங்களுக்கு நீயே தான் துணையிருக்கிறாய்.

எங்களுக்கு எல்லாமுமாக இருந்த அம்மாவே, ஐ லவ் யூ!

- இப்படி ஒரு உருக்கமான கடிதத்தை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் இன்று பதிவு செய்திருக்கிறார். தனது அம்மாவும், பிரபல நடிகையுமான ஸ்ரீதேவியின் மறைவு அவரது மூத்த மகளும், அறிமுகத் திரைப்பட வெளியீட்டுக்காக காத்திருக்கும் நடிகையுமான ஜான்வி கபூரை மனதளவில் மிக மோசமாகப் பாதித்திருக்கிறது. மார்ச் 7 ஜான்வியின் பிறந்தநாள். இதுவரை தாயுடன் கொண்டாடிய பிறந்தநாட்கள் பல என்றாலும் பிறந்தநாளும், தனது அறிமுகத் திரைப்படமும் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக திடீரென எதிர்பாராது துபையில் தன் அம்மா மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்து அவரால் இன்னும் மீளமுடியவில்லை. அந்த இழப்பின் வலியோடு ஜான்வி பதிவு செய்தது தான் இக்கடிதம். இதில் வேடிக்கையான ஒற்றுமை என்னவென்றால், ஜான்வி கபூரின் அறிமுகத் திரைப்படமான ‘தடக்’ வரும் ஜூலை மாதம் வெளியிடப்படவிருக்கிறது. தடக் என்றால் இந்தியில் ‘திடீர் அதிர்ச்சி’ என்று பொருள். ஜூலையில் வெளிவரவேண்டிய தடக் கடந்த வாரமே வெளிப்பட்டு ஸ்ரீதேவி குடும்பத்தையே மொத்தமாக அலைக்கழித்து ஓய்ந்திருப்பது தான் தற்போதைய நிரந்தர சோகம்.

ஜான்வி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது தாயின் நினைவாக அவரது ரசிகர்களான நம்மிடமும் ஒரு வேண்டுகோளை எழுப்பியிருக்கிறார்.

“எனது பிறந்தநாள் பரிசாக நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது இது ஒன்று மட்டுமே! எனது அம்மாவின் ரசிகர்களான நீங்கள் அனைவரும் உங்களது பெற்றோரைக் கொண்டாடுங்கள், பெற்றோரிடம் பணிவு கலந்த மரியாதையுடன் இருங்கள், உங்களது அன்பை உங்கள் பெற்றோர் உணர்ந்து கொள்ளுமாறு நடந்து கொள்ளுங்கல். உங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். என் அம்மாவின் மீதான உங்களது அன்பின் பேரில் நான் இந்த வேண்டுகோளை உங்களிடம் விடுக்கிறேன். என் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்” - என்றும் ஜான்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த வாரம் துபையில் நடைபெற்ற தனது குடும்ப உறவினரின் திருமண விழாவொன்றில் கலந்து கொள்ள துபை சென்ற ஸ்ரீதேவி, அங்கே குளியல் தொட்டியில் சுய நினைவின்றி மயக்கமுற்று விழுந்ததில் மீண்டு எழ வாய்ப்பின்றி நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்ற ஒரே தமிழ் நடிகையான ஸ்ரீதேவியின் இந்த திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல இந்தியாவில் ஸ்ரீதேவி ரசிகர்களாக இருந்த அத்தனை உள்ளங்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியது. நேற்று முன் தினம் மும்பையில் அவரது இறுதிச் சடங்கு முடிவடைந்த நிலையில் தாயின் மறைவை ஜீரணிக்க இயலாத மகளாக ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவு செய்துள்ள இந்த உருக்கமான கடிதமும், வேண்டுகோளும் மீண்டுமொருமுறை ஸ்ரீதேவி ரசிகர்களின் விழிகளில் கண்ணீரைத் துளிர்க்கச் செய்வதாக இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com