புது தில்லி: சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரி பல உயர் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ஃபேஸ்புக் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தனிப்பட்ட ஒரு குற்றத்துக்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? என்ற கேள்வி எழுப்பியதோடு, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு டிவிட்டர், கூகுள், யூடியூப், மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஃபேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு குற்றங்கள் நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுள்ளது.
ஃபேஸ்புக் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் உண்மைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், பயனாளிகளின் விவரங்களுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.