நித்தியானந்தாவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ்! இதுபோல 8 நிறத்தில் நோட்டீஸ் இருக்கிறது!
By C.P.சரவணன், வழக்குரைஞர் | Published On : 06th December 2019 01:15 PM | Last Updated : 06th December 2019 01:15 PM | அ+அ அ- |

நித்தியானந்தாவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ்
பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தாவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க குஜராத் மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்தக்கோரும் புளூ கார்னர் நோட்டீஸை நித்தியானந்தாவுக்கு வழங்க வேண்டும் என மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்தல் போன்ற குற்றங்களுக்காக நித்தியானந்தாவை தேடி வருவதாகவும், அவரின் இருப்பிடம் தெரியாத நிலையில், புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலிடம் பெற்றுத் தருமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புளூ கார்னர் நோட்டீஸ் ?
எல்லைகளைத் தாண்டிய நடவடிக்கைகளுக்காக சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போல் 8 வகையான நிறங்களில் நோட்டீஸ் பிறப்பிக்கும்.
மேலும் படிக்க.. நித்யானந்தா இருப்பிடத்தை கண்டறிய‘இன்டா்போல்’ உதவியை நாடுகிறது குஜராத் போலீஸ்
சிவப்பு அறிவிப்பு(Red Corner Notice)
ஒரு நீதித்துறை அல்லது ஒரு சர்வதேச தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டு தேடப்படும் நபரின் இருப்பிடம் / கைது செய்யப்பட அளிக்கப்படும் அறிவிப்பு.
நீல அறிவிப்பு(Blue Corner Notice)
ஒரு குற்றவியல் விசாரணையில் தேடப்படும் ஒரு நபரைக் கண்டுபிடிக்க, அடையாளம் காண அல்லது பெற கொடுக்கப்படும் அறிவிப்பு.
பசுமை அறிவிப்பு (Green Corner Notice )
அந்த நபர் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டால் ஒரு நபரின் குற்றச் செயல்களைப் பற்றி எச்சரிக்கை செய்யும் அறிவிப்பு.
மஞ்சள் அறிவிப்பு (Yellow Corner Notice )
காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிப்பது அல்லது தன்னை / தன்னை அடையாளம் காண முடியாத ஒரு நபரை அடையாளம் காண கொடுக்கப்படும் அறிவிப்பு.
கருப்பு அறிவிப்பு (Black corner Notice)
அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைப் பெற கொடுக்கப்படும் அறிவிப்பு.
ஆரஞ்சு அறிவிப்பு(Orange Corner Notice)
ஒரு நிகழ்வு, ஒரு நபர், ஒரு பொருள் அல்லது நபர்கள் அல்லது சொத்துக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தை குறிக்கும் ஒரு செயல்முறை பற்றி எச்சரிக்கை.
ஊதா அறிவிப்பு (Purple Corner Notice)
நடைமுறைகள், பொருள்கள், சாதனங்கள் அல்லது குற்றவாளிகள் பயன்படுத்தும் மறைவிடங்கள் பற்றிய தகவல்களை வழங்க அறிவிப்பு.
இன்டர்போல்-ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு அறிவிப்பு (Interpol-United Nations Security Council Special Notice)
இன்டர்போலின் உறுப்பினர்களுக்கு ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் ஐ.நா. தடைகளுக்கு உட்பட்டது என்பதை தெரிவிக்கும் அறிவிப்பு.
அந்த வகையில், நித்தியானந்தாவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க மாநில குற்றவியல் விசாரணை துறையை அகமதாபாத் காவல்துறை நாடியுள்ளது. இதற்கிடையில், கைலாசா என்ற இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி ஈகுவேடர் தீவு ஒன்றில் நித்தியானந்தா பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.