ஜெய்ப்பூரில் ராஜஸ்தான்-தில்லி இடையே திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய ராஜஸ்தான் 191-6 ரன்களையும், பின்னர் ஆடிய தில்லி 193-4 ரன்களையும்
குவித்தன. ரஹானே அபாரமாக ஆடி 105 ரன்களை விளாசினார். பதிலுக்கு தில்லியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிறப்பாக ஆடி 78 ரன்களை எடுத்தார்.
ரிஷப் பந்த் உலகக் கோப்பை அணியில் இடம் பெறாதது குறித்து ரிக்கி பாண்டிங் கூறியது, 'உலகக் கோப்பை அணியில் இடம் பெறாததால் அவர் எப்படி ஏமாற்றமடைந்தார் என்பது எனக்குத் தெரியும். உலகக் கோப்பையில் அவர்ருடைய ஆட்டத் திறனை பார்க்க ஆவலாக இருந்தேன். என் கருத்துப்படி, இந்தியா தவறான தேர்வு செய்ததாக நான் நினைக்கிறேன். இங்கிலாந்த் களத்தில் தன் அபாரமான திறனால் சூழ்நிலையை முற்றிலும் வசப்படுத்தியிருப்பார் என்று நான் நினைக்கிறேன்’ என்று ஒரு பேட்டியில் பாண்டிங் கூறினார்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தான் இடம் பெறாதது வேதனை தருகிறது என அண்மையில் ஒரு பேட்டியில் ரிஷப் பந்த் கூறியுள்ளார். 'எங்கள் அணியை வெல்லச் செய்தது மகிழ்ச்சி தருகிறது. எனினும் நான் பொய் கூற விரும்பவில்லை. உலகக் கோப்பை அணியில் இடம் பெறாதது மனதுக்கு வேதனையாக உள்ளது. எனது திறமை மீது நம்பிக்கை வைத்து ஆடுகிறேன். இந்த பிட்ச் எவ்வாறு இயங்கும் என அறிந்து அதற்கேற்ப ஆடினேன். ஒவ்வொருவரும் தங்கள் பங்கை உணர்ந்து செயல்பட வேண்டும்'.